Sep 17, 2018 12:37 PM

’பப்பி’ மூலம் ஹீரோவாக அறிமுகமாகும் வருண்!

’பப்பி’ மூலம் ஹீரோவாக அறிமுகமாகும் வருண்!

‘நைட் ஷோ’, ‘வனமகன்’, ‘போகன்’, ‘நெருப்புடா’ ஆகிய படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த வருண், தற்போது ஹீரோவாக அறிமுகமாகிறார். நடனம், ஆக்‌ஷன், நடிப்பு உள்ளிட்ட சினிமாவுக்கு தேவையான அனைத்திலும் தேர்ச்சி பெற்றிருக்கும் வருண், எடுத்தவுடனே ஹீரோவாக நடிக்காமல் பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து அதன் முலம் நடிப்பு குறித்த அனுபவத்தை பெற்ற பிறகே ஹீரோவாக அறிமுகமாகிறார்.

 

'காக்கா முட்டை' மணிகண்டனின் இணை இயக்குநரான நட்டு தேவ் இயக்கும் ‘பப்பி’ படத்தின் மூலம் வருண் ஹீரோவாக அறிமுகமாகிறார். கன்னட திரையுலகில் மிகவும் பிரபலமான கதாநாயகியான சம்யுக்தா ஹெக்டே இந்த படத்தில் ஹீரோயினாக நடிப்பதோடு, நாய் ஒன்றும் முக்கிய வேடத்தில் நடிக்கிறது. 

 

Puppy

 

இது குறித்து கூறிய வருண், “எனக்கு பிராணிகள் மீதான காதல் அதிகம், அதை வளர்க்கும் ஆர்வம் அதிகம். 'பப்பி' கதையை நான் கேட்டவுடனே தனிப்பட்ட முறையில் என்னை அந்த கதை ஈர்த்தது. மனிதர்களுக்கும் நாய்களுக்கும் இடையில் உள்ள உணர்ச்சி பிணைப்பை அந்த கதை பதிவு செய்வது. ஒரு ஹீரோவாக நான் அறிமுகமாக நிறைய அனுபவங்களை சேகரித்தேன். நகைச்சுவை மற்றும் உணர்வுகள் கலந்த இந்த படம் அனைத்து தரப்பையும் சென்றடையும். எனக்காக படங்கள் ஓடுவதற்கு இன்னும் நிறைய காலம் உள்ளது. அதுவரை வெற்றிகரமான படங்களில் நான் பங்கு பெறுவதில் உறுதியாக இருக்கிறேன்.” என்றார்.