Jul 22, 2020 02:31 PM

‘பிஸ்கோத் படத்திற்காக சந்தானம் போட்ட ராஜா கெட்டப்!

‘பிஸ்கோத் படத்திற்காக சந்தானம் போட்ட ராஜா கெட்டப்!

இயக்குநர் ஆர்.கண்ணன் தயாரித்து இயக்கும் ‘பிஸ்கோத்’ படத்தின் கதை, 18 ஆம் நூற்றாண்டு காலக்கட்டம், 80 ஆம் ஆண்டு காலக்கட்டம் மற்றும் தற்போதைய 2020 காலக்கட்டம் என்று மூன்று காலகட்டங்களில் நடப்பது போன்று அமைக்கப்பட்டிருக்கிறது. இதற்காக சந்தானம் முதல் முறையாக மூன்று கெட்டப்புகள் போட்டு நடித்திருக்கிறார்.

 

80 களில் காலக்கட்டத்திற்காக, கமல்ஹாசன் ‘சகலகலா வல்லவன்’ படத்தில் போட்ட கெட்டப் போன்று இப்படத்தில் சந்தானம் ஒரு கெட்டப் போட்டிருக்கிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு அந்த கெட்டப்பை வெளியிட்ட படக்குழு, தற்போது சந்தானத்தின் மற்றொரு கெட்டப்பை வெளியிட்டது. 

 

சந்தானம் ராஜாவாக கெட்டப் போட்டுள்ளார். இந்த கெட்டப்பில் சந்தானம் வரும் காட்சிகள் படத்தில் 30 நிமிடங்கள் இடம்பெறுகிறது. இதற்காக ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் அரங்குகள் அமைத்து படப்பிடிப்பு நடத்தியதோடு, 50 துணை நடிகர், நடிகைகளையும் நடிக்க வைத்துள்ளனர். மேலும், இதில் சந்தானத்திற்கு பாட்டியாக செளகார் ஜானகி நடித்திருக்கிறார். அவருக்கு இது 400 வது படமாகும்.

 

சந்தானத்தின் ராஜா கெட்டப் குறித்து இயக்குநர் கண்ணன் கூறுகையில், “படத்தில் ஒரு பிஸ்கட் ஃபேக்டரி முக்கியமான பாத்திரம் போல் வருகிறது, அதனால்தான் படத்துக்குப் 'பிஸ்கோத்' என்று பெயர் வைத்தோம்.  சந்தானத்தின் வேறு சில பரிமாணங்களை இதில் வெளிப்படுத்தியிருக்கிறோம். வடிவேலுவுக்கு எப்படி 'இம்சை அரசன் 'அமைந்ததோ அப்படி சந்தானத்துக்கு 'பிஸ்கோத்' படம் அமையும். அது போல் பேசப்படும் படமாகவும் இருக்கும். இப்படத்தில் இந்த ராஜா காலக்கட்ட காட்சிகள் 30 நிமிடங்கள் வரும். இதற்காக அந்தக் காலத்து ஆதாரங்களை எல்லாம் எடுத்து வைத்துக்கொண்டு கலை இயக்குநர் ராஜ்குமார் அரங்கம் அமைத்தார். இதற்கான உடைகளுக்காக மிகவும் சிரமப்பட்டு உடை அலங்கார நிபுணர் பிரியா உடைகளை வடிவமைத்துக்கொடுத்தார். இதற்கான காட்சிகளில் துணை நடிகர்கள் 500 பேர் நடித்தார்கள் அவ்வளவு பேருக்கும் உடைகள் தயாரிக்கப்பட்டன.

 

காட்சிகள் பெயிண்டிங் போல் வந்துள்ளன. அந்தக்கால பெயிண்டிங் போன்றவற்றை வைத்து ஓவியங்கள் போல் ஒளி அமைப்பு செய்து ‘96’ படத்தின்  ஒளிப்பதிவாளர் சண்முகசுந்தரம் ஒளிப்பதிவு செய்து பிரமாதப்படுத்தியிருக்கிறார். படத்தில் பதினெட்டாம் நூற்றாண்டுக் காலக்கட்டத்தில் வரும் காட்சிகளுக்குத்தான் இப்படி ராஜபார்ட் வேடமும் அரங்கங்களும் அமைக்கப்பட்டன. இன்னொரு பகுதியாக எண்பதுகளில் இடம்பெறும் காட்சிகள் வரும். மூன்றாவது பகுதியாக சமகாலத்து காட்சிகள் அதாவது இக்கால 2020 க்கான காட்சிகள் அமைந்திருக்கும். இம்மூன்று காலகட்டத்துக்கும் என்ன தொடர்பு என்பது படம் பார்த்தால் புரியும். மொத்தத்தில் முழுக்க முழுக்க சிரிக்க வைக்கும் படமாக இது இருக்கும்.

 

சந்தானம் ரசிகர்களுக்கு மட்டுமல்ல அனைவருக்கும் பிடித்த படமாக ‘'பிஸ்கோத்’ இருக்கும். கொரோனா முடக்கத்துக்குப் பிறகு அனைவருக்கும் ஒரு மன அழுத்தம் இருக்கிறது. அந்த அழுத்தங்களில் இருந்து விடுதலை பெற வைக்கும்  வகையில் பெரிய மன நிம்மதி அளிக்கும்படியான  கலகலப்பான காமெடி படமாக 'பிஸ்கோத்' இருக்கும். இந்த படத்திற்காக சந்தானம் கொடுத்த ஒத்துழைப்பு சாதாரணமானதல்ல. இப்படத்தில் இடம்பெறும் களரிச் சண்டைக் காட்சிகளுக்காக ஸ்டண்ட் ஹரிதி னேஷிடம் களரி கற்றுக் கொண்டார். அதன் பிறகு தான் நடித்தார். அந்தக் காலத்தில் சௌகார் ஜானகி 'தில்லு முல்லு' படத்தில் நடித்த நகைச்சுவைக் காட்சிகளைப் பார்த்து நான் வியந்திருக்கிறேன். அவர் இந்தப் படத்தில் சந்தானத்தின் பாட்டியாக வருகிறார். நகைச்சுவையில் கலக்கி இருக்கிறார். சந்தானத்துடன் ஏற்கெனவே 'A1'  படத்தில் நாயகியாக  நடித்த தாரா அலிஷா பெர்ரி ஒரு நாயகியாகவும்  மிஸ் கர்நாடகா விருதுபெற்ற ஸ்வாதி முப்பாலா இன்னொரு நாயகியாகவும் நடித்துள்ளார்கள். அதுமட்டுமல்ல ஆனந்தராஜ், மொட்டை  ராஜேந்திரன், சிவசங்கர், லொள்ளு சபா மனோகர் ஆகியோர் படம் முழுக்க வந்து கலகலப்பூட்டுவார்கள்.” என்றார்.