Mar 18, 2023 09:38 AM

பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்களை மையப்படுத்திய ‘வெங்கட் புதியவன்’! - மார்ச் 24 ஆம் தேதி வெளியாகிறது

பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்களை மையப்படுத்திய ‘வெங்கட் புதியவன்’! - மார்ச் 24 ஆம் தேதி வெளியாகிறது

கம்போடியாவின் அங்கோர்வாட் கோவிலையை மையப்படுத்தி, அக்கோவிலை பற்றிய பல புதிய தகவல்களோடு, அதிரடி ஆக்‌ஷன் காட்சிகள் நிறைந்த ‘முந்தல்’ படத்தை இயக்கிய பிரபல ஸ்டண்ட் மாஸ்டர் ஸ்டண்ட் ஜெயந்த், இரண்டாவாதாக இயக்கியிருக்கும் படம் ‘வெங்கட் புதியவன்’.

 

வி.என்.மூவிஸ் சார்பில் வெங்கடேஷ் தயாரித்திருக்கும் இப்படத்தில் நாயகனாக வெங்கட் அறிமுகமாகிறார். இவர் தமிழ் சினிமாவுக்கு புதிது என்றாலும் கன்னட சினிமாவில் பிரபலமான  வில்லன் மற்றும் குணச்சித்திர நடிகர் ஆவார். நாயகியாக சில்பா நடித்திருக்கிறார். இவர்களுடன் அழகு, மீசை ராஜேந்திரன், வெங்கல் ராவ், தசரதன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

 

சமூகத்தில் பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்ற செயல்களை மையப்படுத்தி உருவாகியுள்ள இப்படம் வரும் மார்ச் 24 ஆம் தேதி தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

 

படம் குறித்து இயக்குநர் ஸ்டண்ட் ஜெயந்த் கூறுகையில், “என் முதல் படத்தை போல் முழுக்க முழுக்க ஆக்‌ஷன் பிரியர்களுக்கான படமாக ‘வெங்கட் புதியவன்’ படத்தை இயக்கியிருக்கிறேன். 7 அதிரடியான சண்டைக்காட்சிகள், பாடல்கள், சஸ்பென்ஸ் என முழுக்க முழுக்க கமர்ஷியல் படமாக இருக்கும்.

 

போலீஸ் அதிகாரியான நாயகன், பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்களை விசாரிக்கும் போது அவருக்கு வில்லன் தரப்பில் இருந்து பல இடையூறுகள் வருகிறது. அவற்றை கடந்து அவர் வழக்கில் தீவிரம் காட்டும் போது, பெண்களை கடத்துவதோடு, கடத்தப்பட்ட பெண்களை வைத்து மிகப்பெரிய மருத்துவ க்ரைம் நடப்பதை கண்டுபிடிக்கிறார். அந்த குற்றங்களின் பின்னணியில் இருப்பவர்கள் யார்? என்பதை கண்டுபிடிக்க களத்தில் இறங்கும் ஹீரோ அதை எப்படி செய்கிறார், என்பதை விறுவிறுப்பாக சொல்வது தான் படத்தின் கதை.

 

வழக்கமான கமர்ஷியல் படங்களைப் போல் இந்த படமும் இருந்தாலும், ஆக்‌ஷன் காட்சிகளுக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுத்திருக்கிறேன். நான் ஒரு ஸ்டண்ட் மாஸ்டர் என்பதால், என்னுடைய ஏரியாவை பிரமாண்டமாக காட்டியிருக்கிறேன். என் முதல் படம் போல் பிரமாண்டமான காட்சியமைப்புகள் இதில் இல்லை என்றாலும், போராடிக்காமல் வேகமாகவும், விறுவிறுப்பாகவும் படம் பயணிக்கும்.

 

சிறிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்டாலும், கதையும், களமும் நிச்சயம் ரசிகர்களை கவரும்படி இருக்கும். நாயகன் வெங்கட் விஜயகாந்த் போன்று இருப்பது மட்டும் அல்ல, நடிப்பு மற்றும் சண்டைக்காட்சிகளிலும் விஜயகாந்தை நினைவுப்படுத்துகிறார். கதைக்கு மிக பொருத்தமாக இருக்கும் நாயகன் வெங்கட்டை நிச்சயம் ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்கள்.

 

பெண் கடத்தல் என்பது தற்போதும் நாட்டில் நடந்துக்கொண்டு தான் இருக்கிறது. அவற்றை வைத்து பல படங்கள் தமிழ் சினிமாவில் வெளியாகி கொண்டு தான் இருக்கிறது. ஆனால், கடத்தப்படும் பெண்கள் என்னவாகிறார்கள், என்பதை இதுவரை சொல்லாத புதிய தகவல்களோடு சொல்லியிருக்கிறோம். இந்த விஷயம் நிச்சயம் புதிதாக இருப்பதோடு, மிக சுவாரஸ்யமாகவும் இருக்கும். நிச்சயம் ரசிகர்களை திருப்திப்படுத்தும் விதத்தில் படம் இருக்கும்.

 

படத்தில் 7 சண்டைக்காட்சிகள் பிரமாண்டமாகவும் தத்ரூபமாகவும் இருப்பதோடு, பாடல்களும் ரசிக்கும்படி இருக்கும். அம்மா செண்டிமெண்ட் பாடல் ஒன்று இடம்பெற்றிருக்கிறது. அந்த பாடல் தமிழகத்தின் பட்டிதொட்டியெல்லாம் ஒலிக்கப்போவது உறுதி” என்றார்.

 

கதை, திரைக்கதை, வசனம் எழதி இயக்கியிருப்பதோடு, சண்டைக்காட்சிகளையும் ஸ்டண்ட் ஜெயந்த் வடிவமைத்திருக்கிறார். பீட்டர் ஒளிப்பதிவு செய்ய, விசால் தியாகராஜன் இசையமைத்திருக்கிறார். சதீஷ் மற்றும் சூப்பர் பாபு நடனக் காட்சிகளை வடிவமைக்க, பருதிமான் பாடல்கள் எழுதியுள்ளார். பி.ஆர்.ஓ பணியை கோவிந்தராஜ் கவனிக்கிறார்.