Aug 25, 2018 10:29 AM

ஒட்டகத்துடன் ஊர் சுற்றும் விக்ராந்த்!

ஒட்டகத்துடன் ஊர் சுற்றும் விக்ராந்த்!

நாய், குரங்கு, யானை, பாம்பு, ஆடு, மாடு, பூனை என்று பல உயிரினங்களை வைத்து படம் எடுத்த தமிழ் இயக்குநர்கள் மீனை கூட மையமாக வைத்து படம் எடுத்திருக்கும் நிலையில், தற்போது ஒட்டகத்தை முக்கிய கதாபாத்திரமகா வைத்து படம் ஒன்று தமிழ் சினிமாவில் உருவாகிறது.

 

‘பக்ரீத்’ என்ற தலைப்பில் உருவாகும் இப்படத்தை எம்10 புரொடக்‌ஷன்ஸ் சார்பில் எம்.எஸ்.முருகராஜ் தயாரிக்கிறார். இவர் ஏற்கனவே, சந்தானம், சிவா ஆகியோர் இணைந்து நடித்த ‘யாயா’ படத்தை தயாரித்திருக்கிறார்.

 

‘சிகை’ மற்றும் ‘பட்சி’ ஆகிய படங்களை இயக்கிய ஜெகதீசன் சுபு கதை, திரைக்கதை, வசனம் எழுதி ஒளிப்பதிவு செய்து இப்படத்தை இயக்குகிறார்.

 

இதில் ஹீரோவாக விக்ராந்த் நடிக்க, ஹீரோயினாக வசுந்தரா நடிக்கிறார். இவர்களுடன் முக்கிய நட்சத்திரங்கள் பலர் நடிக்க, ஒட்டகம் ஒன்றும் முக்கிய கதாபாத்திரமாக இப்படத்தில் நடிக்கிறது.

 

விவசாயம் செய்வதை பெருமையாக நினைத்து, இக்கட்டான சூழ்நிலையிலும் விவசாயத்தை மேற்கொள்கிற முயற்சியில் இருக்கும் நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த ஒருவனின் வாழ்க்கையில் ஒரு ஒட்டம் திடீரென நுழைகிறது. அந்த ஒட்டகத்தினால் அவனது குடும்பத்தில் நடக்கும் சம்பவங்கள் மற்றும் அதனால் அவர் மேற்கொள்ளும் நெடுந்தூர பயணத்தில் அவன் சந்திக்கும் மனிதர்களும் அதனால் ஏற்படும் திருப்புமுனைகளும் தான் ‘பக்ரீத்’ படத்தின் கதை.

 

இந்தியா முழுவதும் பயணிக்கும் இப்படத்தில், அந்தந்த ஊர் பழக்க வழக்கங்கள் மற்றும் அங்குள்ள மனிதர்களின் வாழ்க்கையை இயல்பாக பதிவு செய்திருக்கும் இயக்குநர், சென்னை, ராஜஸ்தான், கோவா மற்றும் மகராஷ்டிரா ஆகிய இடங்களில் இப்படத்தின் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டிருக்கிறார்.

 

டி.இமான் இசையமைக்கும் இப்படத்திற்கு ரூபன் படத்தொகுப்பு செய்கிறார். மதன் கலையை நிர்மாணிக்கிறார்.