Oct 11, 2021 09:16 PM

பிரபுதேவா, லாரன்ஸ் இடத்தை பிடிக்கும் முயற்சியில் நடன இயக்குநர் சாண்டி!

பிரபுதேவா, லாரன்ஸ் இடத்தை பிடிக்கும் முயற்சியில் நடன இயக்குநர் சாண்டி!

தொலைக்காட்சி நடன நிகழ்ச்சி மூலம் நடன இயக்குநராக பிரபலமான சாண்டி, சினிமா உலகில் முன்னணி நடன இயக்குநராக முன்னேறிய நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தன்னுள் இருக்கும் நடிகரையும் வெளிப்படுத்தினார். அவரது நகைச்சுவை கலந்த பேச்சு மற்றும் உடல்மொழி பலரை கவர, தற்போது சாண்டிக்கு என்று தனி ரசிகர்கள் வட்டமே உருவாகியுள்ளது.

 

இதனால், சாண்டிக்கு தற்போது நடன இயக்குநராக பணியாற்றும் வாய்ப்புகளைப் போல், நாயகனாக நடிக்கும் வாய்ப்புகளும் குவிந்துக் கொண்டிருக்கிறதாம். ஆனால், கிடைத்த வாய்ப்புகளில் எல்லாம் நடித்து விடாமல், புதிதாக செய்ய வேண்டும், என்ற எண்ணத்தில், கதை தேர்வில் கவனம் செலுத்தி வரும் சாண்டி, ’3.33’ என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகிறார்.

 

பேம்பூ ட்ரீஸ் (Bamboo Trees) புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் சார்பில் டி.ஜீவிதா கிஷோர் தயாரித்திருக்கும் இப்படத்தை நம்பிக்கை சந்துரு எழுதி இயக்கியுள்ளார்.

 

காலத்தின் ஒரு குறிப்பிட்ட நேரத்தை, மையமாக கொண்டு வித்தியாசமான கதை களத்தில், பாடல்கள் இல்லாத, புதுமையான ஹாரர் திரில்லர் திரைப்படமான இப்படத்தில் சாண்டி முதன்மை கதாப்பாத்திரத்தில் நடிக்க, இயக்குநர் கெளதம் மேனன் வித்தியாசமான வேடம் ஒன்றில் நடித்துள்ளார்.

 

3.33 வரும் அக்டோபர் 21 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், படக்குழுவினர் நேற்று பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர்.  

 

3.33

 

பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய சாண்டி, “3:33  நாயகனாக எனது முதல் படம் இது. பிக் பாஸிலிருந்து வெளியே வந்த பிறகு நிறைய கதை கேட்டேன், ஏதாவது சீரியஸாக பண்ணலாமே என யோசித்துக் கொண்டிருந்த போது, சந்துரு கதை சொல்கிறேன் என்றார். அவர் கதை சொல்லும் போது, அந்த இடத்தையே ரணகளமாக்கி, நடித்து, கதை சொன்னார். இந்தக் கதைக்கு நான் தாங்குவேனா என நினைத்தேன். ஆனால் நான் தான் வேணும் என்றார் சந்துரு. இந்தப்படத்தின் உண்மையான நாயகன் சந்துரு தான். இந்தப்படத்தில் சூப்பராக வேலை வாங்கினார். அவர் நடித்து காட்டியதில் 50 சதவீதம் தான் நான் செய்துள்ளேன். அவருக்குள் ஒரு நடிகரும் இருக்கிறார். நான் நடிக்கிறேன் என சொல்லும் போது, நிறைய பேர் வேண்டாம் என்றார்கள். நீங்கள் கோரியோகிராபி மட்டும் செய்யுங்கள் என்றார்கள். ஆனால் எனக்கு பிரபு மாஸ்டர், லாரன்ஸ் மாஸ்டர் போல் வர வேண்டும் என்பது தான் ஆசை. படம் ஒரு வீட்டிற்குள்ளேயே வைத்து அருமையாக எடுத்து விட்டார்கள். தயாரிப்பாளருக்கு இப்படம் பெரிய லாபத்தை சம்பாதித்து தரும். இசையமைப்பாளர் ஹர்ஷவர்தன் ரமேஷ்வர் மிக அற்புதமாக இசையமைத்துள்ளார்.” என்றார்.

 

இயக்குநர் நம்பிக்கை சந்துரு பேசுகையில், “என் வாழ்க்கையில் இயக்குநராக நிறைய முயற்சி செய்தேன். மூன்று படங்கள் அடுத்தடுத்து டிராப் ஆனது. என் குடும்பம் தான் என் மீது நம்பிக்கை வைத்து, இந்தப்படத்தை எடுக்கலாம் என்றார்கள். சொந்த முயற்சி எனும் போது, யாரை வைத்து செய்யலாம் என யோசித்த போது, சாண்டி மாஸ்டர் ஞாபகம் வந்தது. அவரிடம் தயங்கி தான் போனேன். ஆனால் கட்டியணைத்து கதை கேட்டு பாராட்டினார். இசையமைப்பாளரிடம் இது என் வாழ்க்கை என்னிடம் இப்போது பணம் இல்லை உதவுங்கள் என்றேன். கதை கேட்டு என்னை பாராட்டி அருமையான இசையை தந்தார். ஒளிப்பதிவாளர் மீது முதலில் நம்பிக்கை இல்லை. ஆனால் அவர் வைத்த முதல் ஷாட்டிலேயே பிரமித்து விட்டேன். கௌதம் சார் இப்படத்தில் வந்தது ஒரு ஆக்ஸிடெண்ட் தான். பாராநார்மல் இன்வெஸ்டிகேட்டராக வருகிறார். அந்த கேரக்டருக்கு மிக பெரிய ஆள் வேண்டும் என்று நினைத்தோம், கௌதம் சாரை அணுகி கதை சொன்னோம். அவர் உடனடியாக நடிக்க ஒப்புக்கொண்டார், அவரை இயக்கும் போது பயமாக தான் இருந்தது. ஆனால் ஒரு பெரிய இயக்குநர் போல் அவர் எந்த பந்தாவும் இல்லாமல் நடித்து தந்தார். இந்தப் படம் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் படமாக இருக்கும்.” என்றார். 

 

தயாரிப்பாளர் டி.ஜீவிதா கிஷோர் பேசுகையில், ”சாண்டி அண்ணாவிடம் நீங்கள் எதிர்பார்த்தது இதில் இருக்காது, முற்றிலும் மாறுபட்ட வேடத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் அனைவருமே கடுமையாக உழைத்துள்ளார்கள், கௌதம் மேனன் சார் மிகப்பெரும் ஒத்துழைப்பு தந்தார்.” என்றார்.