சிவகாமி, கட்டப்பாவை மீண்டும் கையில் எடுக்கும் ராஜமெளலி!

இந்தியா முழுவதும் மிகப்பெரிய வெற்றிப் பெற்ற ‘பாகுபலி’ படங்களை இயக்கிய எஸ்.எஸ்.ராஜமெளலி, தற்போது ராம்சரண் மற்றும் ஜுனியர் என்.டி.ஆர் இருவரையும் வைத்து ஒரு படம் இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு வரும் அக்டோபர் மாதம் தொடங்க இருக்கிறது.
இந்த நிலையில், சத்யராஜ் மற்றும் ரம்யா கிருஷ்ணனை வைத்து வித்தியாசமான முயற்சியில் இறங்கவும் ராஜமெளலி முடிவு செய்திருக்கிறார்.
பாகுபலியில் இடம்பெற்ற முக்கியமான கதாபாத்திரங்களில் ரம்யா கிருஷ்ணனின் சிவகாமி வேடமும், சத்யராஜின் கட்டப்பா வேடமும் மிக முக்கியம் வாய்ந்த வேடங்களாகும். இந்த வேடங்களின் முந்தைய கதையை, அதாவது பாகுபலி இருந்த இந்த வேடங்கள், அதற்கு முன்பு எப்படி இருந்தன என்ற கோணத்தில் படம் ஒன்றை ராஜமெளலி இயக்க இருக்கிறாராம்.
மூன்று பாகங்களாக இந்த படத்தை இயக்க திட்டமிட்டுள்ள இயக்குநர் ராஜமெளலி நெட்பிளிக்ஸ் என்ற இணையதள நிறுவனத்திற்காக இந்த படத்தை இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.