Jan 03, 2022 05:40 AM

தெருகூத்து கலைஞர்களை கெளரவப்படுத்திய விஜய் சேதுபதி!

தெருகூத்து கலைஞர்களை கெளரவப்படுத்திய விஜய் சேதுபதி!

தமிழகத்தின் தொன்மையான கலைகளில் ஒன்றான தெருக்கூத்து கலையை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச்செல்லும் முயற்சியில் ஈடுபட்டுள்ள அக்கலையைச் சேர்ந்த கலைஞர்கள் பல கடினமான சூழல்களை எதிர்கொண்டு வருகிறார்கள்.

 

ஆனால் இத்தகைய கலைஞர்களின் வாழ்வாதாரம் பெரும் கேள்விக் குறியாகவே தொடர்கிறது. நலிவடைந்து இருக்கும் தெருக்கூத்து கலைஞர்களுக்கு அரசாங்கம் மாதந்தோறும் நிதி உதவி அளித்து வரும் நிலையில், அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்த சர்வதேச அளவில் புகழ்பெற்ற புகைப்படக் கலைஞரான முனைவர் எல்.ராமச்சந்திரனும், நடிகர் விஜய் சேதுபதியும் இணைந்து 2022 ஆம் ஆண்டுக்கான நாட்காட்டி ஒன்றை உருவாக்கியுள்ளனர்.

 

தெருக்கூத்து கலைஞர்களின் வாழ்க்கையையும், அந்த கலையின் தனித்துவமான அடையாளத்தையும் ஆவணப்படுத்தும் வகையில் சர்வதேச தரத்துடன் எல்.ராமச்சந்திரன், நடிகர் விஜய் சேதுபதிய முதன்மைப்படுத்தி புகைப்பட கோர்வையை உருவாக்கியிருக்கிறார். இந்த புகைப்பட கோர்வையை 2022 ஆம் ஆண்டுக்கு நாட்காட்டியாகவும் அவர் வெளியிட்டுள்ளார்.

 

இது குறித்து கூறிய எல்.ராமச்சந்திரன், “தமிழகத்தின் பண்பாட்டு கூறுகளில் ஒன்றான தெருக்கூத்து கலையையும்,  கலைஞர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் ‘தெருகூத்துக் கலைஞன்’ என்ற பெயரில் ஒரு உன்னதமான பணியில் ஈடுபட திட்டமிட்டேன். இதுதொடர்பாக எனது இனிய நண்பரான 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதியை தொடர்புகொண்டேன்.  அவர் தெருக்கூத்து கலைஞர்களின் வாழ்க்கையை பற்றி கேட்டறிந்ததும், உடனடியாக என்னுடைய புகைப்பட பாணியிலான கலைப் படைப்பிற்கு முழு ஆதரவையும், ஒத்துழைப்பையும் தர சம்மதம் தெரிவித்தார். அவருக்கு இருக்கும் ஏராளமான பணிச்சுமையில் தெருக்கூத்து கலைஞர்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்காக சிறிதும் தாமதிக்காமல் நாட்காட்டிக்கான புகைப்பட படப்பிடிப்பிற்கு நேரம் ஒதுக்கினார். அத்துடன் பல மணி நேரம் நீடிக்கக் கூடிய தெருக்கூத்து  கலைஞருக்கான ஒப்பனையை பொறுமையுடன் தெருக்கூத்து கலைஞர்களை உடன் வைத்துக்கொண்டு, இந்த கலை படைப்பிற்கு ஒத்துழைப்பு வழங்கினார். தெருக்கூத்து கலைஞர்களின் பொருளாதார முன்னேற்றத்திற்காக நண்பர் விஜயசேதுபதி அளித்த ஊக்குவிப்பு ஒப்புயர்வற்றது. அதனை வார்த்தைகளால் விளக்கிட இயலாது.” என்றார்.