விளைவுகளை சந்திக்கத் தயாராக இருங்கள் - ஓவியாவின் எச்சரிக்கை

’களவாணி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமான ஓவியா, அதன் பிறகு நடித்த படங்களில் கவர்ச்சியாக நடிக்க தொடங்கினார். பிறகு பட வாய்ப்புகள் இன்றி மலையாளம், தெலுங்கு என்று வேறு மொழிகளிலும் நடிக்க தொடங்கியவருக்கு பிக் பாஸ் என்ற டிவி நிகழ்ச்சி திருப்பு முனையாக அமைந்தது.
பிக் பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களிலேயே ஒட்டு மொத்த தமிழக ரசிகர்களின் மனம் கவர்ந்த போட்டியாளராக உருவெடுத்த ஓவியாவால் அந்த நிகழ்ச்சியே படு விறுவிறுப்பாக நகர, ஓவியா நிகழ்ச்சியின் பாதியிலேயே வெளியேற வேண்டிய சூழல் வந்ததால், அவர் போட்டியில் தொடர்ந்து நீடிக்கவில்லை. இருப்பினும், அப்போட்டியின் மூலம் பிரபலமான ஓவியாவுக்கு பல திரைப்பட வாய்ப்புகளும், விளம்பரப் பட வாய்ப்புகளும் குவிந்து வருகின்றன.
தற்போது, ‘காஞ்சனா 2’, ‘களவாணி 2’, ‘90 எம்.எல்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்து வரும் ஓவியா, அவ்வபோது சமூக வலைதளம் மூலமாக தனது ரசிகர்களிடம் பேசி வருகிறார்.
இந்த நிலையில், புக்கர் விருது மற்றும் நோபர் பரிசு பெற்ற ஆங்கிலக் கவிஞர் வில்லியம் ஜெரால்டு கேல்டிங்கின் வாசகத்தை ஓவியா, தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், “பெண்கள் மிகச் சக்தி வாய்ந்தவர்களாக எப்போதும் இருக்கிறார்கள். பெண்களிடம் எதைக் கொடுத்தாலும் அதை சிறப்பாக மாற்றக் கூடியவர்கள்.
அவளிடம் உயிரணுவைக் கொடுத்தால் அதை அவள் குழந்தையாகக் கொடுப்பாள். அவளுக்கு ஒரு வீடு கொடுத்தால் அவள் சிறந்த இல்லத்தைத் தருவாள். மளிகைப் பொருட்களை கொடுத்தால் உங்களுக்குச் சாப்பாடு தருவாள்.
நீங்கள் புன்னகையை கொடுத்தால் அவள் இதயத்தைத் தருவாள். அவளிடம் எதைக் கொடுத்தாலும் அதை பன்மடங்காக்கி திரும்பி தருவாள். அதனால் அவளுக்கு மோசமாக ஏதாவது செய்தால், அதனால் ஏற்படும் பன்மடங்கு விளைவுகளை சந்திக்கத் தயாராக இருங்கள்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆண்களை எச்சரிக்கும் விதத்தில் அமைந்திருக்கும் இந்த வாசகத்தை ஓவியா திடீரென்று அதுவும், மீ டூ தமிழ் சினிமாவில் விஸ்வரூபம் எடுத்திருக்கும் இந்த நேரத்தில் வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.