Apr 07, 2021 07:18 AM

’ப்ளூ சட்டை’ மாறன் படத்திற்கு தடை!

’ப்ளூ சட்டை’ மாறன் படத்திற்கு தடை!

முன்னணி நடிகர்கள் மற்றும் இயக்குநர்களின் படங்களை யுடியுபில் விமர்சித்து பிரபலமானவர் மாறன். இவரால் தமிழ் திரையுலகின் பலரும், அஜித், விஜய் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் பலரின் ரசிகர்களும் ஆங்கிரி பேடாக மாறியதோடு, “படங்களை விமர்சிக்கும் உன்னால் ஒரு படம் இயக்க முடியுமா?” என்று மாறனிடம் கேள்வி எழுப்பி சவால் விட்டு வர, இதோ இயக்குகிறேன், என்று மாறனும் படம் இயக்க ரெடியானார்.

 

ப்ளூ சட்டை மாறன் இயக்கிய படம் என்றால், அதில் உள்ள குறைகளை சுட்டிக்காட்டி, விமர்சிப்பதற்காக பலர் காத்திருக்கிறார்கள். எனவே, அவர் இயக்கும் படம் மொக்கையாக இருந்தாலும், அதை பார்ப்பதற்கு ஒரு பெரிய கூட்டம் காத்திருப்பதால், அந்த படத்தை தயாரித்தால் லாபம் நிச்சயம். எனவே, மாறனுக்கும் தயாரிப்பாளர் கிடைக்க, ‘ஆன்டி இண்டியன்’ என்ற தலைப்பில் தனது முதல் படத்தை மாறன் இயக்கி முடித்துள்ளார்.

 

கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குவதோடு இசையமைப்பாளராகவும் மாறன் அவதாரம் எடுத்திருக்கும் ‘ஆன்டி இண்டியன்’ படத்தை ஏப்ரல் 5 ஆம் தேதி சென்சார் குழுவினர் பார்த்தனர்.

 

ஆட்சேபகரமான வசனங்கள் அல்லது காட்சிகள் இருந்தால், அவற்றை மாற்றவோ அல்லது நீக்கவோ சொல்வது சென்சார் குழுவினரின் வழக்கம். ஆனால் 'ஆன்டி இண்டியன்' படத்தை முழுமையாக நிராகரித்து தடை செய்துள்ளனர். 

 

அடிப்படையிலேயே சர்ச்சையான கதைக்களம் கொண்ட படங்களுக்கு இப்படி நிகழ்வது வழக்கம். சமீபத்தில் மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்திய அனுராக் கஷ்யப்பின் உட்தா பஞ்சாப், தீபிகா படுகோனின் பத்மாவதி போன்ற படங்களுக்கும் இதுபோன்ற நிலை ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 

 

மதம் சார்ந்த சமகால பிரச்னைகளையும், அரசியலையும் மையப்படுத்தி அழுத்தமாகவும், நையாண்டி பாணியிலும் எடுக்கப்பட்ட இப்படத்தை பார்த்த திரையுலக பிரபலங்கள் பலர் பாராட்டி வருவதாக படக்குழுவினர் கூறி வரும் நிலையில், சென்சார் குழுவினர் தடை விதித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

இத்தடை குறித்து  தயாரிப்பாளர் 'மூன் பிக்சர்ஸ்' ஆதம் பாவா கூறுகையில் ”சென்சார் குழுவினர் அவர்களின் முடிவை சொல்லியுள்ளனர். நாங்கள் மறுதணிக்கைக்கு மேல்முறையீடு செய்யவுள்ளோம். விரைவில் இத்தடை நீங்கி 'ஆன்டி இண்டியன்' படம் திரைக்கு வரும்” என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.