Jul 17, 2021 12:06 PM

மீண்டும் நடிப்பில் ஆர்வம் காட்டும் குஷ்பு! - அரசியலுக்கு ஓய்வா?

மீண்டும் நடிப்பில் ஆர்வம் காட்டும் குஷ்பு! - அரசியலுக்கு ஓய்வா?

தமிழ் சினிமாவில் முன்னணி நாயகியாக வலம் வந்த குஷ்பு, ரஜ்னிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட பல முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். தமிழ் மட்டும் இன்றி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி திரைப்படங்களிலும் நடித்திருக்கும் குஷ்பு, திருமணத்திற்குப் பிறகும் தொடர்ந்து நடித்து வந்தார்.

 

இரண்டு பெண் குழந்தைகளைப் பெற்ற நடிகை குஷ்பு, திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்ததோடு, தொலைக்காட்சி தொடர்களை தயாரித்து அதில் நடிக்கவும் செய்தார்.

 

இப்படி சினிமா மற்றும் சீரியல் இரண்டிலும் தயாரிப்பாளராகவும், நடிகையாகவும் வலம் வந்த குஷ்பு, அரசியலில் ஈடுபட தொடங்கினார். திமுக-வில் இணைந்து கட்சி பணியாற்றிய அவர், பிறகு அக்கட்சியில் இருந்து விலகி காங்கிரஸில் இணைந்தார். மீண்டும் கட்சி தாவியவர், தற்போது பா.ஜ.க-வில் இணைந்துள்ளார்.

 

நடந்த முடிந்த தமிழக சட்டசபை தேர்தலில் பா.ஜ.க சார்பில் சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்ட நடிகை குஷ்பு, பா.ஜ.க-வின் முக்கியமான பலமாக கருதப்பட்டதோடு, தனது மொத்த திறமையையும் தேர்தல் களத்தில் இறக்கினார். ஆனால், அவருடைய திறமை அனைத்தும் புஸ்பானமாகி போனது போல் நடிகை குஷ்பு, தேர்தலில் படுதோல்வியடைந்தார்.

 

தேர்தலுக்கு முன் பா.ஜ.க-வின் பீரங்கியாக இருந்த குஷ்பு, தற்போது ஆள் அட்ரஸ் இல்லாமல் போன நிலை உருவாகியிருக்கிறது. பா.ஜ.க-வின் எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் குஷ்பு இல்லாமல் இருக்க மாட்டார் என்ற நிலை தேர்தலுக்கு முன்பு இருந்தது. ஆனால், தற்போது குஷ்பு இல்லாமல் தான் அனைத்து பா.ஜ.க நிகழ்ச்சிகளும் நடைபெறுகிறது.

 

மொத்தத்தில், தேர்தலுக்கு முன் குஷ்பு, தேர்தலுக்கு பிறகு குஷ்பு, என்று பிரித்துப் பார்க்கும் அளவுக்கு குஷ்புவின் அரசியல் வாழ்க்கை படு மோசமாகியுள்ளது. அவரை பா.ஜ.க-வினர் ஒதுக்கி வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

 

இந்த நிலையில், அரசியல் ஆட்டத்தை நிறுத்திய குஷ்பு, தற்போது மீண்டும் நடிப்பு ஆட்டத்தை தொடங்க திட்டமிட்டிருக்கிறாராம். தனக்கு வாழ்க்கை கொடுத்த நடிப்பு மீது மீண்டும் ஆர்வம் காட்ட முடிவு செய்திருப்பவர், பிரம்மாண்டமான தொலைக்காட்சி தொடர் ஒன்றை தொடங்கி, அதன் தானே கதையின் நாயகியாகவும் நடிக்க திட்டமிட்டுள்ளாராம்.

 

தற்போது அதற்கான வேலைகளில் ஈடுபட்டுள்ள குஷ்பு, விரைவில் அந்த தொலைக்காட்சி தொடரின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட இருப்பதாக கூறப்படுகிறது.