Jan 03, 2019 05:59 AM

வெங்கட்பிரபுவின் ‘பார்ட்டி’ யால் மகிழ்ச்சியடைந்த ஷாம்!

வெங்கட்பிரபுவின் ‘பார்ட்டி’ யால் மகிழ்ச்சியடைந்த ஷாம்!

15 வருடங்களாக தமிழ் சினிமாவின் முக்கிய நடிகர்களில் ஒருவராக பயணித்துக் கொண்டிருக்கும் ஷாம், தமிழ் மட்டும் இன்றி பல்வேறு மொழிகளில் நடித்து பாராட்டு பெற்று வருகிறார். சமீபகாலமாக கதைத் தேர்வில் கவனம் செலுத்திவருபவர், படங்களின் எண்ணிக்கையை குறைத்துக் கொண்டு, நல்ல கதை, நல்ல கதாபாத்திரம் என தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

 

’புறம்போக்கு’, ‘6 மெழுகுவர்த்திகள்’ போன்ற படங்களின் மூலம் தனது நடிப்பால் மக்கள் மனதில் நெருக்கமான இடம் பிடித்திருக்கும் ஷாம், தற்போது வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் ‘பார்ட்டி’ படத்தில் சிறப்பு தோற்றம் ஒன்றில் நடித்திருக்கிறார்.

 

இது குறித்து கூறிய ஷாம், “அம்மா கிரியேஷன்ஸ் சிவா, எனது அண்ணன் போன்றவர். என்னுடைய திரையுலக பயணத்தில் மிகுந்த அக்கறை காடுபவர். அவரிடமிருந்து திடீரென ஒரு நாள் அழைப்பு வந்தது. அவர் தயாரித்து வரும் ‘பார்ட்டி’ படத்தில் நடிக்குமாறு என்னிடம் கேட்டார்.

 

இயக்குநர்  வெங்கட்பிரபு இளைஞர்களை ஈர்க்கும் படம் பண்ணக்கூடியவர், அவரது படங்களில் நடிக்க வேண்டும் என்பது எனது ஆசை. ப்ளஸ் சிவா அண்ணன் படம், டபுள் தமாக்கா, உடனே ஓகே சொல்லி பிஜிக்கு போனேன். 

 

அதற்கேற்ற மாதிரி அந்த கதாபாத்திரமும் என் மனதுக்குப் பிடித்த ஒன்றாக இருந்தது. மேலும் வெங்கட்பிரபு டைரக்ஷனில் நடிப்பதும் எனக்கு கூடுதல் மகிழ்ச்சி. செம ஜாலியான, நட்புக்கு மரியாதை கொடுக்குற அற்புதமான டீம்! கிக் படத்தில் கிடைத்த நல்ல பெயர் இதிலும் கிடைக்கும்னு நம்புறேன்.

 

இன்னொரு பக்கம்  கதாநாயகனாக நடித்துவரும் ‘காவியன்’ படம், முழு வீச்சில் தயாராகி வருகிறது. இது தவிர நல்ல படங்களையும் எனது தயாரிப்பில் உருவாக்கும் பொருட்டு,  இரண்டு கதைகளைத் தேர்வு செய்துள்ளேன். மேலும் வெளி  தயாரிப்பில் அருமையான கதை ஒன்றைக் கேட்டு நடிக்க ஒப்புக்கொண்டுள்ளேன். அப்படம் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளிவர உள்ளது. 

 

எத்தனை படங்கள் நடித்தோம் என்பதைவிட, எவ்வளவு காலம் ரசிகர்களின் மனதில் நிற்கும் விதமான படங்களில் நடித்தோம் என்பதில் தான் தற்போது அதிகம் கவனம் செலுத்தி வருகிறேன். அந்தவிதமாக வரும் 2019ல் நல்ல கதையம்சம் கொண்ட படங்களில்  பார்க்கலாம்.” என்றார்.