மீண்டும் குறும்படத்தில் நடிக்கும் சிவகார்த்திகேயன்!

தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலம் பிரபலமான சிவகார்த்திகேயன், தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கிறார். ’சீமராஜா’ கலவையான விமர்சனங்களை எதிர்கொண்டாலும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பிடித்த படமாக ‘சீமராஜா’ இருக்கிறது.
வசூலில் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி வெற்றிகரமாக சீமராஜா ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் சிவகார்த்திகேயன் தனது அடுத்தப் படங்களில் பிஸியாகியிருக்கிறார்.
இந்த நிலையில், குறும்படம் ஒன்றில் சிவகார்த்திகேயன் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சினிமாவில் நடிப்பதற்கு முன்பு பல குறும்படங்களில் நடித்திருக்கும் சிவகார்த்திகேயன், தற்போது மீண்டும் குறும்படத்தில் நடிக்கப் போகிறார்.
‘மோதி விளையாடு பாப்பா’ என்ற தலைப்பில் உருவாகும் இந்த குறும்படம் குழந்தை பாலியலுக்கு எதிரான விழிப்புணர்வு படமாக உருவாகிறது. இப்படத்தை இயக்குநர் திரு இயக்குகிறார்.
தற்போது இதன் படப்பிடிப்பு தொடங்கியுள்ள நிலையில், இந்த குறும்படம் விரைவில் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது.