Dec 08, 2025 05:20 AM

தனித்துவமான ஆக்‌ஷன் ஹீரோவாக வேண்டும்! - இளம் நடிகர் கெளசிக் பேட்டி

4402fe04a90b5823938b1cc2f76fd9fa.jpg

Music By : 0

Produced By : 0

தமிழ் சினிமாவில் ஹீரோக்களுக்கான பற்றாக்குறை இருப்பதாகவும், பல அறிமுக நடிகர்கள் தனித்துவமான திறன் இல்லாததால் நிலைத்து நிற்காததே இதற்கு காரணம், என்று சொல்லப்படும் நிலையில், சில இளம் நடிகர்கள் தனித்துவமான திறமைகளோடு, சினிமாவில் தங்களுக்கான இடத்தை பிடிப்பதற்கு கடுமையாக உழைத்தும் வருகிறார்கள். அவர்களில் ஒருவர் தான் கெளசிக்.

 

’வீரதேவன்’ படத்தின் மூலம் இளம் நாயகனாக தமிழ் சினிமாவில் அறிமுகமான கெளசிக், தொடர்ந்து சில படங்களில் ஹீரோவாக நடித்தாலும், கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியான ‘சரண்டர்’ திரைப்படத்தில் வில்லனாக, வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து கவனம் ஈர்த்தார். 

 

பெண்மைத் தன்மை கலந்த கதாபாத்திரத்தில், வித்தியாசமான நடிப்பு, அதிரடியான ஆக்‌ஷன் காட்சி, என வில்லனாக நடித்தாலும், தனித்துவமான கதாபாத்திரத்தை மிக சரியாக கையாண்டு பாராட்டு பெற்ற கெளசிக், தற்போது பல முன்னணி இயக்குநர்களின் படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகளை பெற்று வருகிறார்.

 

தமிழ் சினிமாவில் தனக்கான இடத்தை பிடிக்க கடுமையாக உழைத்து வரும் நடிகர் கெளசிக், தனது சினிமா பயணம் குறித்து நம்மிடம் பகிர்ந்து கொண்டது இதோ,

 

என் அப்பா கராத்தே மாஸ்டர் என்பதால், நானும் கராத்தே உள்ளிட்ட தற்காப்பு கலைகள், நடனம் ஆகியவற்றை சிறு வயதில் இருந்தே கற்றுக்கொண்டேன். சினிமா மீதான ஈடுபாடு எப்படி வந்தது என்று எனக்கே தெரியாது. சிறுவனாக இருக்கும் போது ஒரு படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. ஆனால், அந்த படம் தொடங்கும் போது நான் வளர்ந்து விட்டதால், என் தம்பி தான் அந்த படத்தில் நடித்தார். அதன் பிறகே எனக்கு நடிக்க வேண்டும் என்ற ஆசை வந்தது. நான் பல நிறுவனங்களுக்கு சென்று வாய்ப்பு தேட தொடங்கினேன். ஆனால், வாப்பு கிடைப்பது சுலபமான விசயம் இல்லை, என்பது புரிந்தது. 

 

இருந்தாலும், விடாமுயற்சியாக தொடர்ந்து வாய்ப்பு தேடியதோடு கூத்து பட்டறையில் சேர்ந்து நடிப்பு பயிற்சி மேற்கொண்டேன். அப்போது தான் ‘வீரதேவன்’ படத்தின் வாய்ப்பு வந்தது. அந்த படத்தில் நடித்தது எனக்கு சினிமாவில் பல்வேறு அனுபவங்களை கற்றுத் தந்தது. அந்த படத்திற்குப் பிறகு தொடர்ந்து பல படங்களில் ஹீரோவாக நடித்து வந்தாலும், எனக்கான சரியான வாய்ப்புக்காக காத்திருந்தேன். அந்த வாய்ப்பு ‘சரண்டர்’ படம் மூலம் கிடைத்தது.

 

வில்லன் கதாபாத்திரம் என்று சொன்ன உடன், கொஞ்சம் தயக்கமாக தான் இருந்தது. ஆனால், இயக்குநர் என் கதாபாத்திரம் பற்றி சொன்ன போது வித்தியாசமாக இருந்தது. குறிப்பாக சண்டைக்காட்சி மற்றும் என் கதாபாத்திரத்தின் வடிவமைப்பு, லால் சார் போன்ற முன்னணி நடிகர்களுடன் நடிப்பது ஆகியவை என்னை கவர்ந்ததால், அந்த கதாபாத்திரத்தில் நடித்தேன். என் நடிப்பு திறனோடு, ஆக்‌ஷன் திறனையும் பார்த்து பலர் பாராட்டியதோடு, பல முன்னணி இயக்குநர்களிடம் இருந்தும் அழைப்பு வந்திருக்கிறது.

 

Kousik nad Lal

 

ஒரு முறை வில்லனாக நடித்தால், தொடர்ந்து வில்லன் வாய்ப்புகளே வருமே நடிப்பீர்களா?

 

அப்படி எல்லாம் எனக்கு வரவில்லை. இப்போதும் பல படங்களில் ஹீரோவாக தான் நடித்து வருகிறேன். நான் ஹீரோவாக நடித்த ‘பூங்கா’ திரைப்படம் இப்போது வெளியாகியிருக்கிறது. மேலும், இரண்டு படங்களில் ஹீரோவாக நடித்திருக்கிறேன். முன்னணி இயக்குநர்களின் படங்களில் நடிப்பதற்கான பேச்சுவார்த்தை நடந்துக் கொண்டிருக்கிறது. வில்லனாக வாய்ப்பு வந்தாலும் நடிப்பேன், ஆனால் அந்த கதாபாத்திரம் ஒரே மாதிரியாக இல்லாமல் தனித்துவமானதாக இருக்க வேண்டும். 

 

தற்போதை படங்கள் பற்றி?

 

’என்னம் போல் வாழ்க்கை’ என்ற படத்தில் நடிக்கிறேன். சுந்தர்.சி சாரிடம் உதவி இயக்குநராக இருந்தவர் இயக்கியிருக்கிறார். முழுக்க முழுக்க கமர்ஷியல் நகைச்சுவை படமாக உருவாகிறது. ‘புல் ஹெட்’ என்ற ஆக்‌ஷன் படத்தில் நடிக்கிறேன். ‘20 அதிகாரம்’ படத்தை இயக்கிய கார்த்திக் இந்த படத்தை இயக்குகிறார். இந்த படம் தமிழ் சினிமாவின் முதல் மிக்சட் மார்ஷல் ஆர்ட்ஸ் படமாக உருவாகிறது. இந்த படம் வெளியானால் நிச்சயம் தமிழ் சினிமாவின் தனித்துவமான ஆக்‌ஷன் ஹீரோவாக நான் உருவெடுப்பேன் என்ற நம்பிக்கை இருக்கிறது. படம் முழுவதும் ஒரே ஒரு கதாபாத்திரம் மட்டுமே வரும் ‘சாரன்’ என்ற படத்திலும் நடித்திருக்கிறேன். நான் மட்டுமே படம் முழுவதும் வருவதால், நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள படமாக அது இருக்கும். இவை தவிர மேலும் சில படங்களில் நடிப்பதற்கான பேச்சுவார்த்தை நடந்துக் கொண்டிருக்கிறது. சில முன்னணி இயக்குநர்களின் படங்களில் நடிக்க இருக்கிறேன், அதற்காக என்னை தயார்ப்படுத்தியும் வருகிறேன்.

 

‘புல் ஹெட்’ வித்தியாசமான தலைப்பாக இருக்கிறதே, அந்த படம் பற்றி?

 

இது முழுக்க முழுக்க ஆக்‌ஷன் படம். சாதாரண ஆக்‌ஷன் படம் அல்ல, கலப்பு தற்காப்பு கலை என்று சொல்லக்கூடிய மிக்சட் மார்ஷல் ஆர்ட்ஸ் படம். இப்படி ஒரு படம் இதுவரை தமிழ் சினிமாவில் வந்ததில்லை. இந்த படத்தில் முழுக்க முழுக்க தற்காப்பு கலைஞர்கள் தான் பணியாற்றியிருக்கிறார்கள். படத்தில் இடம் பெறும் சண்டைக்காட்சிகள் அனைத்தும் சினிமாவுக்கான சண்டைக்காட்சிகளாக அல்லாமல், ஒரிஜினலான மிக்சட் மார்ஷல் ஆர்ட்ஸ் சண்டைகளாக இருக்கும். நான் மிக்சட் மார்ஷல் ஆர்ட்ஸில் பயிற்சி பெற்று இருந்தாலும், இந்த படத்திற்காக பிரத்யேகமாக சுமார் 5 மாதங்கள் பயிற்சி எடுத்தேன். 

