Apr 15, 2021 07:13 AM

மீண்டும் ஒரு திரில்லர் படத்தில் விஜய் ஆண்டனி!

மீண்டும் ஒரு திரில்லர் படத்தில் விஜய் ஆண்டனி!

இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி ‘நான்’ என்ற சஸ்பென்ஸ் திரில்லர் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானதோடு, முதல் படத்திலேயே மிகப்பெரிய வெற்றியை கொடுத்த நாயகனாகவும் அடையாளம் காணப்பட்டார். அப்படத்தை தொடர்ந்து பல வெற்றிப் படங்களை கொடுத்து வரும் விஜய் ஆண்டனி நடிக்கும் பெரும்பாலான படங்கள் திரில்லர் ஜானர் படங்களாக இருப்பதோடு, அவை வெற்றியும் பெறுகிறது.

 

அந்த வகையில், மீண்டும் ஒரு திரில்லர் ஜானர் படத்தில் விஜய் ஆண்டனி ஒப்பந்தமாகியுள்ளார். ‘தமிழ்ப்படம்’, ‘தொடர்’ போன்ற படங்களை இயக்கிய சி.எஸ்.அமுதன் இயக்கும் இப்படத்தை இன்ஃபினிட்டி பிலிம் வெஞ்சர்ஸ் (Infiniti Film Ventures) நிறுவனம் தயாரிக்கிறது. இதே நிறுவனம் தான் விஜய் ஆண்டனியின் ’காக்கி’ மற்றும் ‘கோடியில் ஒருவன்’ ஆகிய படங்களின் வெளியீட்டு உரிமையை பெற்றுள்ளது.

 

இப்படம் குறித்து விஜய் ஆண்டனி கூறுகையில், “இன்ஃபினிட்டி பிலிம் வெஞ்சர்ஸ் நிறுவனத்துடன் மூன்றாவது முறையாக இணைவது, பெருமையாக உள்ளது. இன்ஃபினிட்டி பிலிம் வெஞ்சர்ஸ் நிறுவன தயாரிப்பாளர்கள் தரமிகுந்த, கொண்டாட்டமான படைப்புகளை தேர்ந்தெடுத்து செய்பவர்கள். கோடியில் ஒருவன் மற்றும் காக்கி படங்கள் மூலம் அது உறுதியாகியுள்ளது. இயக்குநர்  சி.எஸ்.அமுதன் என்னிடம் இக்கதையினை சொன்ன போது முற்றிலும் வாயடைத்து போனேன். தமிழ் படங்களின் குறைபாடுகளை கிண்டலடில்கும், ஸ்பூஃப் வகை படங்களிலிருந்து முற்றிலும் வேறாக ஒரு திரில்லர் கதையை அவர் படைத்திருந்தார். இப்படத்தின் வெளியீட்டுக்கு பிறகு மிகச்சிறந்த திரில்லர் இயக்குநராக அவர் கொண்டாடப்படுவார்.” என்றார்.

 

இயக்குநர் சி.எஸ்.அமுதன் படம் குறித்து கூறுகையில், “நடிகர் விஜய் ஆண்டனியின் புதிய படத்தில் இணைந்து, பணியாற்றும் செய்தியை அறிவிப்பதில் மிகவும் பெருமை கொள்கிறேன். அதிலும் மிகச் சிறந்த தயாரிப்பு நிறுவனமான இன்ஃபினிட்டி பிலிம் வெஞ்சர்ஸ் நிறுவனத்துடன் இணைவது பெரும் மகிழ்ச்சி. நகைச்சுவை படங்களிலிருந்து மாறுபட்டு இம்முறை ஒரு திரில்லர் திரைப்படத்தை இயக்கவுள்ளேன். இந்நேரத்தில் என் மீது நம்பிக்கை வைத்த நடிகர் விஜய் ஆண்டனி மற்றும் இன்ஃபினிட்டி பிலிம் வெஞ்சர்ஸ் நிறுவனத்தாருக்கு நன்றி சொல்லிக்கொள்கிறேன். இப்படத்தின் முன் தயாரிப்பு பணிகள் துவங்கியுள்ளோம். படத்தின் தலைப்பு, நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப குழுவினர் குறித்து விரைவில் அறிவிக்கப்படும்.” என்றார். 

 

இன்ஃபினிட்டி பிலிம் வெஞ்சர்ஸ் நிறுவனத்தின் கமல் போரா கூறுகையில், “விஜய் ஆண்டனி தமிழ் சினிமாவில் முக்கியமான நடிகராக,  வசூல் நாயகனாக திகழ்கிறார். அவர் படங்கள் நல்ல விமர்சனங்களை பெறுவதுடன், வசூலிலும் அசத்துகிறது. கொலைகாரன் படத்தின் பெரும் வெற்றிக்கு பிறகு கோடியில் ஒருவன், காக்கி, அக்னி சிறகுகள் என அவர் படங்களுக்கு ஏற்பட்டிருக்கும் மிகப்பெரும் எதிர்பார்ப்பே அதற்கு சாட்சி. அவர் எப்போதும் தயாரிப்பாளர்களுக்கு விருப்ப நாயகனாக இருந்து வருகிறார். அவருடன் இன்ஃபினிட்டி பிலிம் வெஞ்சர்ஸ் நிறுவனம் மூன்றாவது முறையாக இணைந்தது மிக மகிழ்ச்சி. இயக்குநர் சி.எஸ்.அமுதன் அவர்கள் தனது மாறுப்பட்ட கதை சொல்லலில், சிறந்த நகைச்சுவை படங்கள் மூலம் பெரும் கமர்ஷியல் படங்களை தந்துள்ளார். இம்முறை மாறுபட்ட களத்தில் ஒரு திரில்லர் திரைப்படத்தில் அவரை காணலாம்.” என்றார்.

 

இன்னும் தலைப்பு வைக்கப்படாத இபப்டத்தை இன்ஃபினிட்டி பிலிம் வெஞ்சர்ஸ் நிறுவனம் சார்பில் பங்கஜ் போரா மற்றும் கமல் போரா, லலிதா தனஞ்செயன், பிரதீப்.பி ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள்.