Feb 23, 2021 08:52 AM

இயக்குநருக்கு மிரட்டல்! - சர்ச்சையை கிளப்பிய ‘வா பகண்டையா’

இயக்குநருக்கு மிரட்டல்! - சர்ச்சையை கிளப்பிய ‘வா பகண்டையா’

தமிழ் சினிமாவிலும், தமிழக அரசியலிலும் தற்போதைய ஹாட் டாப்பிக்காக பேசப்படுவது ‘வா பகண்டையா’ திரைப்பட விவகாரம் தான். இதற்கு காரணம், சமீபத்தில் நடைபெற்ற இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் திரையிடப்பட்ட படத்தின் டீசரும், அதனால் ஏற்பட்ட அதிர்வுகளும் தான்.

 

டீசரில், பிரதமர் மோடியை ஹீரோ என்று குறிப்பிடும் வசனம் இடம் பெற்றிருந்ததோடு,, “பகுத்தறிவு பேசி பைத்தியமாக போறீங்க”, “ஜாதி என்பது மாம்பழத்திற்குள் இருக்கும் வண்டு” போன்ற அதிர வைக்கும் வசனங்களும் இடம் பெற்றிருந்தது. மேலும், வர்ணம் நல்லது தான், என்ற வசனமும் இருந்தது.

 

இப்படி ஒரு டீசரை பார்த்த இயக்குநர்கள் பேரரசு, ஆர்.கே.செல்வமணி ஆகியோர், இசை வெளியீட்டு விழாவில் தங்களது எதிர்ப்புகளை பதிவு செய்ய, தற்போது அவர்கள் பேசிய வீடியோ வைரலாகியதை தொடர்ந்து, ‘வா பகண்டையா’ படத்திற்கு சில அரசியல் கட்சிகளும், சாதி அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

 

குறிப்பாக, இசை வெளியீட்டு விழாவுக்கு பிறகு ‘வா பகண்டையா’ படத்தை தயாரித்து எழுதி இயக்கியிருக்கும் ப.ஜெயகுமாருக்கு மர்ம நபர்கள் பலர் தொலைபேசி மூலம் மிரட்டல் விடுத்து வருவதோடு, திரைப்படத்தை வெளியிட விடமாட்டோம், என்றும் கூறி வருகிறார்களாம்.

 

 

இது குறித்து இயக்குநரும் தயாரிப்பாளருமான ப.ஜெயகுமாரிடம் கேட்ட போது, ”’வா பகண்டையா’ படத்தில் இடம்பெற்றுள்ள சில வசனங்களுக்காக எனக்கு பலவிதமான மிரட்டல்கள் வருகிறது. குறிப்பாக, பிரதமர் மோடி அவர்களை ஹீரோ என்று குறிப்பிட்டதற்கு பலர் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். என்னை பொருத்தவரை பிரதமர் மோடி ஹீரோ தான், எனவே தான் அதை என் படத்தில் பதிவு செய்தேன். தேர்தல் சமயத்தில், பா.ஜ.க-வுக்கு பிரசாரம் செய்யும் கார்ப்பரேட் நிறுவனத்தின் கைக்கூலி என்றும் என்னை விமர்சிக்கிறார்கள். நான் அரசியலுக்காகவும், சாதி பிரிவினையை தூண்டி அதன் மூலம் பொருளாதார ரீதியாக ஆதாயம் தேடுவதற்காகவும் இந்த படத்தை எடுக்கவில்லை. தேசப்பற்றுக் கொண்ட தமிழனாக தான் இந்த படத்தை எடுத்திருக்கிறேன். முழு படத்தையும் பார்த்தால் அது புரியும்.

 

வெறும் டீசரில் இடம்பெற்ற சில வசனங்களை வைத்துக் கொண்டு என் படம் தவறான படம், என்று சொல்வதில் நியாயம் இல்லை. அரசு அதிகாரியின் தலைமையின் கீழ் இயங்கும் தணிக்கை குழுவினரின் சான்றிதழ் பெற்றிருக்கிறேன். பிறகு எப்படி என் படம் தவறான படமாகும். என் படத்தை தவறான படம் என்று கூறி என்னை மிரட்டுபவர்களில் சிலர் படத்தை போட்டுக்காட்டிய பிறகே ரிலீஸ் செய்ய வேண்டும், என்று சொல்கிறார்கள். எதிர்ப்பவர்களுக்கும், மிரட்டுபவர்களும் பயந்துபோய், என் படத்தை அவர்களுக்கு போட்டுக்காட்ட மாட்டேன். இது மக்களுக்காக, என் பணத்தில் எடுத்த படம், இதை நேரடியாக மக்களுக்கு தான் போட்டுக் காட்டுவேன். 

 

யார் எதிர்த்தாலும், எப்படி மிரட்டினாலும் எதற்கும் அஞ்சாமல், அனைத்து பிரச்சனைகளையும் எதிர்க்கொண்டு என் படத்தை எப்படி ரிலீஸ் செய்ய வேண்டும் என்பது எனக்கு தெரியும்.” என்று அதிரடியாக கூறியவர், விரைவில் படத்தின் டிரைலரை வெளியிட போகிறேன், அது டீசரை விட பல மடங்கு அதிர்வை ஏற்படுத்தும், என்றும் கூறினார்.

 

ஆக, ‘வா பகண்டையா’ படத்தால் சினிமா மற்றும் அரசியல் என இரண்டு ஏரியாவும் சூடாகப்போவது உறுதி.