Feb 23, 2024 08:29 AM

குழந்தை பிறப்பு பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் ‘பர்த் மார்க்’ திரைப்படம் வெளியானது!

குழந்தை பிறப்பு பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் ‘பர்த் மார்க்’ திரைப்படம் வெளியானது!

‘சார்பட்டா பரம்பரை’ பட புகழ் டான்ஸிங் ரோஸ் ஷபீர் நாயகனாக, ரஜினிகாந்தின் ‘ஜெயிலர்’ பட புகழ் மிர்னா நாயகியாக நடித்திருக்கும் படம் ‘பர்த் மார்க்’. ஸ்ரீராம் சிவராமன் மற்றும் விக்ரமன் ஸ்ரீதரன் எழுத்து மற்றும் தயாரிப்பில், விக்ரம் ஸ்ரீதரன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம் இன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

 

குழந்தை பிறப்பு பற்றிய விழுப்புணர்வை ஏற்படுத்தும் கதைக்களத்தைக் கொண்ட இப்படம் வெளியீட்டுக்கு முன்பாக பத்திரிகையாளர்களுக்கு திரையிடப்பட்டது. படத்தை பார்த்த நிருபர்கள் வித்தியாசமான முயற்சியாக இருப்பதாக பாராட்டு தெரிவித்தார்கள்.

 

மேலும், திரைப்படம் திரையிடல் நிகழ்ச்சியில் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசிய நடிகர் ஷபீர் கல்லாரக்கல், “”’சார்பட்டா’ படம் மூலம் நீங்கள் கொடுத்த அனைத்து அன்புக்கும் நன்றி. 'சார்பட்டா' படத்திற்குப் பிறகு நான் முதலில் கையெழுத்துப் போட்ட படம் இது. இதன் பிறகுதான், 'கிங் ஆஃப் கொத்தா', 'நட்சத்திரம் நகர்கிறது' மற்றும் இன்னும் சில தெலுங்கு படங்களில் நடித்தேன். எனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இயக்குநர் கொடுத்த இன்புட் வைத்தே படத்தில் என்னுடைய சிறந்த நடிப்பைக் கொடுத்திருக்கிறேன். மிர்னாவுக்கு இன்னைக்கு உடம்பு சரியில்லை. அதனால்தான், அவரால் இங்கு வரமுடியவில்லை. படத்தில் லிப்லாக் வைக்க வேண்டும் என்று திணிக்கவில்லை. கதைக்கு அந்த எமோஷன் தேவைப்பட்டது. நிச்சயம் படம் உங்களுக்குப் பிடிக்கும்” என்றார். 

 

Birth Mark Press Meet

 

இயக்குநர் விக்ரம் ஸ்ரீதரன் பேசியதாவது, ”குழந்தைப் பிறப்பு முறை பற்றி இந்தப் படம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பதுதான் எங்கள் நோக்கம். ’பர்த் மார்க்' என ஆங்கிலத்தில் தலைப்பு வைக்கக் காரணம் கதையோடு சேர்ந்த வந்த விஷயம் என்பதால் தான். இந்த இரண்டு வருடங்களில் ஒவ்வொரு விஷயமும் 'பர்த் மார்க்' போல எங்கள் கூடவே ஒட்டிக் கொண்டது. கார்கில் போருக்குப் பிறகு 1999-ல் நடக்கும் கதையாக இது உருவாக்கப்பட்டுள்ளது. அப்போதிருக்கும் மனநிலையைதான் ஷபீரின் டேனி கதாபாத்திரம் திரையில் பிரதிபலித்திருக்கும். மிர்னாவும் ஜெனி என்ற கர்ப்பிணி பெண்ணாக சிறப்பான நடிப்பைக் கொடுத்திருக்கிறார். நிஜமான கர்ப்பிணியின் வயிறு, அதன் எடை போலவே உண்மையான புராஸ்தெடிக் வயிறு மிர்னாவுக்கு செய்து கொடுத்தோம். அதை வைத்துக் கொண்டே அவர் படம் முழுக்க நடந்து, ஓடி நடித்திருப்பார். அது பெரிய விஷயம். போர் வீரனுடைய மனநிலை மற்றும் கர்ப்பிணி பெண்ணின் மாற்றங்கள் என அனைத்தையும் முறையாக ரிசர்ச் செய்துதான் உருவாக்கி இருக்கிறோம் இதற்கே எங்களுக்கு ஒரு வருடம் ஆனது. படத்திற்கு விஷால் சந்திரசேகரின் இசை மிகப்பெரிய பலம். படம் பார்த்துவிட்டு உங்கள் ஆதரவை நீங்கள் கொடுக்க வேண்டும்.” என்றார்.

 

இந்த நிகழ்வில், நடிகைகள் தீப்தி, பொற்கொடி, ஒளிப்பதிவாளர் உதய் தங்கவேல், படத்தொகுப்பாளர் இனியவன் பாண்டியன் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துக்கொண்டார்கள்.