தீபாவளி வெளியீடாக அக்டோபர் 17 ஆம் தேதி வெளியாகும் ‘கே. ஆஃப் லோன்ஸ்’!

ஜெ.ஆர்.ஜி புரொடக்ஷன்ஸ் சார்பில், தயாரிப்பாளர் ஜீவானந்தம் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் அபிஷேக் லெஸ்லி இயக்கத்தில் ஆன்லைன் கேமிங் மற்றும் லோனை மையமாக வைத்து புதுமையான சைக்கலாஜிகல் திரில்லர் டிராமாவாக உருவாகியுள்ள திரைப்படம் ’கேம் ஆஃப் லோன்ஸ்’.
தற்போதைய நவீன உலகில் எதை வேண்டுமானாலும் ஆன்லைனில் வாங்கிக்கொள்ளும், சாதித்துக்கொள்ளும் பழக்கம் வழக்கமாகிவிட்டது. ஆன்லைன் எந்தளவுக்கு வரமாகவுள்ளதோ, அதே போல் ஒரு பக்கம் சாபமாகவும் இருக்கிறது. இந்த மையக்கருவை வைத்து புதுமையான சைக்கலாஜிகல் திரில்லர் டிராமாவாக இப்படம் உருவாகியுள்ளது.
வழக்கமான பாடல், ஃபைட், காமெடி என எந்த அம்சங்களும் இல்லாமல் முழுக்க வித்தியாசமான திரைக்கதையில், சுவாரஸ்யமான வகையில் 90 நிமிட கமர்ஷியல் படமாக இப்படம் உருவாகியுள்ளது.
இப்படம் குறித்து இயக்குநர் அபிஷேக் லெஸ்லி கூறுகையில், “லாக்டவுன் காலத்தில் தான் இப்படத்தின் கரு எனக்கு தோன்றியது. நான் ஐடியில் வேலை பார்ப்பவன், ஏஐ யிடம் ஒருவன் மாட்டிக்கொண்டால் என்னாகும் என குறும்படம் எடுத்தேன், அது கான்ஸ் திரை விழாவில் கலந்துகொண்டு விருது வென்றது. லாக்டவுன் காலத்தில் ஆன்லைன் கேமிங் ஆன்லைன் லோன் என பலர் சிக்கிக்கொள்வதை தினமும் கேள்விப்பட்டேன். என் நண்பர்கள் பலரே இதில் மாட்டியிருக்கின்றனர். இதைப்பற்றிய விழிப்புணர்வு தரும் வகையில் ஏன் ஒரு படம் செய்யக் கூடாது என்ற எண்ணத்தில் உருவானது தான் இப்படம். ஆன்லைன் லோன் வாங்குவது இன்றைய காலகட்டத்தில் மிக மிக எளிதானது ஆனால் அதை திருப்பிக்கட்டுவது என்பது மிகப்பெரிய சிக்கலாக மாறியிருக்கிறது. அப்படி ஆன்லைன் கேமுக்கு அடிமையாகி, லோன் வாங்கி சிக்கலில் மாட்டிக்கொள்ளும் ஒருவன், காலை முதல் மாலை வரை ஒரு நாளில் சந்திக்கும் பிரச்சனைகள் தான் இந்தப்படம். ஒரு கதைக்குப் பாடல்களோ காமெடியோ முக்கியமில்லை. மக்களைக் கதைக்குள் இழுக்கும் அவர்கள் அதை தங்களோடு தொடர்பு படுத்திக்கொள்ளும் அம்சம் இருந்தாலே போதும். எப்போதும் சுவாரஸ்யமான திரைக்கதை தான் முக்கியம். குறைந்த கதாப்பாத்திரங்கள் என்றாலும் கதைக்கு என்ன தேவையோ அதைச் சரியாகச் செய்திருக்கிறோம். எல்லோரும் தங்கள் வாழ்க்கையில் ஒருமுறையேனும் கடன் வாங்கியிருப்பார்கள் இந்தப்படம் பார்க்கும் போது இதை தங்கள் கதையாக உணர்வார்கள். கண்டிப்பாக மக்கள் ரசித்துப்பார்க்கும் ஒரு படமாக இப்படம் இருக்கும்.” என்றார்.
இப்படத்தில் நாயகனாக நிவாஸ் ஆதித்தன் நடித்துள்ளார். அபிநய் ஒரு எதிர்மறை பாத்திரத்தில் வில்லனாக நடித்துள்ளார். எஸ்தர், குழந்தை நட்சத்திரம் ஆத்விக் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
சபரி ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு ஜோ கோஸ்டா பின்னணி இசையமைத்துள்ளார். பிரதீப் படத்தொகுப்பு செய்துள்ளார். கலை இயக்குநராக சஜன் பணியாற்ற ஜெ.ஆர்.ஜி புரொடக்ஷன்ஸ் சார்பில் ஜீவானந்தம் தயாரித்துள்ளார். இயக்குநர்கள் குழுவில் சிவா சுப்பிரமணியம், வினோ, கிளாட்சன் ஆகியோர் பணியாற்றியுள்ளனர். மக்கள் தொடர்பாளராக மணி மதன் பணியாற்றுகிறார்.
இப்படத்தின் முழு படப்பிடிப்பும் பெங்களூரில் நடத்தி முடிக்கப்பட்ட நிலையில், சமீபத்தில் தணிக்கை குழுவினர் படம் பார்த்து, யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளனர். இதையடுத்து தீபாவளி வெளியீடாக வரும் அக்டோபர் 17 ஆம் தேதி படத்தை வெளியிடுவதாக படக்குழு அறிவித்துள்ளது.