Mar 14, 2022 05:02 PM

என்னை வைத்து காதல் படம் எடுக்க தைரியம் வேண்டும் - நடிகர் பிரபாஸ் பேச்சு

என்னை வைத்து காதல் படம் எடுக்க தைரியம் வேண்டும் - நடிகர் பிரபாஸ் பேச்சு

’பாகுபலி’ படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து பிரபாஸ் நடிக்கும் படங்கள் மீது இந்தியா முழுவதும் எதிர்ப்பார்ப்பு ஏற்படுகிறது. அந்த வகையில், பிரபாஸின் நடிப்பில் உருவாகியுள்ள ‘ராதே ஷியாம்’ படத்தின் மீதும் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்துள்ள இப்படத்தில் சத்யராஜ் முக்கிய கதப்பாத்திரம் ஒன்றில் நடித்திருக்கிறார். 

 

யுவி கிரியேஷன்ஸ் சார்பில்  வம்சி மற்றும் பிரமோத் தயாரிப்பில், ராதா கிருஷ்ண குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என்று பல மொழிகளில் வரும் மார்ச் 11 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தின் தமிழ் பதிப்பை ரெட் ஜெயண்ட் மூவிஸ் சார்பில் உதயநிதி வெளியிடுகிறார்.

 

இந்த நிலையில், இப்படத்தின் தமிழ் பதிப்பின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று இரவு சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் நடைபெற்றது. இதில் பிரபாஸ், பூஜா ஹெக்டே,சத்யராஜ், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துக்கொண்டார்கள்.

 

நிகழ்ச்சியில் நடிகர் பிரபாஸ் பேசுகையில், “சத்யராஜ் என் செல்ல கட்டப்பா, அவருடன் மிர்ச்சி படம் முதல் முறையாக பண்ணினேன் அது சூப்பர் டூப்பர் ஹிட், அதன் பிறகு பாகுபலி, இப்பொது இந்த படத்தில் ஒரு அருமையான பாத்திரம் செய்துள்ளார். இது அருமையான காதல் கதை. ஆக்சனும் இருக்கிறது. காதல் கதைக்கு மியூசிக் முக்கியம் ஜஸ்டின் அற்புதமான இசையை தந்துள்ளார். இந்த படத்தின் நாயகன் மனோஜ் சார் தான், என்னை அத்தனை அழகாக காட்டியுள்ளார். எல்லோரும் விஷுவலை பாராட்டுகிறார்கள் அவர்களுக்கு நன்றி. எல்லாம் மனோஜ் சாருக்கு தான். இந்தப்படத்தில் பூஜா மிக அழகாக இருக்கிறார் கெமிஸ்ட் ரி ஒர்க் அவுட் ஆகியுள்ளது. பிரமோத் என்னை வச்சு லவ் ஸ்டோரி எடுத்திருக்கிறார் நிறைய தைரியம் இருக்கனும், இயக்குநர் பாகுபலிக்கு முன்பே இந்த கதையை சொன்னார். எப்படி என்னை காதல் கதையில் யோசித்தார் என தெரியவில்லை. 5 வருடம் நீண்ட பயணம் ராதே ஷ்யாம் மிக நல்ல படமாக இருக்கும். உங்கள் அனைவருக்கும் பிடிக்கும்.” என்றார்.

 

நடிகை பூஜா ஹெக்டே பேசுகையில், “நாங்கள் கடந்த 5 வருடங்களாக உழைத்த உழைப்பு உங்களுக்காக உருவாக்கிய காதல் கதை உங்களிடம் வந்துள்ளது. இந்த கடின காலத்தை தாண்டி, இந்த படத்தை எடுத்து வந்துள்ளோம், பிரமோத் மிக பிரமாண்டமாக படத்தை உருவாக்கியிருக்கிறார், ராதே பாத்திரம் எனக்கு மிக சிறப்பானதொரு பாத்திரம். சத்யராஜ் சாருடன் காட்சி இல்லாதது வருத்தம், பிரபாஸ் மிகச்சிறப்பான ஒத்துழைப்பு தந்தார்,  மனோஜ் உடன் பீஸ்ட் படமும் செய்கிறேன். இந்தப்படத்தை மிக அழகாக எடுத்துள்ளார். உங்களுக்கு கண்டிப்பாக பிடிக்கும்.” என்றார்.

 

நடிகர் சத்யராஜ் பேசுகையில், “பிரபாஸை நாங்கள் டார்லிங் என சொல்வோம், பூஜா டார்லிங்கின் டார்லிங், கடவுள் நம்பிக்கை இல்லாமல் கைரேகை நிபுணராக நடித்திருக்கிறேன் என கேட்கிறார்கள், பெரியார் படத்தில் நான் வாழ்ந்திருக்கிறேன், ஜெர்ஸி படத்தில் கிரிக்கெட் கோச்சாக நடித்திருக்கிறேன் அப்படிதான் எடுத்து கொள்ள வேண்டும், நான் ஹீரோவாக நடிக்கும் போது 25 ஹீரோயினை கல்யாணம் செய்திருக்கிறேன், அதை என்ன சொல்வது. நடிப்பை நடிப்பாக மட்டும் எடுத்துகொள்ள வேண்டும். இந்தப்படம் மிக அழுத்தமான காதல் கதை, பிரபாஸ் பறந்து சண்டை போடுவார் என்றால், இதில் கப்பலே பறக்கிறது. இங்கு ஜேம்ஸ் கேமரூன் தான் வந்திருக்க வேண்டும். அவ்வளவு பிரமாண்டமாக இருக்கிறது. பிரபாஸின் அழகுக்காகவே எடுக்கப்பட்ட படம் இது ஒவ்வொரு காட்சியும் அவ்வளவு அழகாக இருக்கிறது. பாகுபலிக்கு பிறகு பிரபாஸுக்கு முக்கியமான பொறுப்பு வந்துள்ளது. பான் இந்தியா என்று எல்லா ஸ்டேட்டிலிருந்து ஒரு நடிகரை போட்டு எடுக்கிறார்கள், ஆனால் இந்தப்படம் உண்மையில் பான் இண்டர்னேஷனல் படம். உங்கள் அனைவருக்கும் பிடிக்கும்.” என்றார்.

 

Radhe Shyam

 

உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், “ராதே ஷியாம் குழுவினருக்கு எனது வாழ்த்துக்கள், ரெட் ஜெயண்ட் மூவீஸ் ரிலீஸ் பண்ண எப் ஐ ஆர் படத்தின் சக்சஸ் மீட்டிற்கே என்னால் வரமுடியவில்லை, என் படம் இன்று தான் ஆரம்பித்துள்ளது கட் அடித்துவிட்டு தான் இங்கு வந்திருக்கிறேன். இந்த படம் 2 மாதம் முன்னாடியே பார்த்தேன் அப்போது 3 1/4 மணி நேரம் ஓடியது, படம் ஒவ்வொரு காட்சியும் டிரெய்லர் மாதிரியே பிரமாதமாக இருந்தது. பிரபாஸ் உடைய ஃபேன் நான், பாகுபலிக்கு முன்னாடியே உங்களை பிடிக்கும். பூஜா இங்கு அரபிக்குத்து குத்தினார்,  இந்தப்படத்திலும் கலக்கியிருக்கிறார். சத்யராஜ் சார் ஒரு வித்தியாசமான ரோல் செய்துள்ளார். கடைசி காட்சியில் ஒரு அட்டகாசமான ஃபைட் இருக்கிறது. இந்தப்படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் மூலம் பிரமாண்டமாக வெளியிடுகிறோம். பார்த்து ரசியுங்கள்.” என்றார். 

 

இயக்குநர் ராதா கிருஷ்ண குமார் பேசுகையில், “பிரபாஸ் உண்மையில் வெரி க்யூட் பாய், அவர் ரொமான்ஸான ஆள் அவரிடம் பழகியபோது இப்படத்திற்கு அவர் கச்சிதமாக பொருந்துவார் என தோன்றியது. சத்யராஜ் சாரிடம் இந்த கதை சொன்ன போது என்னைப்பற்றி உங்களுக்கு தெரியுமா எனக்கேட்டார், அவரது நம்பிக்கைகள் பற்றி தெரிந்து கொண்டேன் ஆனால் எனக்காக ஒத்துக்கொண்டு நடித்துள்ளார். இந்தப்படம் தயாரிப்பாளர்கள் இல்லாமல் இவ்வளவு பிரமாண்டமாக  நடந்திருக்காது  அவர்களுக்கு நன்றி. படத்தை வெளியிடும் ரெட் ஜெயண்ட் நிறுவனத்திற்கு நன்றி. உங்கள் அனைவரையும் இந்தப்படம் கவரும்.” என்றார்.