 

நிஜமான மிக்சட் மார்ஷல் ஆர்ட்ஸ் கலைஞர்கள் நடிப்பதால், சண்டைக்காட்சிகள் எப்படி வர வேண்டும், என்று அவர்களுடன் இணைந்து பல பயிற்சிகளை மேற்கொண்டேன். எந்தவித டூப்பும் இல்லாமல், ஒரிஜினலாக சண்டை போட்டிருப்பதால், நிச்சயம் இந்த படம் பேசப்படுவதோடு, தமிழ் சினிமாவில் புதிய முயற்சியாகவும் இருக்கும். 

 

Actor Kousik

 

நடிப்புக்கான ஒரு படம், ஆக்‌ஷனுக்கான ஒரு படம், கமர்ஷியல் காமெடி ஜானரில் ஒரு படம், என்று வித்தியாசமான ஜானரில் நடித்துக் கொண்டிருக்கிறீர்களே, உங்களது தனித்துவமான திறன் என்றால் எதை சொல்வீர்கள்?

 

ஒரு நல்ல நடிகராக வேண்டும் என்பது தான் என் ஆசை. அதற்கான அனைத்து பயிற்சிகளையும் முறையாக எடுத்துக் கொண்டிருக்கிறேன். அதே சமயம், தனித்துவமான ஆக்‌ஷன் ஹீரோவாக வேண்டும் என்பது என் கனவு. தமிழ் சினிமாவில் ஆக்‌ஷன் ஹீரோக்கள் பலர் இருந்தாலும், பாலிவுட்டில் இருக்கும் டைகர் ஷெராப், வித்யூத் ஜம்வால் போன்ற மார்ஷல் ஆர்ட்ஸ் தெரிந்த ஹீரோக்கள், ஸ்டைலிஷான சண்டைக்காட்சிகள் நிறைந்த படங்களின் வருகை குறைந்து விட்டது என்று நினைக்கிறேன். ஒரு காலத்தில் அர்ஜூன் சார், அப்படிப்பட்ட படங்களில் நடித்துக் கொண்டிருந்தார். ஆனால், இப்போது அவரது இடத்தில் யாரும் இல்லை. அந்த இடத்தை நிரப்ப வேண்டும் என்பது தான் என் விருப்பம். 

 

சினிமாத்தனமான சண்டைகாட்சிகளை தாண்டி, மார்ஷல் ஆர்ட்ஸ் கலந்த ஆக்‌ஷன் ஹீரோவாக வேண்டும் என்பது தான் ஆசை. அந்த ஆசைக்கான படமாக ‘புல் ஹெட்’ நிச்சயம் இருக்கும். அந்த படம் வெளியானால் தமிழ் சினிமாவில் எனக்கான இடம் கிடைக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது. அந்த நம்பிக்கையோடு நின்றுவிடாமல், இப்போதும் தொடர்ந்து வாய்ப்பு தேடும் முயற்சிகளிலும் ஈடுபட்டு வருகிறேன்.

 

Actor Kousik

 

மிக்சட் மார்ஷல் ஆர்ட்ஸ் கலைஞராக மட்டும் இன்றி நல்ல நடிகராக வேண்டும் என்ற எண்ணத்தை தனது உற்சாகமான பேச்சில் நடிகர் கெளசிக் வெளிக்காட்டினார். 

 

மேலும், கதை தேர்வில் கனவம் செலுத்துவதோடு, எந்தவிதமான கதாபாத்திரமாக இருந்தாலும், நடிப்பு மூலம் அதில் தன்னை கச்சிதமாக பொறுத்திக் கொள்ளும் நடிகராக வலம் வர வேண்டும் என்பதில் மிக தெளிவாக இருக்கும் கெளசிக், புத்தாண்டில் வெளியாக இருக்கும் தனது அடுத்தடுத்த படங்கள் மூலம் நிரூபிக்க உள்ளார்.