Sep 20, 2022 05:54 AM

என் படம் எந்த பிரச்சனையும் இல்லாமல் வெளியானது இது தான் முதல் முறை - சிம்பு நெகிழ்ச்சி

என் படம் எந்த பிரச்சனையும் இல்லாமல் வெளியானது இது தான் முதல் முறை - சிம்பு நெகிழ்ச்சி

கெளதம் மேனன் இயக்கத்தில், சிலம்பரசன் நடிப்பில் வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷ்னல் சார்பில் டாக்டர்.ஐசரி கே.கணேஷ் தயாரிப்பில் வெளியான ‘வெந்து தணிந்தது காடு’ மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருக்கும் இப்படத்தின் வெற்றியை கொண்டாடும் விதத்திலும், ஊடகங்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலும் படக்குழுவினர் சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.

 

இந்த நிகழ்வில் சிலம்பரசன், இயக்குநர் கெளதம் மேனன், தயாரிப்பாளர் ஐசரி கே.கணேஷ் உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரும் கலந்துக்கொண்டு கேக் வெட்டி வெற்றியை கொண்டாடினார்கள்.

 

நிகழ்ச்சியில் பேசிய நடிகர் சிலம்பரசன், “என் படம் எந்த பிரச்சனையும் இல்லாமல் வெளியானது இது தான் முதல் முறை எனக்கே ஆச்சர்யமாக இருந்தது. படம் இவ்வளவு வசூல் குவிக்கும் என நான் நினைக்கவில்லை. படத்தின் வெற்றி மிகப்பெரிய மகிழ்ச்சி தந்துள்ளது. என்னை மாற்றிக்கொண்டு நடிக்க வேண்டும் என நினைத்தேன். முதலில் காதல் கதை தான் செய்வதாக இருந்தது, இந்தக்கதை கேட்டவுடன் இதை செய்யலாம் என்றேன். இப்படம் தந்த கௌதம் மேனனுக்கு நன்றி. இவ்வளவு பெரிய படமாக மாற்றிய ஐசரி சாருக்கு நன்றி. இந்தப்படத்தின் ஒல்லியாக மாறி நடித்துள்ளேன் அதனால் சிலரால் என் உடம்பை கேலி செய்ய முடியவில்லை. ஒருவரின் உருவத்தை கேலி செய்யாதீர்கள், நான் பரவாயில்லை. ஆனால் அது அவர்களுக்கு பலருக்கு  வலியை தரும். இனி அடுத்தடுத்து நல்ல படங்களில் நடிப்பேன். வெந்து தணிந்தது காடு பாகம் 2 ஐ ரசிகர்கள் இன்னும் ரசிக்கும்படி நல்ல ஆக்சனோடு எழுதுங்கள். இப்படத்தில் உழைத்த அனைவருக்கும்  நன்றி” என்றார்.

 

Vendhu Thanindhathu Kaadu

 

தயாரிப்பாளர் டக்டர்.ஐசரி கே.கணேஷ் பேசுகையில், “படம் தமிழ்நாட்டை தாண்டி, பல இடங்களில் பெரிய வெற்றியை பதிவு செய்துள்ளது. இந்த திரைப்படத்தை எடுத்ததில் எங்கள் நிறுவனம் பெருமை அடைகிறது.  நடிகர் சிம்பு இந்த படத்தின் முத்து கதாபாத்திரமாக வாழ்ந்துள்ளார். இந்த படம் முழுவதிலும் அவருடைய நடிப்பு பெரிய தாக்கத்தை உருவாக்கியது. இந்த படத்திற்காக அவர் கண்டிப்பாக தேசிய விருது வாங்குவார், அதற்கு வேல்ஸ் நிறுவனம் உறுதுணையாக இருக்கும். இந்த படத்திற்காக அவர் கடின உழைப்பை கொடுத்துள்ளார். இயக்குனர் கௌதம் அவருடைய பாணியில் இல்லாமல், வேறு ஒரு பாணியில் இப்படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தை வெற்றி படமாக அவர் மாற்றியுள்ளார். இந்த படத்தின் கூடுதல் சிறப்பு ஏ ஆர் ரகுமான் சார் தான். அவருக்கு எனது நன்றிகள். ஒளிப்பதிவாளர், எடிட்டர் மற்றும் அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் எனது நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்.  படத்தின் இரண்டாம் பாகத்திற்கான பணிகள் நடைபெற்றுவருகிறது. படத்தை மக்களிடம் கொண்டு சேர்த்த ரெட் ஜெயண்ட் நிறுவனத்திற்கு நன்றி. வெந்து தணிந்தது காடு பாகம் 2  விரைவில் தயாராகும்.” என்றார்.

