Jan 04, 2022 08:48 AM

அதர்வாவுடன் கைகோர்த்த சரத்குமார், ரஹ்மான்!

அதர்வாவுடன் கைகோர்த்த சரத்குமார், ரஹ்மான்!

கார்த்திக் நரேன் இயக்கத்தில், அதர்வா நடிப்பில் உருவாகும் ‘நிறங்கள் மூன்று’ படத்தில் நடிகர்கள் சரத்குமார் மற்றும் ரஹ்மான் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளனர்.

 

ஐங்கரன் இண்டர்நேஷ்னல் சார்பில் கருணாமூர்த்தி தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு நாளை (ஜனவரி 5) தொடங்க உள்ளது. முழு படப்பிடிப்பையும் மார்ச் மாதத்திற்குள் முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.

 

படம் குறித்து கூறிய தயாரிப்பாளர் கருணாமூர்த்தி, “’நிறங்கள் மூன்று’ போன்றதொரு அழகான பாத்திரங்களும், மிகச்சிறந்த திரைக்கதையும் கொண்ட அட்டாகசமான  படத்தை தயாரிப்பதில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன். ஐங்கரன் இண்டர்நேஷ்னல் நிறுவனம் 35 வருடத்தில் கால் பதிக்கிறது. இது எங்கள் நிறுவனத்தின் 25வது படைப்பாகும், எனவே பெருமைப்படுமளவிலான ஒரு அற்புதமான திரைப்படத்தை உருவாக்க நினைத்தேன். ’நிறங்கள் மூன்று’ மூலம் அது நிறைவேறியுள்ளது.

 

கார்த்திக் நரேன் திரைக்கதையை விவரித்தபோது, இந்தக் கதையின் கதாபாத்திரங்களால் மிகவும் ஈர்க்கப்பட்டேன். அவர் கதை சொல்லிக்கொண்டிருகும் போதே, இந்த பாத்திரங்களுக்கு யார் பொருத்தமானவர் என்று யோசிக்க ஆரம்பித்து, பல நடிகர்கள் பெயர் என் மனதில் ஓட ஆரம்பித்தது. நான் நினைத்த நடிகர்களின் பெயரையே கார்த்திக் நரேனும் சொன்னது மிகவும் ஆச்சரியமான தருணம். அதர்வா முரளி, சரத்குமார் மற்றும் ரஹ்மான் ஆகியோர் சிறந்த நடிகர்கள், அவர்கள் எப்போதும் அழுத்தமிகுந்த கதைகளிலும், வணிக ரீதியில் லாபம் தரும் படைப்புகளிலும் தங்கள் திறனை வெளிப்படுத்த முயற்சித்து வருகிறார்கள். 

 

இப்படத்தில் கார்த்திக் நரேன் தனது திறமையான இயக்கத்தால், இந்த கலைஞர்களின் திறமையை,  அடுத்த கட்டத்திற்கு எடுத்து  செல்வார். தனது முதல் அறிமுக திரைப்படமான ‘துருவங்கள் பதினாறு’ மூலம் மொத்த திரையுலகிலும் ஒரு புதிய டிரெண்டை உருவாக்கிய இயக்குநர் கார்த்திக் நரேன் மீது எனக்கு எப்போதும் ஒரு பிரமிப்பு உண்டு. குறுகிய காலத்தில், திரைத்துறையில் பெரிய பெரிய நட்சத்திரங்களுடன் பணிபுரிந்து, அவர் தனது மகத்தான திறமையை நிரூபித்துள்ளார். ’நிறங்கள் மூன்று’ தனது இயக்குநர் கார்த்திக் நரேனின் அந்தஸ்தை அடுத்த கட்டத்திற்கு உயர்த்தும் என்று நான்  உறுதியாக நம்புகிறேன்.

 

இப்போதே தலைப்பை பற்றி கூறுவது அத்தனை நன்றாக இருக்காது, ஆனால் படத்தில் நிறைய ஆச்சரியங்கள் இருக்கும் என்பதற்கு நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன். இது ஒரு ஹைப்பர்லிங்க்-டிராமா-த்ரில்லர், மேலும் வலுவான பாத்திரங்கள், சுவாரஸ்ய திரைக்கதை,  எதிர்பாரா திருப்பங்களுடன் கார்த்திக் நரேனின் அழுத்தமான முத்திரை இப்படத்தில் இருக்கும்.” என்றார்.

 

ஜேக்ஸ் பிஜோய் இசையமைக்கும் இப்படத்திற்கு டிஜோ டாமி ஒளிப்பதிவு செய்கிறார். ஸ்ரீஜித் சாரங் படத்தொகுப்பு செய்ய, டான் அசோக் சண்டைக்காட்சிகளை வடிவமைக்கிறார்.