Dec 28, 2020 06:19 AM

இயக்குநராகும் தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரன்

இயக்குநராகும் தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரன்

லிப்ரா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் மூலம் 'நளனும் நந்தினியும்', 'சுட்டக்கதை', 'நட்புனா என்னான்னு தெரியுமா' ஆகியப் படங்களை தயாரித்திருக்கும் ரவீந்திரன் சந்திரசேகரன், தற்போது ‘முருங்கக்காய் சிப்ஸ்’ என்ற படத்தை தயாரித்து வருகிறார். திரைப்பட தயாரிப்புடன் திரைப்படங்களை விநியோகமும் செய்து வரும் இவர், தற்போது இயக்குநராக அவதாரம் எடுக்கிறார்.

 

ஃபர்ஸ்ட் மேன் ஃபிலிம் ஒர்க்ஸ் நிறுவனத்தின், சரவணப்பிரியன்.ஆர். மற்றும் சிவதுரை தயாரிக்கும் 'மார்க்கண்டேயனும் மகளிர் கல்லூரியும்' படத்தின் மூலம் தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரன் இயக்குநராகிறார்.

 

படத்தில் கதாநாயகன் பெயர் மார்க்கண்டேயன். கதைப்படி இவர் பெரும் பணக்காரர். படத்தின் முதல் பாதியில் இவர் லண்டன், ஜெர்மனி, நியூசிலாந்து நாடுகளில் மார்க் என்ற பெயரில் உலா வருகிறார். பின்னர், இவருக்கு இந்தியாவில் உள்ள மகளிர் கல்லூரி ஒன்றில் நடைபெறும் போட்டியில் கலந்து கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகிறது. அந்தப் போட்டியில் பங்கேற்க 5 நிபந்தனைகள் இருக்கின்றன. மார்க்கண்டேயன் என்ற தனது உண்மையான முழுப்பெயருடன் தாயகம் திரும்பும் கதாநாயகன் போட்டியில் பங்கேற்க வைக்கப்பட்ட நிபந்தனைகள் என்ன? அவர் போட்டியில் பங்கேற்றாரா, வெற்றி பெற்றாரா என்ற கதைகளம் நகைச்சுவைப் பின்னணியுடன் ஜனரஞ்சகமான படமாக உருவாகவிருக்கிறது.

 

சரவணப்பிரியன்.ஆர். மற்றும் சிவதுரை தயாரிக்கும் இப்படத்தை இயக்குவதோடு கதை, திரைக்கதை, வசனமும் எழுதியிருக்கிறார் ரவீந்தர் சந்திரசேகரன். 

 

படத் தயாரிப்பாளர்கள் சரவணப்பிரியன்.ஆர். மற்றும் சிவதுரை ஏற்கெனவே 'முருங்கைக்காய் சிப்ஸ்' என்ற திரைப்படத்தின் இணை தயாரிப்பாளர்களாக இருந்துள்ளனர். அதிரடி, ஆர்ப்பாட்டம் என்றில்லாமல் நல்ல ஆழமான கதைக்கருவுடன் அழுத்தமானப் படங்களைக் கொடுத்தால் தமிழ்த் திரையுலகில் நீண்ட காலம் நிலைத்திருக்கலாம் என்ற புரிதல், நம்பிக்கையுடன் முழுநேர தயாரிப்பில் இறங்குகின்றனர் இந்த இரட்டைத் தயாரிப்பாளர்கள்.

 

Markandeyanum Magalir Kallooriyum

 

இயக்குநர் ரவீந்தர் சந்திரசேகரனுக்கு திரைக்களத்தில் இது ஐந்தாவது அவதாரம் என்றே சொல்ல வேண்டும். விநியோகிஸ்தர், 9 திரைப்படங்களைத் தயாரித்த தயாரிப்பாளர் என்று அறியப்பட்டவர் 'முருங்கைக்காய் சிப்ஸ்' படத்தில் ஒரு பாடலையும் எழுதினார். சித் ஸ்ரீராம் குரலில், தரண் இசையில் பதிவான அந்தப் பாடல் இன்றளவும் யூடியூபில் 3 மில்லியன் பார்வைகளைக் கடந்து ரசிகர்களின் ஆதரவைப் பெற்றுவருகிறது. பஞ்சபூதங்களையும் அடக்கி ஆளும் சக்தி வார்த்தைகளுக்கு உண்டும். வார்த்தைப் பிரயோகத்தை சரியாகச் செய்வதன் மூலம் நாம் ரசிகர்களுக்குச் சொல்லவேண்டிய கருத்தை சரியாகக் கொண்டு சேர்க்க முடியும் என்பதை தனது எழுத்தால் நிரூபித்திருக்கிறார். 4-வதாக அவர் ஓர் யூடியூப் பிரபலம். ஃபேட்மேன் (FATMAN) என்ற பெயரில் யூடியூப் சேனல் நடத்தி மக்களுக்கு அறிமுகமானவர். ஏற்கனெவே திரைத்துறையுடன் ஒன்றிய 4 தளங்களில் தன்னை நிலைநிறுத்திக் கொண்டவர் இப்போது புதிய பரிமாணத்தில் இயக்குநராக அவதரித்திருக்கிறார்.

 

இப்படத்தில் நாயகனாக முன்னணி கதாநாயகன் நடிக்க உள்ளார் ஒளிப்பதிவாளராக முன்னணி கலைஞர் ஒப்பந்தமாகிறார். இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு தைப் பொங்கல் நாளன்று வெளியிடப்படுகிறது. 

 

இப்படத்தில் முதன்முறையாக, பிரியா மாலி என்ற பாடகி இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். இவர் யுவன் சங்கர் ராஜா, அனிருத் போன்ற இசையமைப்பாளர்கள் இசையில் பல பாடல்கள் பாடியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

இப்படத்துக்கு நிர்மல் எடிட்டிங் செய்கிறார். கலை, நர்மதா வேணி. காஸ்ட்யூம் டிசைனராக ஹீனா பணியாற்றுகிறார். ஸ்டேஜ் புகைப்படக்காரராக ராஜா, டிசைனராக சந்துரு பணியாற்றுகின்றனர். பிஆர்ஓ-வாக நிகில் முருகன் செயல்படுகிறார். 

 

பெரும் பொருட்செலவில் தயாராகும் 'மார்க்கண்டேயனும் மகளிர் கல்லூரியும்' படத்தின் படப்பிடிப்பு  சித்திரை வருடப்பிறப்பை ஒட்டி  தொடங்குகிறது. இப்படத்தின் முதல்பாதி நியூசிலாந்து, லண்டன், ஜெர்மனியிலும், இரண்டாம் பகுதி தமிழகத்திலும் படமாக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.  

 

Markandeyanum Magalir Kallooriyum

 

இத்திரைப்படம் ஒரு குடும்பப் படமாக அதே நேரத்தில் கமர்ஷியல் படமாகவும், பெண்களைக் கவரும் படமாகவும் இருக்கும் என படக்குழுத் தரப்பில் கூறப்படுகிறது.