May 01, 2022 12:41 PM

ஆம்புலன்ஸில் ஒரு த்ரில்லர் படம்! - வியக்க வைக்கும் ’துணிகரம்’

ஆம்புலன்ஸில் ஒரு த்ரில்லர் படம்! - வியக்க வைக்கும் ’துணிகரம்’

குழந்தை கடத்தலை மையமாக கொண்டு உருவாகியுள்ள திரைப்படம் ‘துணிகரம்’. பாலசுதன் என்பவர் இயக்கியுள்ள இப்படம்  கடத்தல்காரர்களின் கொடூர செயல்கள் எப்படி எல்லாம் இருக்கும் என்பதை தோலுரித்துக் காட்டியுள்ளது.

 

குழந்தைக் கடத்தல்  பின்னால் உள்ள கடத்தல் கும்பல்களின் துணிகரமான செயல்களும் அவர்களின் நெட்வொர்க்கும்  எப்படிப்பட்டது என்று பல படங்களில் நாம் பார்த்திருக்கிறோம். ஆனால், இந்த படத்தில் இதுவரை சொல்லப்படாத குழந்தை கடத்தல்காரர்களின் நெட்வொர்க் பற்றி விரிவாக சொல்லப்பட்டுள்ளது.

 

ஒரு தம்பதி மிக மிக  அவசரமாக மருத்துவமனைக்குச் செல்கிறார்கள். அந்த வாகனத்துக்குள் திடீரென்று ஒரு  குழந்தைக் கடத்தல் கும்பல் ஏறிக் கொள்கிறது. அவர்கள் கண்ணெதிரே குழந்தை கடத்தப் பட்டு இருப்பதை அறிகிறார்கள். அவர்கள் அவசரமாக மருத்துவமனைக்குச் செல்ல வேண்டியும் இருக்கிறது. அவர்கள் தாங்கள் புறப்பட்ட படி மருத்துவமனைக்குச் சென்றார்களா? கடத்தப்பட்ட குழந்தை மீட்புக்கு ஏதாவது உதவி செய்தார்களா?  என்பதே படத்தின் கதை. இப்படி ஒரு குழந்தையின் கடத்தலைச் சுற்றிப் பயணிக்கின்ற திரைக்கதையே முழுப் படமாகி உள்ளது.

 

ஏ4  மீடியா ஒர்க்ஸ்  சார்பில் டாக்டர். வீரபாண்டியன் மற்றும்  டாக்டர் .டெய்சி வீரபாண்டியன் தயாரித்துள்ள இப்படம் முழுக்க முழுக்க பரபரப்பான  சஸ்பென்ஸ் த்ரில்லர் படமாக உருவாகியுள்ளது.

 

இப்படத்தின் கதையை டினோ எழுத, திரைக்கதை எழுதி பாலசுதன் இயக்கியுள்ளார்.  மெய்யேந்திரன் கெம்புராஜ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு பி.ஷான் கோகுல் இசையமைத்துள்ளார். கு.கார்த்டிக், பி.ஷான் கோகுல் பாடல்கள் எழுத, ராஜு நடனம் அமைத்துள்ளார். என்.பிரகாஷ் படத்தொகுப்பு செய்துள்ளார்.

 

இயக்குநர் மிஷ்கின் பாணியில் இப்படத்தின் திரைக்கதையை கையாண்டிருக்கும் இயக்குநர் பாலசுதன் படம் குறித்து கூறுகையில், “விறுவிறுப்பான த்ரில்லர் படமாக உருவாகியிருக்கும் துணிகரம் படத்தின் இரண்டாவது பாதியின்  கதை முழுக்க ஒரு ஆம்புலன்சில் பயணிக்கிறது. விரைவாக ஓடும் ஆம்புலன்சுடன் கதையும் பரபரப்பாக ஓடுகிறது. இது ரசிகர்களுக்குப் புதிய அனுபவமாக இருக்கும். இப்படம் குழந்தையை வைத்திருக்கும் பெற்றோர்களுக்கும் இளம் தம்பதியினருக்கும் மறக்க முடியாத படமாகவும் குழந்தைகளைப் பாதுகாப்பாக வைத்திருப்பது எப்படி? அவர்களுக்கு எந்த வகையில் எல்லாம் ஆபத்துக்கள் வரும் என்கிற விழிப்புணர்வை ஏற்படுத்தக் கூடிய படமாகவும் இருக்கும்.” என்றார்.

 

ஆக்சன் ரியாக்சன் நிறுவனம் சார்பில் ஜெனிஷ் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிடும் ‘துணிகரம்’ வரும் மே 6 ஆம் தேதி வெளியாகிறது.