டிவி நடிகரை சினிமா ஹீரோவாக்கும் சிவகார்த்திகேயன்!

தொலைக்காட்சியில் இருந்து சினிமாவுக்கு வந்த சிவகார்த்திகேயன் குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகர்களில் இடத்தை பிடித்து விட்டார். தமிழ் சினிமாவின் டாப் 5 ஹீரோக்களில் சிவகார்த்திகேயனும் தற்போது ஒருவராக திகழ்கிறார்.
சிவகார்த்திகேயன் படங்களுக்கு கிடைக்கும் ஓபனிங்கை பார்த்து பல மாஸ் ஹீரோக்களும் ஆச்சரியப்படும் நிலையில், தற்போது சிவகார்த்திகேயன் நடிக்கும் படங்கள் அனைத்தும் மிகப்பெரிய பொருட்ச்செலவில் பிரம்மாண்டமான படங்களாக உருவாகிறது.
இதற்கிடையே, சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் என்ற நிறுவனத்தை தொடங்கி இருக்கும் சிவகார்த்திகேயன், அதன் மூலம் சொந்தமாக திரைப்படங்களை தயாரித்து வருகிறார். அவரது முதல் தயாரிப்பாக ‘கனா’ படம் உருவாகுகிறது. ஐஸ்வர்யா ராஜேஷ், சத்யராஜ் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படம் பெண்கள் கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவாகும் படமாகும். மேலும், இந்திய சினிமா வரலாற்றில் பெண்கள் கிரிக்கெட்டை மையமாக வைத்து வெளியாக இருக்கும் முதல் திரைப்படமும் இது தான்.
இந்த நிலையில், ‘கனா’ படத்திற்கு பிறகு தொடர்ந்து படங்களை தயாரிக்க முடிவு செய்திருக்கும் சிவகார்த்திகேயன், தான் அடுத்து தயாரிக்கும் படத்தில் பிரபல தொலைக்காட்சி நடிகர் ஒருவரை ஹீரோவாக அறிமுகப்படுத்த இருக்கிறார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி தொடர் மூலம் பிரபலமடைந்த ரியோவை தான் சிவகார்த்திகேயன் சினிமாவில் ஹீரோவாக அறிமுகப்படுத்த இருக்கிறார். தற்போது இப்படத்திற்கான ஆரம்ப பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
விரைவில் இப்படம் குறித்த முழு விபரம் அறிவிக்கப்பட உள்ளது.