May 04, 2022 05:32 AM

சிரஞ்சீவியையும், சல்மான் கானையும் நடனம் ஆட வைக்க ரெடியாகும் பிரபு தேவா

சிரஞ்சீவியையும், சல்மான் கானையும் நடனம் ஆட வைக்க ரெடியாகும் பிரபு தேவா

மலையாளத்தில் மிகப்பெரிய வெற்றி பெற்ற ‘லூசிபர்’ படத்தின் தெலுங்கு ரீமேக்காக உருவாகி வரும் படம் ‘காட்பாதர்’. மோகன் ராஜா இயக்கும் இதில் சிரஞ்சீவி ஹீரோவாக நடிக்கிறார். முக்கிய வேடம் ஒன்றில் சல்மான் கான் நடிக்கிறார். இதனால் இந்த படத்தின் மீது எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது.

 

சல்மான் கான் சம்மந்தப்பட காட்சிகள் ஏற்கனவே படமாக்கி விட்ட நிலையில், சல்மான் கானையும், சிரஞ்சீவையையும் ஒன்றாக நடனம் ஆட வைத்தால் ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக இருக்கும் என்பதால், இவர்கள்இருவரும் இணைந்து நடனமாடும் வகையில் பாடல் ஒன்றை உருவாக்க படக்குழுவினர் திட்டமிட்டனர். இவர்களுக்கு சிறப்பான நடனத்தை உருவாக்க நடனப்புயல் பிரபுதேவா நடன இயக்குநராக ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார். இந்த பாடலுக்கு எஸ். எஸ். தமன் இசை அமைக்கிறார். 

 

விரைவில் இந்தப் பாடலுக்கான படப்பிடிப்பு நடைபெறவிருக்கிறது என்றும், சிரஞ்சீவியும், சல்மான்கானும் திரையில் ஒன்றாக நடனமாடுவதை பார்ப்பது ரசிகர்களுக்கு அரிய விருந்தாக இருக்கும் என்றும் படக்குழுவினர் உற்சாகமாக தெரிவித்திருக்கிறார்கள்.

 

இதுதொடர்பாக இசையமைப்பாளர் தமன் தன்னுடைய ட்விட்டரில், “அரங்கமே அதிரும் வகையில் பிரபுதேவாவின் நாட்டிய வடிவமைப்பில், மெகா ஸ்டார் சிரஞ்சீவி அவர்களும், பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான்கான் அவர்களும் இணைந்து நடனமாட இருக்கிறார்கள். திரையில் காணும்போது ரசிகர்களின் உற்சாகம் கரை புரளும்” என பதிவிட்டு இருக்கிறார். அத்துடன் இயக்குநர் மோகன் ராஜா, நடன இயக்குநர் பிரபுதேவா, மெகா ஸ்டார் சிரஞ்சீவியுடன் தமன் இருக்கும் புகைப்படத்தையும் அவர் பகிர்ந்துள்ளார்.

 

கொனிடேலா புரொடக்சன்ஸ் மற்றும் சூப்பர் குட் பிலிம்ஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில்  நயன்தாரா, இயக்குநர் பூரி ஜெகன்நாத், நடிகர் சத்யதேவ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். 

 

நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்து வரும் இந்த படத்திற்கு எஸ் எஸ் தமன் இசையமைத்து வருகிறார். பாலிவுட் படங்களில் பணியாற்றிய கலை இயக்குநரான சுரேஷ் செல்வராஜன் இப்படத்தின் கலை இயக்கப் பணிகளை கவனித்து வருகிறார். 'காட்பாதர்' திரைப்படத்தை தயாரிப்பாளர்கள் ஆர். பி. சவுத்ரி மற்றும் என். வி. பிரசாத் ஆகியோர் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்து வருகிறார்கள். இந்தப் படத்தை கொனிடேலா சுரேகா வழங்குகிறார்.