Dec 24, 2020 06:05 AM

சிலம்பரசனின் புதிய படத்தின் தலைப்பு அறிவிப்பு!

சிலம்பரசனின் புதிய படத்தின் தலைப்பு அறிவிப்பு!

ஸ்டுடியோ க்ரீன் கே.இ.ஞானவேல்ராஜா தயாரிப்பில் சிம்பு நடித்த படத்தின் படப்பிடிப்பு பாதியில் நிறுத்தப்பட்டு பிறகு கைவிடப்படும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டது. இதற்கிடையே, சிம்பு தனது பழைய வம்பு தனத்தை கைவிட்டு படங்களில் நடிப்பதில் தீவிரம் காட்டி வந்ததோடு, கைவிடப்பட்ட தனது படங்களை மீண்டும் தொடங்கும் முயற்சியில் இறங்கினார். அதன்படி, ஞான்வேல்ராஜாவின் தயாரிப்பில் உருவாகும் படத்தில் மீண்டும் நடிக்க முடிவு எடுத்திருப்பதாக கூறப்பட்டது.

 

இந்த நிலையில், அப்படத்தின் இயக்குநரை மாற்றிய படக்குழு ‘சில்லுனு ஒரு காதல்’, ‘நெடுஞ்சாலை’ புகழ் ஒபிலி என்.கிருஷ்ணாவை இயக்குநராக ஒப்பந்தம் செய்த நிலையில், படத்தின் தலைப்பு இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. படத்திற்கு ‘பத்து தல’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

 

Pathu Thala

 

இப்படம் குறித்து தயாரிப்பாளர் கே.இ.ஞானவேல்ராஜா கூறுகையில், “ஸ்டுடியோ க்ரீன் (Studio Green) நிறுவனம் சார்பில் பிரமாண்ட இப்படத்தை அறிவிப்பது பெருமையாக உள்ளது. எஸ்.டி.ஆர்  அதீதமான சுறுசுறுப்புக்கும், உற்சாகத்திற்கும் பெயர் பெற்றவர் தற்போது தன்னையே முழுதாக மாற்றி வேறொரு பரிணாமத்தில் படு உற்சாகமாக அவர் வந்து நிற்பது, பெரும் மகிழ்ச்சியை தருகிறது.   இத்திரைப்படம் முடிவான உடனேயே அவரது கதாப்பாத்திரத்தை ஒட்டி, மிகச்சரியான, அதிரடியான தலைப்பை தேடினோம். பல்வேறு பெயர்களை பரிசீலித்த பின்னால் ‘பத்து தல’ தலைப்பு உறுதிசெய்யப்பட்டது. ரசிகர்கள் படம் பார்க்கும் தலைப்பின் அர்த்தத்தை அதன் ஆழத்தை படம் வழியே கண்டிப்பாக உணர்வார்கள். கௌதம் கார்த்திக் ஸ்டுடியோ க்ரீன் (Studio Green) நிறுவனத்துடன் ஏற்கனவே பணிபுரிந்துள்ளார். எங்களை பொறுத்தவரையில் அவர் எங்கள் குடுமபத்தில் ஒருத்தர். ‘பத்து தல’ படத்தில் அவரது பாத்திரம் வெகு கனமானது. அவரது திரை வாழ்வில் இப்படம் அவருக்கு மிகப்பெரும் பெயரை பெற்றுத்தரும் படமாக இருக்கும். எனது முதல் தயாரிப்பான ’சில்லுனு ஒரு காதல்’ திரைப்படத்தை இயக்கிய காலத்திலிருந்து, இயக்குநர் ஓபிலி என்.கிருஷ்ணா அவர்களும் நானும் பல்லாண்டுகளாக நல்லதொரு நட்புறவினை பேணி வருகிறோம். திரையுலகின் பெரும் ஆளுமைகள் இப்படத்தில் இணைந்துள்ள நிலையில் மேலும் பல ஆச்சர்யங்களும் இணையவுள்ளது. அது பற்றிய அறிவிப்பு விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.” என்றார்.