’உறியடி’ இயக்குநரின் அடுத்த அதிரடி!

ஒரே படத்தில் ரசிகர்கள் மனதிலும், திரையுலக பிரபலங்கள் மனதிலும் இடம் பிடித்தவர்களில் ‘உறியடி’ விஜய்குமாரும் ஒருவர். ‘உறியடி’ படம் மூலம் இயக்குநர் மற்றும் நடிகராக அறிமுகமானவர், மீண்டும் ‘உறியடி 2’ மூலம் இயக்குநர் மற்றும் நடிகர் என இரண்டு பணிகளையும் செவ்வன செய்து பாராட்டு பெற்றார்.
இதற்கிடையே, ‘சூரரைப் போற்று’ படத்திற்கு வசனம் எழுதியவர், தற்போது ஆக்ஷன் திரைப்படம் ஒன்றில் ஹீரோவாக களம் இறங்க தயாராகி விட்டார்.
‘உறியடி’ படத்தின் இரண்டு பாகங்களில் விஜய்குமாரிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய அபாஸ் இயக்கும் இப்படத்தை ரீல் குட் ஃபிலிம்ஸ் சார்பில் ஆதித்யா தயாரிக்கிறார். விருதுகள் வென்ற பல குறும்படங்களை தயாரித்திருக்கும் ரீல் குட் ஃபிலிம்ஸ், இப்படம் மூலம் முழுநீள திரைப்பட தயாரிப்பில் அடியெடுத்து வைக்கிறது.
தற்போது படத்தின் முன் தயாரிப்பு பணிகள் தொடங்கியிருப்பதோடு, மற்ற நடிகர், நடிகையர், தொழில்நுட்பக் கலைஞர்கள் தேர்வு நடந்து வருகிறது. விரைவில் படப்பிடிப்பு தொடங்க உள்ளது.