Nov 19, 2020 04:30 PM

சிங்காரவடிவேலன் வெளியிட்ட நிழல் பட்ஜெட்! - வியப்படைந்த தயாரிப்பாளர்கள்

சிங்காரவடிவேலன் வெளியிட்ட நிழல் பட்ஜெட்! - வியப்படைந்த தயாரிப்பாளர்கள்

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு வரும் நவம்பர் 22 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதில் இராமசாமி என்கிற முரளி மற்றும் டி.ராஜேந்தர் ஆகியோரின் தலைமையில் கீழ் போட்டியிடும் அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவி வரும் நிலையில், சுயேச்சையாக துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிடும் ஆர்.சிங்காரவடிவேலன், வெளியிட்டிருக்கும் நிழல் பட்ஜெட் தயாரிப்பாளர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

 

சுயேச்சையாக துணை தலைவர் பதவிக்கு போட்டியிடும் R.சிங்காரவடிவேலன் கடந்த இருவார காலமாக தயாரிப்பாளர்களை நேரடியாக சந்தித்து வாக்கு கேட்டு வந்தார். வெற்றி பெற்றால் என்ன செய்வீர்கள் என எல்லோரும் கேட்ட கேள்விக்கு நிழல் பட்ஜெட் ஒன்றை வெளியிட்டுள்ளார் அதில் வருமானத்திற்கான வழிமுறை, அதற்குரிய செலவு கணக்கையும் புள்ளி விபரங்களுடன் வெளியிட்டு இருப்பது தேர்தல் களத்தில் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. இதுவரை நடைபெற்ற எந்த தேர்தலிலும் அணி அல்லது தனிப்பட்ட நபர்கள் இது போன்ற நிழல் பட்ஜெட்டை வெளியிட்டது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது

 

வருடத்திற்கு 27 கோடியே 72 லட்சம் ரூபாய் வருவாய், வருடாந்திர செலவு 24 கோடியே 50 லட்சத்து 50,000-ம் ரூபாய் எஞ்சும் தொகை 3,13,50,000ம் ரூபாய் என வரவுசெலவு கணக்கையும் வெளியிட்டுள்ளார் சிங்காரவடிவேலன்.

 

தேர்தல் அறிக்கை முழுமையாக

 

1. மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி திரைப்படத் தொழிலை Small  ScaleIndustriesவரம்புக்குள் கொண்டு வரவும், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் திரைப்பட தயாரிப்பிற்கென்று கடன் வழங்கவும் ஏற்பாடு செய்யப்படும்.  

 

2. கேபிள் டிவி மூலம் ஆண்டுக்கு ரூ.10 கோடி வருமானம் ஈட்ட இலக்கு நிர்ணயிக்கப்படும்.

 

3. சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ள நடிகர்கள் மற்றும் இயக்குநர்களில் 10 நடிகர்கள் மற்றும் 10 இயக்குநர்களை கொண்டு  " சுயம்வரம் " பட பாணியில் இரண்டே நாட்களில் ஒரு படத்தின் படப்பிடிப்பை முடித்து அதனை வெற்றிகரமாக வியாபாரம் செய்து அதன் மூலம்  ரூ. 15 கோடி இலாபம் ஈட்ட இலக்கு நிர்ணயிக்கப்படும். 

 

4. பிற மொழி டப்பிங் உரிமை மற்றும் தொலைக்காட்சி உரிமங்களை சங்கத்தின் மூலம் விற்பனை செய்து, அதன் மூலம் பெறப்படும் கமிஷன் மூலம்  ரூ. 2 கோடி வருவாய் ஈட்ட இலக்கு நிர்ணயிக்கப்படும்.

 

5. உறுப்பினர்கள் தயாரிக்கும் படங்களின் ஆடியோவை வெளியிடுவதற்கு வசதியாக சங்கத்தின் சார்பில் ஆடியோ கம்பெனி ஒன்று ஏற்படுத்தப்படும். 

 

6. சங்கத்திற்கென்று, பிரத்யேகமாக OTT தளம், YOUTUBE Channel  ஏற்படுத்தப்படும். 

 

7. சங்கத்தின் சார்பில் புதிய தொலைக்காட்சி நிறுவனம் துவங்கப்படும். அனைத்து படங்களின் பாடல்கள், கிளிப்பிங்ஸ் இந்த தொலைக்காட்சியில் மட்டுமே ஒளிபரப்பப்படும். அனைத்து புதிய படங்களும் இந்த தொலைக்காட்சியில் மட்டும் ஒளிபரப்பப்பட்டு, உறுப்பினர்களுக்கு நிரந்தர வருமானம் கிடைக்க வழிவகை செய்யப்படும்.

