Jan 30, 2021 03:12 PM

திருத்தணி முருகன் கோவில் முன்பு குச்சி ஐஸ் விற்ற சமுத்திரகனி!

திருத்தணி முருகன் கோவில் முன்பு குச்சி ஐஸ் விற்ற சமுத்திரகனி!

நடிகராக பிஸியாக இயங்கி வரும் இயக்குநர் சமுத்திரகனி, நடித்து வரும் பல படங்களில் ‘ஏலே’ படம் முக்கியமானதாகும். காரணம், இதுவரை அவர் நடிக்காத ஒரு வேடத்தில் இப்படத்தில் நடித்து வருகிறார். அதாவது, கிராமப்புறத்தில் குச்சி ஐஸ் விற்பனை செய்யும் முத்துகுட்டி என்ற கதாப்பாத்திரத்தில் சமுத்திரகனி நடித்துள்ளார்.

 

‘சில்லுக் கருப்பட்டி’ படம் மூலம் பெரும் பாராட்டு பெற்ற ஹலீதா சமீம் இயக்கியிருக்கும் இப்படத்திற்கான விளம்பர முன்னோட்டமாக , படத்தில் இடம்பெறும் முத்துகுட்டி கதாப்பாத்திர கெட்டப்போடு மக்கள் அதிகம் புழங்கும் திருத்தணி முருகன் கோவில் முன்பு, தைப்பூச நாளில், ஐஸ் நிறைந்த வண்டியோடு சமுத்திரகனி, பொதுமக்களிடம் குச்சி ஐஸ் விற்பனை செய்தார்.

 

சமுத்திரகனி ஐஸ் விற்பதை கண்டு ஆச்சர்யத்தில் ரசிகர்கள் பெரும் கூட்டமாக கூடிவிட்டனர். நடிகர் சமுத்திரகனி மக்களுடன் இயல்பாக உரையாடி மகிழ்ந்து, அவர்களுக்கு குச்சி ஐஸ் தந்தார். அங்கிருந்த ரசிகர்கள் மற்றும் சுற்றுலாவாசிகளுடன் கலந்துரையாடி அவர்களை மகிழ்வித்தார்.

 

இதனை தொடர்ந்து இதே மாதிரியான விளம்பர யுக்தியினை சிறுவாபுரி முருகன் கோவிலிலும் செய்தார் சமுத்திரகனி. அங்கும் ரசிகர்கள் மற்றும் பொது மக்களிடம் பெரும் வரவேற்பு கிடைத்தது.

 

Samuthirakani in Aleay

 

தைப்பூச திருநாளில் துவங்கப்பட்ட ‘ஏலே’ படத்தின் விளம்பர பணிகள் மக்களிடம் பெரும் வரவேற்பு பெற்று வெற்றி அடைந்ததில் சமுத்திரகனியும் ஏலே படக்குழுவினரும் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

 

ஏற்கனவே விஜய் சேதுபதி மூலம் வெளியிடப்பட்ட ‘ஏலே’ படத்தின் டிரைலர் மிகப்பெரிய வரவேற்பு பெற்றுள்ள நிலையில், சமுத்திரகனி பொதுமக்களிடம் ஐஸ் விற்பனை செய்த யுக்தியும் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. வரும் பிப்ரவரி 12 ஆம் தேதி ‘ஏலே’ படத்தை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.

 

ஒய் நாட் ஸ்டுடியோஸ் (Y Not Studios) மற்றும் ரிலையன்ஸ் எண்டர்டெயின்மெண்ட் (Reliance Entertainment) நிறுவனங்கள் இணைந்து வழங்க, எஸ்சசிகாந்த் தயாரித்துள்ள இப்படத்தின் இணை தயாரிப்பு பொருப்பை சக்ரவர்த்தி ராமசந்திரா ஏற்க, இயக்குநர்கள் புஷ்கர் & காயத்ரி, தங்களது வால்வாட்ச்சர் பிலிம்ஸ் (Wallwatcher Films) சார்பில் முதல் படைப்பாக இப்படத்தின் கிரியேட்டிவ் புரொடக்‌ஷன் பணியை மேற்கொண்டுள்ளனர்.