Feb 01, 2021 05:29 AM

லாக்கப் மரணங்களின் பகீர் பின்னணியை பேசும் ‘ராஜலிங்கா’!

லாக்கப் மரணங்களின் பகீர் பின்னணியை பேசும் ‘ராஜலிங்கா’!

லாக்கப் மரணத்தை மையமாக வைத்து வெளியான ‘விசாரணை’ திரைப்படம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது போலவே, லாக்கப் மரணங்களின் பகீர் பின்னணி குறித்து பேசியிருப்பதோடு, அதில் இருக்கும் அரசியல் குறித்தும் பேசி அதிர்வலையை ஏற்படுத்த இருக்கும் திரைப்படம் ‘ராஜலிங்கா’.

 

அறிமுக இயக்குநர் ஷிவபாரதி எழுதி இயக்கியிருப்பதோடு, முக்கிய கதாப்பாத்திரம் ஒன்றிலும் நடித்திருக்க்கும் இப்படத்தில், டி.குமரேசன், மாறன் பாண்டியன் ஆகியோரும், நாயகியாக ஜாய் ப்ரியா என்பவரும் நடித்திருக்கிறார்கள்.

 

இப்படத்தை இயக்கியிருக்கும் ஷிவபாரதி தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறைச் சேர்ந்தவர். இயக்குநர் ராதாபாரதி உள்ளிட்ட பலரிடம் பணியாற்றிய அனுபவங்களைக் கொண்டவர்.

 

இவர் எழுதிய திரைக்கதையும் அதையொட்டி இவர் செய்திருந்த வடிவமைப்பையும் பார்த்த திருச்சி விநியோகஸ்தர் மாரிமுத்து படத்தை இயக்கும் வாய்ப்பைக் கொடுத்திருக்கிறார்.

 

இப்படம் குறித்து இயக்குநர் ஷிவபாரதி கூறுகையில், “இப்படம் தற்காலத்தில் அதிகம் பேசப்படும் ஒரு சிக்கலை மையமாகக் கொண்டு எடுத்திருக்கிறேன். பார்த்தவுடன் காதல், பழகியவுடன் அத்துமீறல், என்று போகும் ஜோடிகளுக்கு இப்படம் ஒரு பாடமாக இருக்கும்.

 

அன்றாடம் தவிர்க்க முடியாத அத்தியாவசியமாகி விட்ட வாட்ஸ்-அப்பை நாம் மிக அலட்சியமாகக் கையாள்கிறோம். இப்படம் பார்த்துவிட்டு போனை எடுத்து வாட்ஸ்-அப்பை திறந்தால் ஒரு எச்சரிக்கை உணர்வு வரும்.

 

இப்படத்தில் நான் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறேன். மாறன் பாண்டியன் காவல்துறை ஆய்வாளர் வேடத்தில் நடித்திருக்கிறார். அந்த வேடம் மிகவும் பேசப்படும்.

 

இந்தப்படத்தின் நாயகி வேடத்துக்கு 20-க்கும் மேற்பட்டோரைப் பார்த்தோம். கதையைக் கேட்டுவிட்டு பயந்து போய் நடிக்க முடியாது என்று கூறிவிட்டார்கள். இப்போது நாயகியாக நடித்திருக்கும் ஜாய் ப்ரியா, கதையைக் கேட்டதும் இதுபோன்ற பவர்ஃபுல்லான வேடத்தில் நடிக்க வேண்டும் என்றுதான் ஆசைப்பட்டேன், என்று சொல்லி நடிக்க வந்தார். மிகச்சிறப்பாக நடித்திருக்கிறார்.” என்றார்.

 

Trichy Marimuthu

 

பல கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துவிட்டது. தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன்ஸ் பணிகள் நடைபெற்று வருகிறது.

 

திருச்சி ஏரியாவில் கடந்த 30 ஆண்டுகளை கடந்து விநியோகத்துறையில் இருக்கும் திருச்சி மாரிமுத்து ’ராஜலிங்கா’ படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமாகிறார் என்பது குறிப்பிடத்தக்கது