புதிய பரிமாணத்தில் மீண்டும் வெளியாகும் ‘வசந்த மாளிகை’!

காலத்தால் அழியாத தமிழ் சினிமாவின் காதல் காவியங்களில் ஒன்றான ‘வசந்த மாளிகை’ திரைப்படம் புதிய பரிமாணத்தில் மீண்டும் வெளியாகிறது.
நடிகர் திலகம் சிவாஜி கணேசன், வாணிஸ்ரீ னடிப்பில், அன்றைய காலக்கட்டத்தில் கலரில் வந்து வெள்ளி விழா கொண்டாடிய இப்படத்தில் பாலாஜி, சி.ஐ.டி சகுந்தலா உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள்.
கே.வி.மகாதேவன் இசையில், கவியரசு கண்ணதாசன் எழுதிய இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் இப்போதும் தமிழகத்தின் மூளை முடக்குகளில் ஒலித்துக்கொண்டு தான் இருக்கிறது.
”மயக்கம் என்ன....”, “கலைமகளே கைபொருளே...”, “இரண்டு மனம் வேண்டும்...”, ”ஏன்...ஏன்...ஏன்...” என்று காதல் ரசம் சொட்டும் இப்படத்தின் பாடல்கள் டி.எம்.செளந்தரராஜன், பி.சுசீலா, எல்.ஆர்.ஈஸ்வரி ஆகியோரின் காந்த குரலோடு, தமிழக காற்றில் கலந்துவிட்டது.
டி.ராமாநாயுடு தயாரிப்பில் பிரகாஷ்ராவ் இயக்கிய இப்படம், பிரபல இயக்குநரும், கதையாசிரியருமான வி.சி.குகநாதன் மேற்பார்வையில் டிஜிட்டல், ஒலி, ஒளி அமைப்புகளை சீராக்கி, வண்ணம் சரிபார்த்து, புதிய பரிமாணத்தில் தயாராகி உள்ளது.
டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் புதிய பரிணாமம் பெற்றுள்ள ‘வசந்த மாளிகை’ படத்தை ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் விரைவில் தமிழகம் முழுவதும் ஏராளமான திரையரங்குகளில் வெளியிட உள்ளது.