Nov 11, 2018 06:24 AM

காத்திருந்த ‘செய்’ படக்குழுவினருக்கு நடக்கும் அநீதி! - கவலை தெரிவித்த நகுல்

காத்திருந்த ‘செய்’ படக்குழுவினருக்கு நடக்கும் அநீதி! - கவலை தெரிவித்த நகுல்

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் ஒழுங்கு முறை குழுவின் மூலம் வாரத்திற்கு நான்கு படங்கள் மட்டுமே ரிலீஸ் செய்யப்படுகிறது. சென்சார் சான்றிதழ் பெற்ற தேதியை வைத்தே, படங்களில் ரிலீஸ் தேதியும் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது.

 

அந்த வகையில், படத்து எடுத்து முடித்து ரிலிஸுக்காக கடந்த ஒரு வருடமாக காத்திருக்கும் ‘செய்’ படத்தை நவம்பர் 16 ஆம் தேதி வெளியிட்டுக் கொள்ளலாம் என்றும், தமிழகத்தில் 150 தியேட்டர்கள் ஒதுக்கப்படும் என்று தயாரிப்பாளர் சங்கம் அறிவித்ததோடு, அதற்கான கடிதத்தையும் வழங்கியுள்ளது.

 

இதற்கிடையில், தீபாவளியன்று வெளியாக இருந்த விஜய் ஆண்டனியின் ‘திமிரு புடிச்சவன்’ படம் திடீரென்று வெளியாகாமல் பின்வாங்கியதோடு, தற்போது 16 ஆம் தேதி வெளியாக இருப்பதாகவும், இதனால் ‘செய்’ படத்திற்கு 60 முதல் 70 திரையரங்கங்கள் மட்டுமே கொடுக்கப்படும் என்று விநியோகஸ்தர்கள் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

விநியோகஸ்தர்களின் இத்தகைய நடவடிக்கையால் ‘செய்’ படக்குழு கவலை அடைந்துள்ளது. 

 

நேற்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் தனது கவலையை தெரிவித்த ஹீரோ நகுல், “தயாரிப்பாளர் சங்கத்தின் கட்டுப்பாட்டுக்கு கட்டுப்பட்டு, படம் முடிந்தாலும் கடந்த ஒரு வருடமாக ரிலிஸுக்கு காத்திருக்கும் தங்களிடம் ரிலீஸுக்கான அனுமதி கடிதம் இருக்கிறது. அதெ சமயம், திடீரென்று 16 ஆம் தேதி வெளியாக இருக்கும் ‘திமிரு புடிச்சவன்’ படத்திற்கு தயாரிப்பாளர் சங்கம் அனுமதி கடிதம் வழங்கவில்லை என்று தெரியவந்துள்ளது. அப்படி இருக்கையில், எப்படி திமிரு புடிச்சவன் வரலாம். தீபாவளி தேதியை கேட்டு வாங்கிய திமிரு புடிச்சவன், அந்த தேதியில் வரவில்லை என்றால், படங்கள் வெளிவராத வேறு தேதியில் வெளியாகலாமே அதை விட்டுவிட்டு, எங்க படத்துடன் ஏன் வெளியாக வேண்டும்?” என்று கேள்வி எழுப்பினார்.

 

மேலும், திமிரு புடிச்சவன் படத்திற்காக ‘செய்’ படத்திற்கு ஒதுக்கப்பட்ட திரையரங்கங்கள் பறிக்கப்பட்டு வருவதாகவும் குற்றம் சாட்டிய அவர், தயாரிப்பாளர் சங்கம் தங்களுக்கு ஒத்துழைப்பு அளித்து வருவதாகவும், தெரிவித்துள்ளார்.

 

Sei

 

தயாரிப்பாளர் மன்னு பேசுகையில், “நான் தமிழ் திரையுலகிற்கு புதிய தயாரிப்பாளர் என்பதால், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் எனக்கு ஆதரவாக இருக்கிறது. அவர்களின் இந்த ஒத்துழைப்பிற்காக நாங்கள் எங்களுடைய படக்குழுவினரின் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். ஒட்டுமொத்த திரையுலகினரின் ஆதரவுடன்  திட்டமிட்டப்படி ‘செய் ’படம் நவம்பர் 16 ஆம் தேதியன்று வெளியாகும் என்ற உறுதியான நம்பிக்கையுடன் இருக்கிறோம்.” என்றார்.

 

படத்தின் நாயகி அன்ஷால் முன்ஜால் பேசுகையில், ”இந்த படம் திரில்லர் ஜேனர் என்றிருந்தாலும் அனைத்து தரப்பினரையும் கவரும் வகையில் உருவாகியிருக்கிறது. இந்த படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமாவதை பெருமிதமாக கருதுகிறேன்.” என்றார்.

 

ட்ரிப்பி  டர்ட்டில் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் மன்னு தயாரித்திருக்கும் ‘செய்’ படத்தில் நகுல், அன்ஷால் முன்ஜால், பிரகாஷ்ராஜ், நாசர், அஞ்சலி, ப்ளாரன் பெரைரா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி ராஜ்பாபு இயக்கியிருக்கிறார்.

 

யார் எந்த வித தடைகளை ஏற்படுத்தினாலும் வரும் நவம்பர் 16 ஆம் தேதி ‘செய்’ வெளியாவது உறுதி என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். அப்படி மீறி யாராவது எதாவது பிரச்சினை செய்தால் நீதிமன்றத்தை நாடவும் தயாராக இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.