May 17, 2018 04:29 AM

அஜித்தின் ‘விஸ்வாசம்’ படப்பிடிப்பிற்கு ஆர்.கே.செல்வமணி எதிர்ப்பு!

அஜித்தின் ‘விஸ்வாசம்’ படப்பிடிப்பிற்கு ஆர்.கே.செல்வமணி எதிர்ப்பு!

சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கும் ‘விஸ்வாசம்’ படத்தின் டப்பிடிப்பு ஐதராபாத்தில் செட் போட்டு எடுக்கப்பட்டு வருகிறது. சென்னை மற்றும் திருநெல்வேலி போன்று செட் போடப்பட்டு படப்பிடிப்பு நடத்தப்பட்டு வரும் நிலையில், அஜித் படப்புக்குழுவினருடன் சேர்ந்து எடுத்துக்கொள்ளும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

 

இந்த நிலையில், அஜித்தின் ‘விஸ்வாசம்’ படப்பிடிப்பிற்கு பெப்சி தலைவரும் இயக்குநருமான ஆர்.கே.செல்வமணி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

 

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஆர்.கே.செல்வமணி, “தயாரிப்பாளர்களுக்கு மட்டுமல்லாமல், நடிகர்களுக்கும் ஒரு வேண்டுகோளை வைக்க விரும்புகிறோம். எங்களின் இழப்புகளை கூட பெரிதாக நினைக்காமல், தயாரிப்பாளர்களுக்கு பல சலுகைகளை வழங்கியிருக்கிறோம். அவர்களின் செலவு, சிரமம் போன்றவை குறையும். மேலும், படங்களின் எண்ணிக்கை மற்றும் வேலைவாய்ப்பு போன்றவை அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பில் தான் நாங்கள் பல சலுகைகளை வழங்கியுள்ளோம். 

 

ஒவ்வொரு படமும் தமிழ்நாட்டுக்கு வெளியே படமாக்கப்படும் போது எங்களது தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு குறைகிறது. காலா படத்தை சென்னையில் படமாக்கிய போது, ரூ.12 கோடி மதிப்பில் செட்டில் ஷூட் செய்த போது கிட்டத்தட்ட 10 ஆயிம் தொழிலாளர்கள் வேலை செய்தார்கள். இது சினிமாக்காரர்களுக்கு மட்டுமல்லாமல், அப்பகுதி மக்களுக்கே 6 மாதத்திற்கான வேலைவாய்ப்பை காலா படம் உருவாக்கிக்கொடுத்தது. 

 

இப்படியிருக்கும் போது, விசுவாசம் படம் இவிபியில் நடக்கிறது. முன்பெல்லாம், வெளியிடங்களில் நடப்பதற்கு ஒரு காரணம் இருந்தது. சில பேரது வசதிக்காக வேறு மாநிலங்களில் செட் போட்டுள்ளார்கள். அதை நம் மாநிலத்திலேயே செய்யலாமே. இதனால், இங்குள்ள தொழிலாளர்களின் வேலை வாய்ப்பு பாதிக்கப்பட்டுள்ளது.

 

இதனை எல்லாம் கருத்தில் கொண்டு இங்குள்ள தொழிலாளர்களை வைத்து படம் எடுக்க வேண்டும். அதற்காக நான் இங்கேயே படம் எடுக்க வேண்டும் என்று வற்புறுத்தவில்லை. இங்கு இல்லாத விஷயங்களுக்காக மற்ற மாநிலங்களுக்கு செல்வதை ஒன்றும் சொல்லவில்லை. 

 

ஒரு அறையில், குறிப்பிட்ட இடத்தில் செட் அமைத்து சென்னை, திருநெல்வேலி மாதிரி இடத்தை ஐதராபாத்தில் உருவாக்க வேண்டிய அவசியமில்லை என்பது தான் எனது வேண்டுகோள். இனிமேல் இப்படி செய்து, நம் மாநிலத்திலுள்ள தொழிலாளர்களை அழித்துவிடாதீர்கள் என்று கேட்டுக்கொள்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.

 

ஆர்.கே.செல்வமணியின் இந்த நியாயமான கோரிக்கைக்கு அஜித் செவிக்கொடுப்பாரா, என்று பொருத்திருந்து பார்ப்போம்.