Mar 04, 2021 03:11 AM

மோசடியின் மொத்த உருவமாக திகழும் நடிகர் விமல் - திரையரங்க உரிமையாளர் புகார்

மோசடியின் மொத்த உருவமாக திகழும் நடிகர் விமல் - திரையரங்க உரிமையாளர் புகார்

சட்டமன்ற தேர்தலில், நடிகர் விமலின் மனைவி மணப்பாறை தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட விருப்பமனு அளித்துள்ளார். நடிகர் விமலும், அவருடைய மனைவி பிரியதர்ஷினியும் திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினை நேரில் சந்தித்து விருப்பமனு வழங்கினார்கள்.

 

இந்த நிலையில், மோசடியின் மொத்த உருவமாக திகழும் நடிகர் விமலுக்கு திமுக சீட் கொடுத்தால், கட்சிக்கு தான் அவப்பெயர் ஏற்படும், என்றும் திரையரங்க உரிமையாளர் திமுக தலைமை கழகத்திற்கு புகார் அளித்துள்ளார். 

 

இது தொடர்பாக அவர், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

 

 

03.032021

மதுக்கூர்

 

அனுப்புநர்

 

N.திருநாவுக்கரசு,

No.49/1,செட்டி தெரு,

மதுக்கூர் போஸ்ட்,

பட்டுக்கோட்டை தாலுகா,

தஞ்சாவூர் மாவட்டம்

 

பெறுநர்

 

உயர்திரு. தலைவர்

திராவிட முன்னேற்ற கழகம்,

அண்ணா அறிவாலயம், 

தேனாம்பேட்டை,

சென்னை.

 

வணக்கம்,

 

நான் பட்டுக்கோட்டை தாலுக்காவில் உள்ள மதுக்கூரில் வசித்து வருகிறேன். 2016ம் ஆண்டு பட்டுக்கோட்டையில் திரையரங்கம் ஒன்றை குத்தகைக்கு எடுத்து நடத்தி வந்தேன். அப்போது 'மன்னர் வகையறா' படத்தின் படப்பிடிப்பிற்காக பட்டுக்கோட்டை வந்திருந்த நடிகர் விமல் என்னுடன் நெருக்கமாக பழக ஆரம்பித்தார். படப்பிடிப்பு துவங்கிய ஒரே வாரத்தில் என்னை அழைத்த நடிகர் விமல் 'மன்னர் வகையறா' என்ற படத்தை அவரே தயாரிப்பதாகவும், செலவுகளுக்கு பணம் தேவைப்படுவதாகவும், சென்னைக்கு சென்றவுடன் அனுப்பி வைப்பதாகவும் கூறி கடன் கேட்டார். நானும் கொஞ்சம் கொஞ்சமாக பணம் கொடுத்து கொண்டே இருந்தேன். ஒரு கட்டத்தில் மேலும் 50 இலட்ச ரூபாய் மொத்தமாக தேவைப்படுவதாகவும், ஒரே மாதத்தில் திருப்பி தருவதாகவும் கூறினார். இதனை நம்பி எனது வீட்டை அடமானம் வைத்து பணம் வாங்கி கொடுத்தேன். நான் கொடுத்த பணத்திற்கு ஈடாக ரூ.80 இலட்சத்திற்கு காசோலையும் (இந்தியன் வங்கி காசோலை எண் : 076759, கோடம்பாக்கம் கிளை) கொடுத்தார். படப்பிடிப்பு முடிந்த பிறகு அவர் சொன்ன தேதியில் வங்கியில் காசோலையை செலுத்திய போது, போதிய பணமில்லாமல்காசோலை திரும்பி விட்டது. இது குறித்து பல முறை முறையிட்டும் இதுவரை என் பணத்தை  திருப்பித்தரவில்லை. கடன் கொடுத்தவர்கள் என்னை நெருக்கியதால் வேறு வழியின்றி என்னுடைய வீட்டை விற்று கடனை அடைத்தேன். நடிகர் விமலுக்கு உதவப்போய் இன்றைக்கு நடுத்தெருவில் நிற்கிறேன். நடிகர் விமலால் என் குடும்பம் பெருத்த நஷ்டத்தை சந்தித்து விட்டது.

 

இந்நிலையில் இன்றைய செய்தித்தாளில் நடிகர் விமலின் மனைவி பிரியதர்ஷினி மணப்பாறையில் திமுக சார்பில் போட்டியிடப்  போவதாக வந்த செய்தியை கண்டு அதிர்ச்சியடைந்தேன். "ஸ்டாலின் தான் வாராரு விடியல் தரப் போறாரு" என என்னைப் போன்றவர்கள் நம்பி கொண்டிருக்கும் வேளையில், மோசடியின் மொத்த உருவமாய் திகழும் நடிகர் விமலுக்கு தாங்கள் சீட் கொடுக்க இருப்பதாக வரும் தகவல் நெஞ்சில் ஈட்டியை பாய்ச்சுவது போல் உள்ளது. இவரைப் போன்றவர்களால் கழகத்திற்கு கெட்ட பெயர்தான் வரும் என்பதை தங்களுக்கு தெரிவிப்பதற்காகவே தங்களுக்கு இந்த கடிதத்தை அனுப்பியுள்ளேன். என் மீது பிழையிருந்தால் தயவுசெய்து மன்னிக்கவும். 

 

நன்றி

 

இப்படிக்கு

 

(N.திருநாவுக்கரசு)