Feb 22, 2022 03:20 PM

சரத்குமாரின் 150 வது திரைப்படம் அறிவிப்பு

சரத்குமாரின் 150 வது திரைப்படம் அறிவிப்பு

தமிழ் சினிமாவில் 100 படங்களை கடந்து வெற்றிகரமான நடிகராக பயணித்துக் கொண்டிருக்கும் ஒரு சில நடிகர்களில் சரத்குமாரும் ஒருவர். ரசிகர்களால் சுப்ரீம் ஸ்டார் என்று அழைக்கப்படும் சரத்குமாரின் நடிப்பில் சமீபத்தில் வெளியான இணைய தொடர் ‘இரை’ ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்ற நிலையில், அவருடைய 150 வது திரைப்படம் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

’தி ஸ்மைல் மேன்’ (The Smile Man) என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படத்தை மேக்னம் மூவிஸ் சார்பில் சலீல் தாஸ் தயாரிக்க, ஷ்யாம் - பிரவீன் இயக்குகிறார்கள். 

 

அம்னீஷியா நோயால் பாதிக்கப்படும், ஓய்வு பெற்ற  ஒரு முன்னாள் காவல் அதிகாரி, தனது நினைவுகள் முழுதாக மறந்து போகுமுன், ஒரு சிக்கலான மிக முக்கியமான வழக்கை கண்டுபிடிக்க வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாக, அவர் எப்படி அந்த வழக்கை கண்டுபிடிக்கிறார் என்பதை முழுக்க முழுக்க இன்வெஸ்டிகேசன் திரில்லர் பாணியில், பரபரப்பான திரைக்கதையில் சொல்வது தான் இப்படத்தின் கதை.

 

இதில், சரத்குமார் நாயகனாக நடிக்க, சிஜா ரோஸ், இனியா, ராஜ்குமார், ஜார்ஜ் மரியான், சுரேஷ் மேனன், குமார் நடராஜன், ரெளடி பேபி புகழ் பேபி ஆழியா ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கிறார்கள். 

 

The Smile Man

 

ஆனந்த் திரைக்கதை மற்றும் வசனம் எழுதும் இப்படத்தை விரைவில் வெளியாக உள்ள ‘மெமரீஸ்’ படத்தை இயக்கிய ஷ்யாம் - பிரவீன்  இயக்குகிறார்கள். ஸ்ரீ சரவணன் ஒளிப்பதிவு செய்ய, ஷான் லோகேஷ் படத்தொகுப்பு செய்கிறார். கவாஸ்கர் அவினாஷ் இசையமைக்க, அய்னா ஜெ.ஜெய்காந்த் கலை இயக்குநராக பணியாற்றுகிறார். தீபா சலீல் இணை தயாரிப்பாளராக பணியாற்ற, ஏய்ம் (AIM) சதீஷ் மக்கள் தொடர்பாளராக பணியாற்றுகிறார்.