கஜா புயல் நிவாரண நிதியாக ரூ.1 கோடி நிதி வழங்கிய சரவணா ஸ்டோர்ஸ் சரவணன்!

கஜா புயல் நிவாரண நிதியாக ரூ.1 கோடி நிதியை சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் சரவணன், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் இன்று வழங்கினார்.
மேலும், தமிழக மக்களிடம் வேண்டுகோள் ஒன்றை விடுத்த சரவணன், “புயலால் துயரத்தில் ஆழ்ந்துள்ள நம் சகோதர, சகோதரிகளுக்கு நாம் அனைவரும் நம்மால் இயன்ற சிறிய உதவியோ, பெரிய உதவியோ செய்து இத்துயரத்தில் இருந்து அவர்கள் விரைவில் மீண்டு இயல்பு நிலைக்குத் திரும்ப அனைவரும் ஆதரவு தந்து தங்களால் இயன்ற நிதியுதவி அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
நம் விவசாய நண்பர்கள் கஜா புயலின் தாக்குதலால் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகியிருக்கிறார்கள். கஷ்டம் நஷ்டம் அனைவரின் வாழ்விலும் வரும் போகும், எதுவும் நிரந்தரம் இல்லை. மனவுறுதியுடனும், நம்பிக்கையுடனும் செயல்பட்டால் இவ்வுலகில் வெற்றி பெற்று மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்ப முடியும். இதற்கு நம் தமிழக மக்கள் அனைவரும் ஒன்றுதிரண்டு விவசாயிகளுக்கும் பக்கபலமாக இருப்பார்கள் என்று நம்புகிறேன்.” என்றும் தெரிவித்தார்.