தள்ளிப் போகும் பூர்ணாவின் திருமணம்! - காரணம் இது தான்
தமிழ் சினிமாவில் தற்போது ஜாதி குறித்து பேசும் திரைப்படங்கள் பல வெளியாகி வெற்றியும் பெற்று வருவதால், பல இயக்குநர்கள் தங்களது படங்களில் ஜாதி குறித்து பேசி வருகிறார்கள்.
இந்த நிலையில், நடிகை பூர்ணாவின் திருமணம் ஜாதியால் தள்ளிப் போவதாக அவர் தெரிவித்திருப்பது, சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவை சேர்ந்த பூர்ணா, கடந்த 2004 ஆம் ஆண்டு மலையாள சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார். அதையடுத்து, பரத்துக்கு ஜோடியாக ‘முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு’ படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார். இதை தொடர்ந்து பல தமிழ்ப் படங்களில் ஹீரோயினாக நடித்தவர், சமீபத்தில் மிஸ்கின் நடிப்பில் வெளியான ’சவரக்கத்தி’ படத்தில் வித்தியாசமான வேடத்தில் நடித்த பூர்ணா ‘கொடிவீரன்’ படத்தில் மொட்டை அடித்துக் கொண்டு நடித்தார்.
தற்போது விமல், ஆஷ்னா சாவேரி நடிப்பில் உருவாகி வரும் ‘இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு’ படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்து வரும் பூர்ணா, சமீபத்திய பேட்டி ஒன்றில் தனது திருமணம் குறித்து கூறுகையில், தனக்கு வீட்டில் மாப்பிள்ளை பார்க்க தொடங்கிவிட்டதாக, தெரிவித்தார்.
மேலும், ”தனது திருமணம் தள்ளி போவதற்கு காரணம் ஜாதி தான். ஜாதியையும் மீறி என்னை பெண் கேட்டு வருகிறவர்கள் திருமணத்திற்கு பிறகு நடிக்க கூடாது, என்று சொல்கிறார்கள்.
காதல் திருமணம் செய்தாலும் இதே பிரச்சினை தான் இருக்கும். ஜாதியை பெரிதாக நினைக்காமல் எனக்கு எந்த நிபந்தனையும் விதிக்காதவராக இருந்தால் திருமணம் செய்துகொள்ள தயார்.” என்று பூர்ணா தெரிவித்திருக்கிறார்.