Apr 14, 2021 01:52 PM

ரன்வீர் சிங்கை வைத்து மீண்டும் ‘அந்நியன்’ படத்தை இயக்கும் ஷங்கர்!

ரன்வீர் சிங்கை வைத்து மீண்டும் ‘அந்நியன்’ படத்தை இயக்கும் ஷங்கர்!

தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குநரான ஷங்கர், கமல்ஹாசனை வைத்து ‘இந்தியன் 2’ படத்தை இயக்கி வருகிறார். சில பிரச்சனைகளால் அப்படத்தின் படப்பிடிப்பு நின்றுவிட்ட நிலையில், புதிய படம் ஒன்றை இயக்கும் பணிகளில் ஈடுபட்ட ஷங்கர், தனது வெற்றிப் படங்களில் ஒன்றான ‘அந்நியன்’ படத்தை பிரபல பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கை வைத்து இயக்குகிறார். இதற்கான அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

‘அந்நியன்’ திரைப்படத்தின் மீளுருவாக்கமாகவும், மிக பிரம்மாண்டமான திரைப்படமாகவும் உருவாக உள்ள இப்படத்தினை பென் ஸ்டுடியோஸ் (Pen Studios) சார்பில் டாக்டர்.ஜெயந்திலால் காடா மற்றும் காட்பிளஸ் எண்டர்டெயின்மெண்ட் (God Bless Entertainment) நிறுவனம் இணைந்து தயாரிக்கிறார்கள்.

 

படம் குறித்து இயக்குநர் ஷங்கர் கூறுகையில், “இந்தி மொழியில் ’அந்நியன்’ படம் உருவாக மிகச்சிறந்த நடிப்புதிறன் கொண்ட, திரையினில் ரசிகர்களை கட்டிப்போடும் திறன் கொண்ட வசீகரம் மிக்க நடிகர் வேண்டும். அந்த வகையில் ரன்வீர் சிங் இன்றைய தலைமுறையின் இணையற்ற நடிகராக, தன் நடிப்பு திறனால் எக்காலத்திலும் அழியாத பாத்திரங்களால் அனைவரையும் கவர்ந்திருக்கிறார். அவருடன் இணைந்து இந்தியா முழுவதும் உள்ள ரசிகர்களுக்காக ‘அந்நியன்’ படத்தை மீளுருவாக்கம் செய்வது மிக மகிழ்ச்சி. தமிழ் ரசிகர்களின் நெஞ்சங்களை வென்ற இந்த அழுத்தமிகு கதை, இந்திய ரசிகர்கள் அனைவரையும் கவரும் எனும் நம்பிக்கை உள்ளது. ரன்வீரும் நானும் இப்படத்தினை இந்தி மொழியின் ரசிகர்களுக்காக, அந்த கலாச்சாரத்திற்கு ஏற்றவாராக கதையினை மாற்றம் செய்து, மீளுருவாக்கம் செய்யும், எங்கள் கனவினை புரிந்து கொள்ளும் அற்புத தயாரிப்பாளராக டாக்டர்.காடா அவர்களை பெற்றிருக்கிறோம். எல்லா வகையிலும் மிகச்சிறந்த படைப்பாக இப்படம் வெளிவரும்.’ என்றார்.

 

நடிகர் ரன்வீர் சிங் கூறுகையில், “இயக்குநர் ஷங்கர் அவர்களின் அற்புதமான கற்பனையில் உருவாகும் படைப்பில் வாய்ப்பு கிடைத்ததை பெரும் ஆசிர்வாதமாகவே கருதுகிறேன். நாம் நினைத்து பார்த்திராத பல அரிய சாதனைகளை திரையில் நிகழ்த்தி காட்டியவர் அவர். என்றாவது ஒரு நாள் அவருடன் இணைந்து படம் செய்வேண்டுமென்பது எனது கனவு. இப்படம் ஒரு பெரிய மேஜிக்கை நிகழ்த்துமென உறுதியாக நம்புகிறேன். ’அந்நியன்’ போன்ற ஒரு படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைப்பது, எந்த ஒரு நடிகருக்குமே பெரிய வரமாகும். இந்திய சினிமாவில் நான் மிகவும் மதிக்கக்கூடிய ஆளுமையான நடிகர் விக்ரம் அவர்கள் எவராலும் நிகழ்த்த முடியாத, மிகச்சிறந்த நடிப்பை இப்படத்தில் தந்திருந்தார். அவரை போல் நடிப்பது கடினம். வாழ்வில் கிடைத்திராத அரிய கதாப்பாத்திரம் இது. என் முழு உழைப்பையும் தந்து இந்த கதாபாத்திரத்தில் ரசிகர்களுடன் இணையும் மேஜிக்கை நிகழ்த்துவேன் என நம்புகிறேன். இயக்குநர் ஷங்கர் அவர்கள் ஒரு வரலாற்று ஆளுமை அவருடன் பணிபுரிவதை, மகிழ்ச்சியை  வார்த்தைகளால் சொல்ல முடியாது. இப்படம் ரசிகர்கள் கொண்டாடும் படைப்பாக இருக்கும்.” என்றார்.