Jun 26, 2022 03:11 PM

பத்திரிகையாளர்களை வியப்பில் ஆழ்த்திய ‘விக்ராந்த் ரோணா’ படத்தின் 3டி தொழில்நுட்பம்!

பத்திரிகையாளர்களை வியப்பில் ஆழ்த்திய ‘விக்ராந்த் ரோணா’ படத்தின் 3டி தொழில்நுட்பம்!

கன்னட சினிமாவின் முன்னணி ஹீரோவான கிச்சா சுதீப், நடிப்பில் உருவாகியுள்ள பான் இந்தியா திரைப்படம் ‘விக்ராந்த் ரோணா’. அதிரடி ஆக்‌ஷன் திரைப்படமாக மட்டும் இன்றி பிரம்மாண்டமான சாகசத்திரைப்படமாகவும் உருவாகியுள்ள இப்படம் கன்னடம், தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி  மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் வரும் ஜூலை 28 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

 

ஜீ ஸ்டுடியோஸ் வழங்க, ஷாலினி ஆர்ட்ஸ் சார்பில் ஜாக் மஞ்சுநாத் தயாரிப்பில், இன்வெனியோ ஆர்ஜின்ஸ் சர்பில் அலங்கார பாண்டியன் இணை தயாரிப்பு செய்துள்ள இப்படத்தை அனு பண்டாரி இயக்கியுள்ளார். ஜாக்குலின் பெர்னாண்டஸ், நிரூப் பண்டாரி, நீதா அசோக் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள்.

 

மிகப்பெரிய பொருட்ச்செலவில் பிரம்மாண்டமான 3டி தொழில்நுட்ப திரைப்படமாக உருவாகியுள்ள இப்படத்தின் தமிழ் பதிப்புக்கான பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்வினில் விருந்தினராக நடிகர் ஷாம் மற்றும் தயாரிப்பாளர் டி.ஜி.தியாகராஜன் கலந்துகொண்டனர்.

 

நிகழ்ச்சியில் படத்தின் சில நிமிட காட்சிகள் மற்றும் ஒரு பாடல் 3டி தொழில்நுட்பத்தில் பிரத்யேகமாக திரையிடப்பட்டது. பாடலும், பட காட்சிகளும் படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பை அதிகரிக்க செய்ததோடு, 3டி தொழில்நுட்பம் பத்திரிகையாளர்களையும், விருந்தினர்களையும் வியப்படைய செய்தது.

 

நிகழ்ச்சியில் நடிகர் நடிகர் ஷாம் பேசுகையில், “இன்று இந்த நிகழ்வுக்கு நான் வர காரணம் கிச்சா சுதீப் அண்ணன் தான். அவரும், நானும் நெருங்கிய தோழர்கள், அண்ணன்- தம்பி போல பழகுவோம். அவரின் முழு கவனமும் எப்பொழுதும் திரைப்படத்தில் தான் இருக்கும். ஒரு திரைப்படத்தை எப்படி சிறப்பாக மெருகேற்ற வேண்டும் என்று யோசித்து, அதற்காகவே உழைப்பார். அப்படி ஒரு நாள் நான் அவரை பார்க்க போன போது, அவர்  எனக்கு விக்ராந்த் ரோணாவுடைய 20 நிமிட காட்சிகளை போட்டுக்காட்டினார். நான் அதை பார்த்து மிரண்டுவிட்டேன். படத்தின் மேக்கிங் அவ்வளவு பிரமாதமாக இருந்தது. பார்வையாளர்களுக்கு புது அனுபவமாக இந்த படம் இருக்கும். விக்ராந்த் ரோணா அனைவருக்கும் பிடித்தமான படமாக இருக்கும். படக்குழுவிற்கு எனது வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்.” என்றார்.

 

Vikrant Rona Press Meet

 

தயாரிப்பாளர் தியாகராஜன் பேசுகையில், “நடிகர் கிச்சா சுதீப் உடைய ‘நான் ஈ’ திரைப்படத்தின் பெரிய ரசிகன் நான், அதில் அவருடைய நடிப்பு அபாரமாக இருந்தது. எதிரில் ஆள் இல்லாமல், ஒரு ஈ இருப்பது போல் நடிப்பது சாதாரண காரியம் அல்ல. அதேபோல் பயில்வான் திரைப்படத்திற்காக கடினமான உழைப்பை கொடுத்திருந்தார் சுதீப். இந்தியாவின் மிகச்சிறந்த நடிகர்களில் ஒருவர் கிச்சா சுதீப். விக்ராந்த் ரோணா உடைய காட்சிகளை பார்க்கும் போது, படத்தின் மேக்கிங் என்னை பிரம்மிப்படைய வைத்தது. இசை பிரமாதமாக உள்ளது. நிச்சயமாக இந்த படம் பெரிய வெற்றியடையும். அதற்குண்டான அனைத்து அம்சங்களும் படத்தில் இருக்கிறது. படம் வெற்றியடைய எனது வாழ்த்துகள்.” என்றார்.

 

தயாரிப்பாளர் அலங்கார் பாண்டியன் பேசுகையில், “இது எங்களோட மூணாவது படம். ஜாக் மஞ்சு நாத் என்னுடைய நெருங்கிய நண்பர். கோவிட் நேரத்தில் தான் இந்தப்படத்தில் நான் இணைந்தேன். கோவிட் நேரத்தில் ஷீட் இருக்குமா எனக்கேட்டேன் ஆனால் அப்போதே  உரிய பாதுகாப்புடன் அவர்கள் பிரமாண்டமாக அதை உருவாக்கி கொண்டிருந்தார்கள். நானும் இப்படத்தில் இருக்க வேண்டுமென ஆசைப்பட்டு இணைந்தேன். இந்தப்படம் சூப்பராக வந்துள்ளது. உங்கள் அனைவருக்கும் பிடிக்கும். நன்றி” என்றார்.

 

இயக்குநர் அனுப் பண்டாரி பேசுகையில், “எங்கள் படத்தின் டிரெய்லர் ஃபர்ஸ்ட்லுக் ஆகியவற்றிற்கு நீங்கள் தந்த ஆதரவிற்கு வரவேற்பிற்கு நன்றி. இப்போது பான் இந்திய படங்கள் நல்ல வெற்றியை பெறுகிறது. கமல் சாரின் விக்ரம் இந்திய அளவில் அசத்தி வருகிறது. மிகப்பெரிய உழைப்பில் ஒரு நல்ல படத்தை உருவாக்கியுள்ளோம் எங்கள் படமும் உங்கள் அனைவரையும் கவரும் என நம்புகிறோம், நன்றி.” என்றார்.

 

நடிகர் கிச்சா சுதீப் பேசுகையில், “நான் சினிமாவை நம்புகிறேன் சினிமாவை தான் காதலிக்கிறேன். அது தான் எங்களை இங்கு வரை அழைத்து வந்துள்ளது. இது ஒரு நல்ல படைப்பு,  இந்தப்படத்தில் நானும் இருப்பது எனக்கு பெருமையாக உள்ளது. தமிழில் நல்ல வாய்ப்புகள் வரும்போது அழைக்கும்போது நடிப்பேன். கர்நாடகா சினிமாவை கடவுளாக கொண்டாடும் இடம், கேஜிஎஃப் மூலம் அது எல்லா இடத்திலும் தெரிவது மகிழ்ச்சி. இந்தப்படம் உங்கள் அனைவரையும் புது உலகிற்கு கூட்டிச்செல்லும் எல்லோருக்கும் நன்றி.” என்றார்.