May 14, 2018 04:56 PM

15 கோடி சம்பளத்தை 8 கோடியாக குறைத்த சிவகார்த்திகேயன்!

15 கோடி சம்பளத்தை 8 கோடியாக குறைத்த சிவகார்த்திகேயன்!

24 ஏ.எம் நிறுவனத்திற்காக தொடர்ந்து பல படங்களில் நடித்து வரும் சிவகார்த்திகேயன், திடீரென்று ஞானவேல்ராஜாவின் ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்கும் படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்தை ராஜேஷ் இயக்குகிறார். இதில் ஹீரோயினாக நயந்தாரா ஒப்பந்தமாகியுள்ளார்.

 

ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் சார்பில் சிவகார்த்திகேயன் ஒரு படத்தில் நடிக்க ஏற்கனவே அக்ரிமெட்ன் போடப்பட்டது. அப்போது சிவகார்த்திகேயன் வளர்ந்து வரும் நடிகராக இருந்தார். அந்த சமயத்தில் அவர் சம்பளமாக ரூ.80 லட்சம் பெற்று வந்ததாகவும் கூறப்படுகிறது. அந்த சம்பளத்திற்கு தான் ஞானவேல்ராஜா சிவகார்த்திகேயனை ஒப்பந்தம் செய்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால், சில காரணங்களால் அப்போது அந்த படத்தில் சிவகார்த்திகேயனால் நடிக்க முடியாமல் போய்விட்டது.

 

இதற்கிடையே, சிவகார்த்திகேயன் முன்னணி நடிகராக உயர்ந்ததோடு சிறந்த ஓபனிங் உள்ள நடிகராகவும் உருவெடுத்தவுடன், ஞானவேல்ராஜா பழைய அக்ரிமெண்டை காண்பித்து சிவகார்த்திகேயனை தனது தயாரிப்பில் நடிக்க வைக்க மீண்டும் முயற்சிகளை மேற்கொண்டார். இதையடுத்து இந்த விவகாரம் தயாரிப்பாளர் சங்கத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. மேலும், சிவகார்த்திகேயன் ஒப்பந்தம் போடும் போது வாங்கிக்கொண்டிருந்த ரூ.80 லட்சம் சம்பளத்தை தான் தருவேன், என்று ஞானவேல்ராஜா கூறியதாகவும், ஆனால் அதற்கு மறுப்பு தெரிவித்த சிவா, தனது தற்போதைய சம்பளமான ரூ.15 கோடி கேட்டாராம்.

 

இதனால், இந்த விவகாரம் முடிவுக்கு வராமல் இழுபறியாக இருந்த நிலையில், தற்போது சம்பளம் பிரச்சினை பேசி முடிக்கப்பட்டு விட்டதாம். இந்த படத்திற்காக சிவகார்த்திகேயன் தனது தற்போதைய சம்பளமான 15 கோடி ரூபாய்க்கு பதிலாக ரூ.8 கோடியை சம்பளமாக பெற்றுக்கொள்ள முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.