Oct 23, 2020 03:28 PM

”எனக்கு வலி ஏற்படுத்தும் விஷயம் தான்” - படம் ரிலீஸ் தள்ளிப்போனது குறித்து சூர்யா உருக்கம்

”எனக்கு வலி ஏற்படுத்தும் விஷயம் தான்” - படம் ரிலீஸ் தள்ளிப்போனது குறித்து சூர்யா உருக்கம்

சூர்யா நடித்து, தனது 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் மூலம் தயாரித்துள்ள படம் ‘சூரரைப் போற்று’. ‘இறுதிச்சுற்று’ புகழ் சுதா கொங்கரா இயக்கியிருக்கும் இப்படம் வரும் அக்டோபர் 30 ஆம் தேதி அமோசான் ஒடிடி தளத்தில் வெளியாக இருந்த நிலையில், திடீரென்று படத்தை குறிப்பிட்ட தேதியில் ரிலீஸ் செய்ய முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

 

இந்த நிலையில், ‘சூரரைப் போற்று’ ரிலீஸ் தள்ளிப்போனது குறித்து நடிகர் சூர்யா உருக்கமான கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:

 

இது வழக்கமாக நாம் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ளும் ஒரு கடிதம் அல்ல. சில நேரம் எனது சூழல் இதற்கு முன் சந்தித்திராத வகையில் அமையும். இப்போது நான் மனந்திறந்த நிலையில் வெளிப்படையாக உங்கள் முன் நிற்கிறேன். பேச விரும்புகிறேன். ஏனென்றால் நீங்கள் தான் என்னை இந்த இடத்திற்குக் கொண்டு வந்து நிற்க வைத்திருக்கிறீர்கள். எல்லா வகையிலும்.உங்களது பிரதிபலன் பாராத அன்பும் பாராட்டும் உண்மையும் தான் இந்த தகுதியை எனக்கு வாங்கி கொடுத்திருக்கிறது.

 

'சூரரைப்போற்று'  படம் தொடங்கிய போதே இது ஒரு சவாலான முயற்சி என்று அதை எதிர்கொள்வதில் மகிழ்ச்சியாக நாங்கள் உணர்ந்தோம். இதற்கான படப்பிடிப்புத் தளங்கள் இதுவரை காணாதவை. பணிபுரிந்த புதிய புதிய படப்பிடிப்பு இடங்கள், சந்தித்த மனிதர்கள், சந்தித்த வெவ்வேறு மொழியினர், பணியாற்றிய திறமைசாலிகள் என அனைத்தும் மறக்க முடியாதவை. அவை வித்தியாசமானவை மட்டுமல்ல குறிப்பிடத்தக்கதாகவும் இருந்தவை. 'மாறா'  என்ற அந்த உலகத்தில் கொண்டு சேர்க்கும் விதமாக இருந்த அந்த பிரம்மாண்ட அனுபவத்தை வார்த்தைகளால் விளக்கிவிட முடியாது.

 

படத்தில் விமானப்படை சார்ந்த காட்சிகள் வருவது உங்கள் அனைவருக்கும் தெரியும். அதனால் அது சம்பந்தமாக ஏராளமான நடைமுறைகளும் அனுமதிகளும் பெற வேண்டியிருந்தது. இப்படம் தேசிய பாதுகாப்பு பற்றி பேசுவதால் அது சம்பந்தமாக இந்திய விமானப்படையுடன் நாங்கள் தொடர்பு கொண்டு அணுகி அவர்களது ஒத்துழைப்பையும் பெற வேண்டி இருந்தது. படம் வெளியிடுவதற்கு முன் அவர்களிடம் தடையின்மை சான்றிதழ் பெற வேண்டி இருப்பதால் பட வெளியீடு சற்றுத் தாமதம் ஆகிறது. இது வழக்கமான நடைமுறை தான் வேறொன்றுமில்லை. கவலை வேண்டாம். ’சூரரைப் போற்று’படம் என் இதயத்திற்கு நெருக்கமான படம். தனிப்பட்ட முறையில் என்னை மிகவும் பாதித்த கதை இது. துரதிஷ்டவசமாக சிறு தாமதம் ஆகிறது.

 

படம் தாமதம் என்பது எனக்கும் சிறு வலி ஏற்படுத்திடும் விஷயம் தான், .ஏனென்றால் அவ்வளவு எதிர்பார்ப்புடன் நீங்கள் இருக்கிறீர்கள். இந்த  தாமதம் எதிர்பார்ப்பைக் கூட்டும் ஒரு அம்சமாக நாம் நேர்நிலையாக எடுத்துக் கொள்வோம். இந்த சின்ன இடைவெளியை மாறாவின் உலகத்தில் நீங்கள் பிரவேசிக்க ஒரு முன் தயாரிப்பு நேரமாக எடுத்துக்கொள்ளலாம். இப்படி பாசிட்டிவாக எடுத்துக் கொள்வோம். 

 

விரைவில் ஒரு சிறப்பு முன்னோட்டத்தை வெளியிட இருக்கிறோம். இத்துடன் ஒரு அழகான நட்பை பற்றிய பாடலை வெளியிடுகிறோம். அது நம் நட்புக்கான அர்ப்பணிப்பாகவும் அன்பின் அடையாளமாகவும் இருக்கும்.

 

இவ்வாறு சூர்யா கடிதத்தில் தெரிவித்துள்ளார்.