Dec 07, 2020 02:51 PM

கொரோனாவால் பாதிக்கப்பட்ட பிரபல சீரியல் நடிகை மரணம்! - அதிர்ச்சியில் திரையுலகம்

கொரோனாவால் பாதிக்கப்பட்ட பிரபல சீரியல் நடிகை மரணம்! - அதிர்ச்சியில் திரையுலகம்

இந்தியாவின் புதிய கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. அதேபோல், மாநிலம் அளவிலும் கொரோனாவில் தாக்கம் குறைந்து வருகிறது. சென்னையிலும் கொரோனாவின் பாதிப்பு குறைந்து வருவதால், மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறார்கள்.

 

இதற்கிடையே, தமிழகத்தில் முக்கிய பிரமுகர்கள் சிலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். பிரபல சீரியல் நடிகையான கெளசல்யா செந்தாமரை, ‘அன்பே வா’ சீரியலில் நடித்துக் கொண்டிருந்த போது கொரோனாவால் பாதிக்கப்பட்டார். அவரது உடல் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியான நிலையில், தற்போது அவர் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல், தமிழக காங்கிரஸ் தலைவரும் சமீபத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொண்டு வருகிறார்.

 

இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனாவால் பாதிக்கப்பட்ட பிரபல இந்தி சீரியல் இளம் நடிகை ஒருவர், இன்று சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

’யா ரிஷ்தா கியா கேக்லதா ஹய்’, ‘தேரா யார் ஹூன் மெயின்’ உள்ளிட்ட தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பிரபலமானவர் திவ்யா பட்நாகர். 34 வயதாகும் இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில், அவருக்கு தொற்று இருப்பது உறுதியானது.

 

Divya Bhatnagar

 

இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட திவ்யா பட்நாகருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும், அவரது உடல் நிலை கவலைக்கிடமானது. அதனால், அவசர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு செயற்கை சுவாச கருவி உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று சிகிச்சை பலன் இன்றி அவர் உயிரிழந்தார்.

 

இளம் நடிகை ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் இந்தி சீரியல் மற்றும் திரையுலகில் பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.