சிவகார்த்திகேயன் - நயந்தாரா கூட்டணியுடன் இணைந்த ராதிகா!

’சீமராஜா’ வெற்றியை தொடர்ந்து சிவகார்த்திகேயன் இரண்டு படங்களில் நடித்து வருகிறார். இதில் ஒன்றை ராஜேஷ் இயக்குகிறார். இதில் ஹீரோயினாக நயந்தாரா நடிக்கிறார். ஸ்டுடியோ கிரீன் சார்பில் ஞானவேல்ராஜா தயாரிக்கும் இப்படத்திற்கு இன்னும் தலைப்பு வைக்கவில்லை.
இந்த நிலையில், இப்படத்தில் முக்கியமான கதாபாத்திரம் ஒன்றில் நடிக்கும் ராதிகாவின் காட்சிகள் தற்போது படமாக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து கூறிய இயக்குநர் ராஜேஷ், “எங்கள் படப்பிடிப்பு தளத்தில் ஒவ்வொரு நாளும், நேர்மறையான விஷயங்கள் அதிகரித்து கொண்டே வருகின்றன என்பதை கூறுவதில் மகிழ்ச்சி. நான் படப்பிடிப்பை ஆரம்பித்த நேரத்திலிருந்தே இத்தகைய மகிழ்ச்சியான தருணங்கள் கிடைத்து வருகிறது. கேஈ ஞானவேல்ராஜா போன்ற ஒரு தயாரிப்பாளர் எங்கள் தேவைகளை அறிந்து, பூர்த்தி செய்வதும் இதற்கு முக்கிய காரணம். நிச்சயமாக, சிவகார்த்திகேயனின் நகைச்சுவை உணர்வை பற்றி நாம் சொல்லி தெரிய வேண்டியதில்லை. அவரை சுற்றி இருப்பவர்களை எப்போதும் மகிழ்வோடும், புத்துணர்ச்சியோடும் வைத்திருப்பார். நயன்தாரா இத்தனை ஆண்டுகள் கழித்தும் உச்சத்தில் இருப்பதை வைத்தே அவரின் ஆற்றலை அறிந்து கொள்ளலாம். இப்போது, ராதிகா மேடம் இந்த படத்தில் சேர்ந்தது, படத்துக்குள் இன்னும் பாஸிட்டிவாக அமைந்திருக்கிறது. ராதிகா மேடம் அவர்களுக்கு என்றே வடிவைமைத்த கதாபாத்திரம் இது என சொல்லலாம். அவரை தவிர இத்தகைய கதாபாத்திரங்களுக்கு யாரும் உயிர் தந்து விட முடியாது. சிறந்த நடிகர்கள் மட்டுமல்லாமல், இத்தகைய பெரிய இயல்பான மனிதர்கள் ஒன்றாக சேர்ந்திருப்பது எனக்கு பெருமையாக இருக்கிறது. இது எங்களது படத்தை மிகவும் நேர்த்தியான முறையில் வடிவமைக்க உதவுகிறது என்பதை உறுதியாக நம்புகிறேன்" என்றார்.
‘எஸ்.கே 13’ என்று அழைக்கப்படும் இப்படத்திற்கு ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைக்கிறார்.