நடன இயக்குநரை இயக்குநராக அறிமுகப்படுத்தும் பிரபுதேவா!

இந்திய சினிமாவின் முக்கியமான இயக்குநர்கள் பட்டியல் இடம் பிடித்த பிரபு தேவா, தற்போது படம் இயக்குவதை நிறுத்திவிட்டு நடிப்பதில் தீவிரம் காட்டி வருகிறார். அவர் நடித்த ‘தேவி’ வெற்றியடைந்ததை தொடர்ந்து நடிப்பதில் மும்முரம் காட்டி வருபவர், பல அறிமுக இயக்குநர்களிடமும் கதை கேட்டு வருகிறார்.
சமிபத்தில் வெளியான ‘லட்சுமி’ படம் வெற்றியை தொடர்ந்து பிரபு தேவா புதிய படம் ஒன்றில் ஒப்பந்தமாகியிருக்கிறார். ’தூத்துக்குடி’ படம் மூலம் ஹீரோவாக அறிமுகமான நடன இயக்குநர் ஹரிகுமார் இயக்கும் இப்படத்திற்கு ‘தேள்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தை ஸ்டுடியோ க்ரீன் சார்பில் ஞானவேல்ராஜா தயாரிக்கிறார்.
‘தூத்துக்குடி, ‘மதுரை சம்பவம்’ உள்ளிட்ட பல படங்களில் ஹீரோவாக நடித்திருக்கும் நடன இயக்குநர் ஹரிகுமார், ’தேள்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.
இப்படத்திற்கு சி.சத்யா இசையமைக்க, விக்னேஷ் ஒளிப்பதிவு செய்கிறார். பிரவீன் கே.எல் எடிட்டிங் செய்ய, கலையை செந்தில் ராகவன் நிர்மாணிக்கிறார். அன்பறிவு ஆக்ஷன் காட்சிகளை வடிவமைக்கிறார்கள். பொன் பார்த்திபன் மற்றும் ஹரிகுமார் இணைந்து வசனம் எழுதியிருக்கிறார்கள்.
இப்படம் குறித்து கூறிய தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா, “ஒரு புகழ் வாய்ந்த நடன இயக்குநரை இன்னொரு நடன இயக்குநர் ஒரு படத்தில் இயக்குவது வெறும் யதேசையான நிகழ்வு மட்டும் அல்ல, நான் நடனம் என்பது உணர்வுகளின் ஒரு முக்கியமான பிரிவு என்பதை எப்போதும் நம்புகிறேன். நடனத்தில் அனுபவமிக்க இந்த இருவரும் அனைத்து தரப்பு மக்களையும் கவரும் வகையில் எமோஷன் கலந்த ஒரு ஆக்ஷன் படத்தை கொடுக்க இருக்கிறார்கள்.
ஸ்டியோ க்ரீன் நிறுவனம் இந்த ஜானரில் படத்தை எடுக்க உண்மையாக உழைக்கும். ‘தேள்’ நிச்சயமாக எங்கள் நிறுவனத்திற்கு மேலும் பெருமை சேர்க்கும். சிறந்த தொழில்நுட்ப கலைஞர்களை தேர்வு செய்திருக்கிறோம். கதாநாயகி மற்றும் நடிகர்கள் தேர்வு நடந்து வருகிறது.” என்றார்.
சமீபத்தில் பூஜையுடன் தொடங்கியிருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.