 

இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் பேசுகையில், “இந்த திரைப்படத்திற்கு நல்ல விமர்சனங்கள் வந்தது, அதன் மூலம் நிறைய இடங்களுக்கு படம் சென்றது, அதுபோல எதிர்மறையாக வந்த விமர்சனங்களுக்கும் நன்றி.  ஒரு திரைப்படம் செய்வது மிகவும் கடினமான விஷயமாக இருக்கும், அதற்குள் பல சிக்கல்களும் இருக்கிறது. அதை கடந்து தான்  இந்த திரைப்படம் உருவாகியுள்ளது. உங்களால் இந்த படம் பல இடங்களுக்கு சென்றது, அதற்கு உங்களுக்கு நன்றியை கூறிகொள்கிறேன். எனக்கு உறுதுணையாக இருந்த தயாரிப்பாளர் ஐசரி கணேஷ்க்கு நன்றி. எனக்கு முழு சுதந்திரம் அவர் கொடுத்தார். நான் ஒரு கதை கொண்டு வரும் போது, அதை என்னை நம்பி எப்பொழுதும் ஒத்துகொள்ளும் சிம்புவிற்கு நன்றி.  சிம்பு மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். இதுபோன்ற ஒரு படத்தை எடுக்க எனக்கு உதவிகரமாக இருந்த சிம்புவிற்கும், தயாரிப்பாளருக்கும் நன்றி. படத்தின் வெற்றிக்கு ஏ ஆர் ரகுமான் அவர்கள் பெரும்பங்காற்றினார், அவருடைய மல்லிபூ பாடல் இப்போது அனைவரும் பாராட்டிகொண்டு இருக்கின்றனர் என்பது மகிழ்ச்சி.” என்றார்.

 

Vendhu Thanindhathu Kaadu

 

நிகழ்ச்சியில் ஒளிப்பதிவாளர் சித்தார்த் பேசுகையில், “இந்த படத்தில் பணிபுரியும் வாய்ப்பு கிடைத்தது எனக்கு மகிழ்ச்சி. சிலம்பரசன், கௌதம் மேனன், ஏ ஆர் ரகுமான் உடன் இணைந்து இந்த படத்தில் பணிபுரிந்தது பெருமையாக இருக்கிறது. இது எனது முதல் படம், ஆனால் அதை பற்றிய பதட்டம் எனக்கு வராமல் இருந்ததற்கு தயாரிப்பாளர் ஐசர் கணேஷ், இயக்குனர் கௌதம் மேனன், நடிகர் சிலம்பரசன் அவர்களுக்கு நன்றி.” என்றார்.

 

நடிகர் நீரஜ் மாதவ் பேசுகையில், “இது எனது முதல் தமிழ் படம், ஆனால் சென்னையில் தான் எனது படிப்பை முடித்தேன். தமிழ் படம் பண்ண வேண்டும் என்ற என் ஆசை இந்த படத்தில் நிறைவேறியுள்ளது. கௌதம் மேனன் சாரின் ரசிகனாக இருந்த எனக்கு, அவருடன் பணிபுரியும் வாய்ப்பு இந்த படத்தின் மூலமாக எனக்கு கிடைத்தது. பல ஆண்டுகளுக்கு முன்னாடி சிலம்பரசன் அண்ணா ஒரு பேட்டியில் என்னை பாராட்டினார் இன்று அவருடன் நடித்துள்ளது மகிழ்ச்சி. ரகுமான் சார் உடைய இசையில் பாடியது எனக்கு மகிழ்ச்சி. படத்திற்கு நேர்மறையான விமர்சனம் வருவது மகிழ்ச்சியாக இருக்கிறது.” என்றார்.