Sep 07, 2018 12:02 PM

சதாவுக்கு பல வகையில் மறக்க முடியாத படமான ‘டார்ச்லைட்’!

சதாவுக்கு பல வகையில் மறக்க முடியாத படமான ‘டார்ச்லைட்’!

பல திரைப்படங்களின் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருந்தாலும் ஒரு படத்தின் போஸ்டர் மட்டும் ரசிகர்களை பார்வையை தன் மீது சட்டென்று பட வைத்துவிடுகிறது. அது தான் ‘டார்ச்லைட்’ பட போஸ்டர்.

 

ஹோம்லியாக நடித்த சதா, ஒரு மார்க்கமாக இருக்கும் அந்த போஸ்டரில் ஏ சான்றிதழும் இருந்தால், யார் தான் அதை சற்று உற்று பார்க்க மாட்டார்கள், அப்படியான ஒரு எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்திய ‘டார்ச்லைட்’ இன்று வெளியாகியுள்ளது. இதில் சதா நெடுஞ்சாலையில் பாலியல் தொழில் செய்யும் பாலியல் தொழிலாளியாக நடித்திருக்கிறார். இப்படத்தை விஜய் நடித்த ‘தமிழன்’ படத்தை இயக்கிய மஜீத் இயக்கியிருக்கிறார்.

 

இந்த நிலையில், ‘டார்ச்லைட்’ படத்தின் புரோமோஷன் பணிகளில் ஈடுபட்டுள்ள சதா, சமீபத்தில் பத்திரிகையாளர்களிடம் படம் குறித்து பேசுகையில், “நான் சற்று இடைவெளிக்குப் பின் தமிழில் நடித்திருக்கிறேன். இடையில் தெலுங்கு, இந்தி என்று நடித்தேன். நல்லதொரு கேரக்டருக்காக தேர்ந்தெடுத்து நடிக்க விரும்பியதால் இந்த தாமதம். டார்ச்லைட் படத்தின் கதையை இயக்குநர் மஜீத் என்னிடம் ஒரு முறை சொன்னார். கதை பிடித்தது, ஆனால் என்னால் உடனே முடிவு எடுக்க முடியவில்லை. அதனால் மீண்டும் மீண்டும் கேட்டேன். அப்போதும் அவர் அதே தெளிவோடு கூறினார். என்னால் எதுவும் சட்டெனக் கூற முடியவில்லை. சரியாக வருமா நம்மால் முடியுமா? என்கிற எண்ணம் இருந்தது. மஜீத் என் மேல் நம்பிக்கை வைத்தார். உங்களால் முடியும் என்று ஊக்கம் தந்தார். நடிப்பது என்று முடிவு எடுத்துவிட்டேன்.

 

இது மாதிரி பாலியல் தொழிலாளியாக நடிக்கப் பலரும் தயங்கவே செய்வார்கள். காரணம் படத்தின் பாத்திரத்தை பாத்திரமாகப் பார்க்கும் பக்குவம் பலருக்கும் இருப்பதில்லை. அது தான் பிரச்சினை. என்னைப் பார்க்கிறவர்கள் எல்லாருமே முதலில் இதைத்தான் கேட்கிறார்கள். என்னை படத்தில் சதாவாகப் பார்க்காதீர்கள். பாத்திரமாகப் பாருங்கள்  என்பதே என் பதில். ட்ரெய்லர் பார்த்து விட்டு கேள்வி கேட்கிறார்கள். ட்ரெய்லர், போஸ்டர் பார்த்து விட்டு படத்தை முடிவு செய்யக் கூடாது. அட்டைப் படத்தைப் பார்த்து விட்டு ஒரு புத்தகத்தை முடிவு செய்ய முடியாது அல்லவா?. ட்ரெய்லரில் சில வினாடிகள் உள்ள வசனங்கள் பற்றிக் கேட்கிறார்கள். சர்ச்சையாக இருக்கிறதே என்கிறார்கள். படம் பார்த்து விட்டு முடிவு செய்யுங்கள். 

 

இது பாலியல் தொழிலில் சிக்கிய பெண்கள் பற்றிய கதை தான். அவர்கள் அந்தத் தொழிலுக்கு விரும்பி வருவதில்லை. ஆடம்பர வாழ்க்கைக்கோ, பெரிய பணத்துக்கோ, சந்தோஷத்துக்கோ  என்று வருவதில்லை.குடும்ப வறுமை சூழலில்  வருகிறார்கள். இந்தத் தொழிலில் ஆண்கள் சம்பந்தப்பட்டாலும் கெட்ட பெயரெல்லாம் பெண்களுக்குத்தான். அவர்களின் வலி, வேதனை, துன்பம், துயரம், மன அழுத்தம்  யாருக்கும் தெரிவதில்லை. அதைத்தான் இதில் பதிவு செய்திருக்கிறார்  இயக்குநர்.” என்றார்.

 

இயக்குநர் மஜீத் பேசுகையில், “இது பாலியல் தொழிலாளி பற்றிய கதைதான் ஆனால் செக்ஸ் படமல்ல. இதை பல நடிகைகளிடம் கூறினேன். ஆனால் யாரும் நடிக்க வரவில்லை. சதா மட்டுமே முன்வந்தார். அவர் கதையை மீண்டும் மீண்டும் கேட்டு தெளிவு பெற்றார், அதன் பிறகு தயக்கத்தை விட்டு விட்டு நடிக்கத் தயாராகி விட்டார். அந்தக் கதாபாத்திரத்துக்குள் நுழைந்து விட்டார். பிரமாதமாக நடித்துள்ளார்.

 

படம் எடுத்த பிறகு சென்சாரில் நாங்கள் பட்டபாடு கொஞ்ச நஞ்சமல்ல. ரிவைஸிங் கமிட்டி போய்த்தான் சர்டிபிகேட் பெற வேண்டியிருந்தது.  ஏராளமான வெட்டுகள்  கொடுத்தார்கள். சினிமாவில் சென்சார் பெரிய பிரச்சினையாக உள்ளது. அவர்களுக்குச் சினிமா மொழி புரிவதில்லை. சென்சாரில் தணிக்கைக் குழுவில் சினிமாத்துறையினர் நாலைந்து பேராவது இருக்க வேண்டும் என்பது என் வேண்டுகோள்.” என்றார்.