May 21, 2020 11:21 AM

சீரியல் படப்பிடிப்புகளுக்கு நிபந்தனைகளோடு அனுமதி!

சீரியல் படப்பிடிப்புகளுக்கு நிபந்தனைகளோடு அனுமதி!

கொரோனா முன் எச்சரிக்கை காரணமாக சுமார் இரண்டு மாதங்களாக சினிமா மற்றும் சீரியல் படப்பிடிப்புகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, சினிமா தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டிருப்பதால், படப்பிடிப்புகளுக்கு அனுமதி கோரி முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் பெப்ஸி அமைப்பும், சின்னத்திரை தயாரிப்பாளர்கள் சங்கமும் கோரிக்கை விடுத்தது.

 

இந்த கோரிகையை பரிசீலனை செய்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சில நிபந்தனைகளோடு சீரியல் படப்பிடிப்புகளுக்கு இன்று அனுமதி வழங்கியுள்ளார்.

 

அரசு விதித்துள்ள நிபந்தனைகள் பின்வருமாறு: 

 

* சுற்றுச்சுவர் உள்ள வீடுகளுக்கு உள்ளே அல்லது அரங்கிற்குள் மட்டும் படப்பிடிப்பு நடத்த வேண்டும். தடை செய்யப்பட்ட பகுதிகளுக்கு இது பொருந்தாது.

 

* பொது இடங்களில் படப்பிடிப்பு நடத்தக் கூடாது. எனினும், ஊரகப் பகுதிகளில் பொது இடங்களில் படப்பிடிப்பு நடத்த தடை ஏதும் இல்லை.

 

* பார்வையாளர்களை கண்டிப்பாக அனுமதிக்கக்கூடாது.

 

* படப்பிடிப்பு நடத்தப்படும் அரங்கம் அல்லது வீட்டினை படப்பிடிப்பிற்கு முன்பும், பின்பும் கண்டிப்பாக கிருமி நாசினியால் சுத்தம் செய்ய வேண்டும்.

 

* படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் நடிகர்கள், நடிகைகள் தவிர மற்ற தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரும் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். 

 

* நடிகர், நடிகைகளும் படப்பிடிப்பின் இடைவெளியின் பொழுது தவறாமல் முகக்கவசம் அணிய வேண்டும்.

 

* படப்பிடிப்பு குழுவினர் அனைவரும் அவ்வப்போது சோப் அல்லது கிருமி நாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.

 

* படப்பிடிப்பு நடத்தப்படும் வளாகத்திற்குள் வரும் வாகனங்கள் மற்றும் போக்குவரத்திற்கு பயன்படுத்தப்படும் வாகனங்கள் கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட வேண்டும். 

 

* படப்பிடிப்பிற்கு உபயோகப்படுத்தப்படும் கேமரா, கிரேன் உட்பட அனைத்து சாதனங்களையும் கிருமிநாசினி கொண்டு அவ்வவ்போது சுத்தம் செய்ய வேண்டும்.

 

* சளி, இருமல், காய்ச்சல், மூச்சுத்திணறல் போன்ற அறிகுறிகள் இருக்கும் கலைஞர்களையோ அல்லது தொழில்நுட்ப பணியாளர்களையோ படப்பிடிப்பு வளாகங்களுக்குள் அனுமதிக்கக் கூடாது. இத்தகைய அறிகுறிகள் உள்ளவர்களை உடனடியாக மருத்துவ பரிசோதனைக்கு அனுப்ப வேண்டும்.

 

* அதிகபட்சமாக நடிகர், நடிகை தொழில்நுட்ப பணியாளர்கள் உட்பட 20 எண்ணிக்கைகளுக்கு மிகாமல் படப்பிடிப்பு நடத்தலாம்.

 

* சென்னையில் படப்பிடிப்பு நடத்துவதற்கு மாநகராட்சி ஆணையரிடமும், பிற மாவட்டங்களில் படப்பிடிப்பு நடத்துவதற்கு சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சி தலைவரிடமும் முன் அனுமதி பெற வேண்டும்.

 

இதேபோல், திரைப்பட தயாரிப்பாளர்களும் திரைப்படங்களின் படப்பிடிப்புகளுக்கு அனுமதி வழங்க வேண்டும், என்று முதல்வரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.