 

8. அனைத்து உறுப்பினர்களுக்கும் மருத்துவ காப்பீடு வழங்கப்படுவதைப்போல, ஆயுள் காப்பீடும் இலவசமாக வழங்கப்படும். இதன் மூலம் ஒரு உறுப்பினர் எதிர்பாராதவிதமாக இயற்கை எய்திவிட்டால் அந்த குடும்பத்திற்கு ரூ.25 இலட்சம் முதல் 50 இலட்சம் வரை நிவாரணம் கிடைக்க வழிவகை செய்யப்படும். 

 

9. 60 வயதுக்கு மேற்பட்ட தயாரிப்பாளர்களுக்கு அவர்கள் விருப்பப்பட்டால் மாதந்தோறும் ரூ.20000 உதவித் தொகையாக வழங்கப்படும். இது எதிர்வரும்டிசம்பர் மாதம் முதல் நடைமுறைக்கு வரும். 

 

11. உறுப்பினர்களின் குழந்தைகள் படிக்க கல்வி உதவித்தொகை சங்கத்தின் சார்பில் வழங்கப்படும். +2ல் அதிக மதிப்பெண் பெறும் சங்க உறுப்பினர்களின் குழந்தைகளின் மேற்படிப்புக்கான அனைத்து செலவுகளையும் சங்கமே ஏற்றுக்கொள்ளும். 

 

12. திருமணமாகாத உறுப்பினர்களின் திருமணத்திற்கு ரூ.2 இலட்சமும் உறுப்பினர்களின் வாரிசுகளின் திருமணத்திற்கு ரூ.1 இலட்சமும் திருமண உதவித்தொகையாக வழங்கப்படும். 

 

13. மூன்றுமாதங்களுக்கு ஒரு முறை சங்க வளாகத்தில் மருத்துவ முகாம் நடத்தப்படும்.  நீரழிவு போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டு தொடர்ச்சியாக மருந்துகள் உட்கொள்ளும் உறுப்பினர்களுக்கு மாதந்தோறும் சங்கத்தின் சார்பில் இலவசமாக மருந்துகள் வழங்கப்படும். உறுப்பினர்கள் விரும்புகின்ற இடத்தில் அந்த மருந்துகள் கொள்முதல் செய்யப்படும். 

 

14. உறுப்பினர் எதிர்பாராதவிதமாக இறந்துவிட்டால் அவரது இறுதிச்சடங்கு மற்றும் செலவுகளுக்காகவும், அந்த குடும்பத்தின் தேவைகளையும் கருத்தில் கொண்டு உடனடியாக சங்கத்தின் சார்பில் ரூ 5 இலட்சம் வழங்கப்படும்.

 

15. வெளிவர இருக்கின்ற படங்களின் கேபிள் டிவி உரிமையை சங்கத்திற்கு வழங்கும் உறுப்பினர்களுக்கு ரூ. 1 இலட்சம் உரிமத் தொகை வழங்கப்படும்

 

16. உறுப்பினர்களின் பிறந்த நாள் சங்கத்தின் சார்பில் உறுப்பினரின் வீட்டில் கொண்டாடப்படும். இதற்காக ஒவ்வொரு உறுப்பினருக்கும் ரூ.10,000 மதிப்புள்ள GIFT PACK வழங்கப்படும். 

 

17. பையனூரில் அரசு ஒதுக்கியுள்ள இடத்தில்  அரசாணைக்கு  கட்டுப்பட்டு சொசைட்டியின் ஒத்துழைப்போடு, சொசைட்டி விதிகளுக்குட்பட்டு  உறுப்பினர்களுக்கு தலா 1000 சதுர அடியில் வீடு கட்டுவதற்கான பணிகள் தொடங்கப்படும். 15 சதவீத தொகை, தோராயமாக ரூ.2,25,000 நமது சங்கம் மானியமாக வழங்கும். 85 சதவீத தொகை வங்கியில் கடன் பெற்றுத் தரப்படும். மாத தவணையாக ரூ.10,000 செலுத்துவது போல், வங்கியுடன் உடன்பாடு செய்யப்படும். 

 

18. வீடுகள் நான்கு ப்ளாக்குகளாக கட்டப்படும். PHASE I, II, III, IV என்று இருக்கும். ஒவ்வொரு ப்ளாக்கிலும் 250 வீடுகள் இருக்கும். சொந்த வீடு இல்லாதவர்களுக்கு முன்னுரிமை அளித்து பணிகள் தொடங்கப்படும். 

 

19. உறுப்பினர்களின் குடும்பத்தில் அங்கம் வகிக்கும் பெண்களின் பிரசவ செலவுக்காக ரூ.50,000  முதல் ரூ. 1,00,000 வரை மருத்துவ செலவுக்காக வழங்கப்படும். இதற்காக வருட பட்ஜெட்டில் ரூ.50  லட்சம் ஒதுக்கீடு செய்யப்படும். 

 

20. சினிமா தயாரிப்பில் இருந்து ஒதுங்கியிருப்பவர்கள் மாற்று தொழில் செய்ய முன்வந்தால் அதற்காக பயிற்சியளித்து வட்டியில்லா கடன் வழங்கப்படும்.

 

21. உறுப்பினர்களின் வெளியாகாத திரைப்படங்களை வெளியிட விநியோக  குழு  அமைக்கப்படும். இந்த குழு நேரடியாக திரையரங்குகளை ஒப்பந்தம் செய்து கொடுக்கும். 

 

22. அரசாங்கத்திடம் உரிய முறையில் பேசி தகுதியுள்ள அனைத்து தயாரிப்பாளர்களுக்கும் அரசு மானியத்தை ரூ. 7 இலட்சத்தில் இருந்து உயர்த்தி ரூ.15 இலட்சம் பெற்றுத் தர நடவடிக்கை எடுக்கப்படும். 

 

23. உறுப்பினர்களின் பழைய படங்களின் பாடல்கள் மற்றும் கிளிப்பிங்ஸ் வெளியிடும் தொலைக்காட்சி நிறுவனங்களிடமிருந்து உரிய தொகை பெற்று தரப்படும்.

 

24. தயாரிப்பாளர்கள் Crowd Funding முறையில்  படம் தயாரிக்க ஊக்கம் அளிக்கப்படும்.

 

25. இலாபத்தில் பங்கு ' என்ற முறையில் நடிகர்கள், டெக்னீஷியன்கள் ஒப்பந்தம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். 

 

26. VPF முற்றிலும் ஒழிக்கப்படும். 

 

27. செய்தித்தாள் விளம்பரத்திற்கு பதிலாக online விளம்பரங்கள் ஊக்கப்படுத்தப்படும். இதற்காக தயாரிப்பாளர்கள் சங்கத்தின் சார்பில் Twitter , facebook தளங்கள் உருவாக்கப்பட்டு இலவசமாக விளம்பரம் செய்ய வழிவகை செய்யப்படும். 

 

28. திரையரங்குகளுக்கு படம் பார்க்க வரும் ரசிகர்களின் அலைபேசி எண் சேகரிக்கப்பட்டு அவர்களின் வாட்ஸ் ஆப் எண்ணிற்கு சினிமா விளம்பரங்கள், ட்ரைலர்கள், அனுப்பி வைக்கப்படும். இதற்காக தமிழகம்  முழுவதும் உள்ள திரையரங்க உரிமையாளர்களுடன் கலந்து பேசி இந்த திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்படும். இதனால் டிவி, பேப்பர் Publicity செலவு குறையும்.

 

29. டிக்கெட் முன்பதிவிற்கென்று பிரத்யேக தளம் ஒன்று உருவாக்கப்படும். ஒரு புக்கிங் செய்வதற்கு ரூ.5 மட்டும் கட்டணமாக வசூலிக்கப்படும். அனைத்து படங்களையும் இந்த site மூலமாக மட்டுமே முன்பதிவு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். 

 

30. ஒவ்வொரு நகராட்சி, மாநகராட்சியிலும் சங்கத்தின் வழிகாட்டலோடு, அரசின் ஒத்துழைப்போடு தமிழக அரசின் மினி திரையரங்குகள் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும். 

 

31. தயாரிப்பாளர்கள் எந்த ஊரில் இருந்து படம் பார்க்க விரும்பினாலும் அவருடைய அடையாள அட்டையை காட்டினால்  அவருக்கு அதிகபட்சமாக நான்கு டிக்கெட்கள்    இலவசமாக வழங்கப்படும். இதற்காக தமிழக திரையரங்க உரிமையாளர்களுடன் பேசி ஒப்பந்தம் செய்யப்படும்.