Apr 16, 2021 06:26 PM

’எம்.ஜி.ஆர் மகன்’ படத்திற்கு இயக்குநர் கொடுத்த உத்தரவாதம்!

’எம்.ஜி.ஆர் மகன்’ படத்திற்கு இயக்குநர் கொடுத்த உத்தரவாதம்!

’வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ‘ரஜினி முருகன்’, ‘சீமராஜா’ ஆகிய படங்களை தொடர்ந்து பொன்ராம் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘எம்.ஜி.ஆர் மகன்’. 

 

சசிகுமார் நாயகனாக நடித்திருக்கும் இப்படத்தில், மிருணாளினி ரவி நாயகியாக நடித்திருக்கிறார். சசிகுமாருக்கு தந்தையாக சத்யராஜ் நடிக்க, தாயாக சரண்யா பொன்வண்ணன் நடித்திருக்கிறார். சசிகுமாரின் தாய் மாமனாக சமுத்திரக்கனி நடித்திருக்கிறார். இவர்களுடன் பழ கருப்பையா, சிங்கம் புலி, நான் கடவுள் ராஜேந்திரன், ராமச்சந்திரன், நமோ நாராயணன், சூப்பர் குட் சுப்பிரமணி ஆகியோர் நடித்திருக்கிறார்கள். கவுரவ வேடத்தில் நடிகை நந்திதா சுவேதா நடித்திருக்கிறார்.

 

ஸ்கிரீன் சீன் மீடியா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படத்தின் அனைத்து பணிகளும் முடிவடைந்த நிலையில், வெளியீட்டுக்கு படம் தயாராகி வருகிறது.

 

இதற்கிடையே, ‘எம்.ஜி.ஆர் மகன்’ படக்குழுவினர் சமீபத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்து படம் பற்றி பகிர்ந்துக் கொண்டார்கள். அப்போது பேசிய இயக்குநர் பொன்ராம், ’எம்.ஜி.ஆர் மகன்’ படம் 100 சதவீத பொழுபோக்கு படமாக இருக்கும், அதற்கு நான் உத்தரவாதம், என்றார்.

 

MGR Magan Press Meet

 

தொடர்ந்து படம் குறித்து பேசிய இயக்குநர் பொன்ராம், ”ஒரு சின்ன விஷயத்துக்காக ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ளாமல் இருக்கும் தந்தையும், மகனும் எப்படி ஒன்றிணைகிறார்கள் என்பதே கதைக்கரு.

 

எம்ஜிஆர் என்று அனைவராலும் அழைக்கப்படும் கிராமத்து வைத்தியர் எம் ஜி ராமசமியாக சத்யராஜ் நடித்துள்ளார். அன்பளிப்பு ரவி எனும் சுறுசுறுப்பான கதாபாத்திரத்தில் சசிகுமார் நடித்துள்ளார். தனது தந்தையின் சிகிச்சைக்காக எம்ஜிஆரிடம் வரும் மிருணாளினி ரவி தந்தை-மகன் சண்டையில் எவ்வாறு நுழைகிறார் என்பது சுவாரசியமாக காட்டப்பட்டுள்ளது. படம் முழுவதும் அரைடவுசரில் வரும் அக்னி எனும் வித்தியாசமான கதாபாத்திரத்தில் சமுத்திரக்கனி நடித்துள்ளார்,

 

குடும்ப சென்டிமென்ட், நகைச்சுவை என அனைத்து அம்சங்கள் நிறைந்த கலவையாக மக்களை கவரும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.” என்று நம்பிக்கை தெரிவித்தார்.

 

வினோத் ரத்தினசாமி ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு பிரபல பின்னணி பாடகர் அந்தோனி தாசன் இசையமைத்திருக்கிறார். விவேக் ஹர்ஷன் படத்தொகுப்பு செய்துள்ளார். ஸ்டண்ட் சில்வா சண்டைக்காட்சிகளை வடிவமைக்க, தினேஷ், பிருந்தா, தினா ஆகியோர் நடனம் அமைத்துள்ளனர். யுகபாரதி, அந்தோனி தாசன், கடல் வேந்தன், முருகன் மந்திரம் ஆகியோர் பாடல்கள் எழுதியுள்ளனர்.