May 18, 2018 07:11 AM

ஸ்ரீதேவியின் மரணம் திட்டமிட்ட கொலை! - போலீஸ் அதிகாரி தகவலால் பரபரப்பு

ஸ்ரீதேவியின் மரணம் திட்டமிட்ட கொலை! - போலீஸ் அதிகாரி தகவலால் பரபரப்பு

உறவினரின் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக துபாய் சென்ற நடிகை ஸ்ரீதேவி கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி உயிர் இழந்தார். அவரது மரணம் பல்வேறு சந்தேகங்களையும், சர்ச்சைகளையும் எழுப்பிய நிலையில், இறுதியாக மது போதையில் குளியல் தொட்டியில் மூழ்கி அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது.

 

இந்த நிலையில், ஸ்ரீதேவியின் மரணம் திட்டமிட்ட கொலை என்று ஓய்வு பெற்ற டெல்லி துணை போலீஸ் கமிஷ்னர் வேத் பூஷன் தெரிவித்துள்ளார். அவரது இந்த தகவலால் ஸ்ரீதேவின் மரணத்தில் மீண்டும் சர்ச்சை வெடித்துள்ளது.

 

தனியார் துப்பறியும் நிறுவனம் ஒன்றை நடத்தி வரும் வேத் பூஷன், ஸ்ரீதேவி மரணம் அடைந்த விதத்தை பார்த்தாலே அவரை திட்டமிட்டு கொலை செய்துள்ளனர் என்று தெரிகிறது, என்று கூறியுள்ளார்.

 

ஒருவரை குளியல் தொட்டியில் வலுக்கட்டாயமாக இறக்கி நீரில் மூழ்கடித்து அவர் மூச்சு நிற்கும் வரை அழுத்திப் பிடிக்கலாம். அவ்வாறு செய்யும்போது தடயமே இல்லாமல் செய்துவிட்டு அது தானாக நடந்தது போன்று காண்பிக்கலாம், என்றும் அவர் கூறியுள்ளார்.

 

மேலும், இது குறித்து கூறிய அவர், துபாய் சட்டத்தை மதிக்கிறேன். ஆனால் துபாய் போலீஸ் அளித்த தடயவியல் அறிக்கை திருப்தி அளிப்பதாக இல்லை. ஸ்ரீதேவிக்கு உண்மையில் நடந்தது என்ன என்று தெரிய வேண்டும். நிறைய கேள்விகளுக்கு பதில் கிடைக்காததால் துபாய் சென்றோம்.

 

துபாயில் ஸ்ரீதேவி தங்கியிருந்த ஜுமைரா எமிரேட்ஸ் டவர்ஸ் ஹோட்டலுக்கு சென்றோம். ஆனால் அவர் தங்கியிருந்த அறையில் எங்களை நுழையவிடவில்லை. அதனால் பக்கத்து அறையில் தங்கி என்ன நடந்திருக்கும் என்று விசாரித்தோம். அவர் மரணத்தில் மர்மம் உள்ளது. எதையோ மறைக்கிறார்கள், என்று தெரிவித்தார்.

 

வேத் பூஷனின் இந்த தகவலால் ஸ்ரீதேவியின் மரணம் மீண்டும் பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.