 

பாடலாசிரியர் மதன் கார்கி பேசுகையில், “மூணு வருடங்களுக்கு முன்பு இயக்குநர் இந்த கதையை சொன்னார் முதல் பாதி கைரேகை பற்றி சொன்ன போது, எனக்கு தயக்கம் இருந்தது. ஆனால் இரண்டாம் பாதி கேட்கையில் இந்தக்கதை மனதிற்குள் புகுந்துகொண்டது. எப்போதும் காதலுக்கும் காலத்திற்கும் இடையில் ஒரு போர் நடந்து கொண்டிருக்கிறது அதை தான் இயக்குநர் பிரமாண்டமாக திரையில் வரைந்திருக்கிறார். க்ளைமாக்ஸ் காட்சியில் பிரபாஸ் மிக அற்புதமாக நடித்திருக்கிறார். படத்தில் ஒரு காட்சியில் பூஜா மிக மிக சூப்பராக நடித்திருக்கிறார். அந்த காட்சியை எப்படி எழுதினார்கள் என வியப்பாக இருந்தது. ஜஸ்டின் மிக அழகான மெலடி பாடல்களை தந்துள்ளார். பிரபாஸ் ரொம்ப நாள் கழித்து ஆக்சனில் இருந்து ஒதுங்கி, நல்ல ரொமான்ஸ் படம் செய்துள்ளார். இந்த படம் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும்.” என்றார்.

 

ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா பேசுகையில், “படிக்கும் போது மணிரத்னம் சாரும் பிசி சாரும் இல்லையெனில் நாம் கேமரா சாதனங்களுக்கு வெளிநாடுதான் போக வேண்டும் என பேசிக்கொள்வோம். அப்படி ஒரு விசனரியாக ராதா கிருஷ்ண குமார் இப்படத்தை  மிக அற்புதமாக உருவாக்கியுள்ளார். ஒவ்வொரு காட்சியும் பிரமாண்டமாக இருக்க வேண்டும் என  சொல்லிவிட்டார். நிறைய முன்னேற்பாடுகள் செய்து தான் எடுத்திருக்கிறோம். விஷுவல் பார்த்துவிட்டு எல்லோரும் நன்றாக இருப்பதாக சொல்கிறார்கள். ஜெர்மனியில் பகலில் எடுக்க வேண்டிய காட்சியை எனக்காக நான் சொன்னேன் என, இரவில் எடுத்துள்ளோம். எனக்கு நிறைய சுதந்திரம் தந்தார்கள். இயக்குநரிடம் நிறைய கதைகள் இருக்கிறது. பூஜா 4 வருடத்தில் நிறைய வளர்ந்துவிட்டார். இந்த கதாப்பாத்திரத்தை மிக ஆழமாக புரிந்து செய்துள்ளார். ஜஸ்டின் லவ் ஸ்டோரிக்கு ஏற்ற மியூசிக் தந்துள்ளார். எல்லோரும் பாரட்டுவது மகிழ்ச்சியாக இருக்கிறது இந்த படத்தில் வாய்ப்பு தந்ததற்கு நன்றி.” என்றார். 

 

இசையமைப்பாளர் ஜஸ்டின் பேசுகையில், “இந்தப்படம் எனக்கு மிகவும் முக்கியமான படம், ஒரு இசையமைப்பாளராக நிறைய கனவு இருந்தது அதையெல்லாம் இப்படத்தில் செய்ய முடிந்தது. ஆர்கெஸ்ட்ரா புத்தபெஸ்டில் செய்துள்ளோம். நாம் பாடல் செய்த பிறகு விஷுவல் எப்படி இருக்கும் என்று பார்க்க தோன்றும் ஆனால் இதில் மனோஜ் சார் கலக்கியிருந்தார். பூஜா, பிரபாஸ் இடையே நல்ல கெமிஸ்ட்ரி இருக்கிறது. சத்யராஜ் பாகுபலியிருந்து வித்தியாசமான ரோல் செய்துள்ளார்.  படம் உங்கள் எல்லோருக்கும் பிடிக்கும்.” என்றார்.

 

1970 களில் ஐரோப்பாவில் நடக்கும் கதை. கைரேகை நிபுணராக வித்தியாசமான பாத்திரத்தில் பிரபாஸ் நடித்திருக்கிறார், அகில இந்திய பிரபல நடிகர் அமிதாப் பச்சன் குரல் கொடுத்திருக்கிறார், அதிநவீன விஷுவல் எஃபெக்ட்கள், இத்தாலி, ஜார்ஜியா மற்றும் ஐதராபாத்தில் படமாக்கப்பட்டுள்ள அழகிய காட்சிகள். பிரபாஸ் மற்றும் பூஜா ஹெக்டேக்கு இடையேயான பற்ற வைக்கும் கெமிஸ்ட்ரி என பல்வேறு காரணங்களுக்காக இந்த காதல் கதை அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.