Sep 11, 2018 07:48 PM

கோவிலில் பிச்சை எடுக்கும் விஜயகாந்த் பட இயக்குநர்! - அதிர்ச்சியில் கோலிவுட்

கோவிலில் பிச்சை எடுக்கும் விஜயகாந்த் பட இயக்குநர்! - அதிர்ச்சியில் கோலிவுட்

விஜயகாந்த் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களை வைத்து 20 திரைப்படங்களை இயக்கி, தயாரித்த பிரபல இயக்குநர் காஞ்சிபுரம் கோவில் ஒன்றில் பிச்சை எடுத்து வருவது கோலிவுட்டை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

 

விஜயகாந்த், ராதிகா நடித்த ‘பூந்தோட்ட காவல்காரன்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான செந்தில்நாதன், அப்படத்தை தொடர்ந்து ’பாலைவன ரோஜாக்கள்’, ‘இளவரசன்’ உள்ளிட்ட 20 படங்களை இயக்கியுள்ளார்.

 

கடந்த 2009 ஆம் ஆண்டு ’உன்னை நான்’ என்ற படத்தை இயக்கி, சொந்தமாக தயாரித்த செந்தில்நாதன், அப்படத்தால் கடன் நெருக்கடிக்கு ஆளானார். படமும் வெளியாகதாதால், சினிமாவை விட்டு ஒதுங்கியவர் டிவி தொடர்களை இயக்கியும் நடித்தும் வந்தார்.

 

Director and Producer Senthilnathan

 

தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நாயகி சீரியலில் அமலாக்கு கணவர் வேடத்தில் நடித்து வந்த அவர், அந்த சீரியலில் இருந்து நீக்கப்பட்டு விட்டதாக கூறப்படுகிறது. இதனால் அவர் கடும் விரக்தியில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

 

இந்த நிலையில், சில நாட்களுக்கு முன்னர் வீட்டை விட்டு வெளியேறி காஞ்சிபுரத்தில் ஒரு கோவிலில் பிச்சை எடுக்க தொடங்கினார்.

 

தயாரிப்பாளர்களாக இருக்கும் அவருடைய நண்பர்கள் சிலருக்கு இந்த தகவல் தெரியவரவே அவருக்கு தொடர்புகொண்டு விசாரித்தனர். அப்போது தான் தற்கொலை செய்துகொள்ள போவதாக கூறி இருக்கிறார்.

 

செந்தில் நாதனை மீட்டு பண உதவி செய்ய தயாரிப்பாளர்கள் சிலர் கார்களில் காஞ்சிபுரம் விரைந்தனர், இயக்குநர் செந்தில் நாதன் விபரீத முடிவு எதையும் எடுப்பதற்கு முன்பாக மீட்பதற்கு காவல்துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் எங்கு இருக்கிறார் என்று தெரியவில்லை. காவல்துறை உதவியுடன் சினிமா தயாரிப்பாளர்கள் அவரை தேடிவருகிறார்கள்.

 

எம்.ஜி.ஆர் நடித்த ‘நம் நாடு’ படத்தின் இயக்குநர் ஜம்புலிங்கத்தின் மகனான செந்தில்நாதன், இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரிடம் உதவி இயக்குநராக பணியாற்றி இயக்குநரானார் என்பது குறிப்பிடத்தக்கது.