Oct 20, 2021 06:00 AM

பிரியா பவானி சங்கருடனான நட்பு...! - மனம் திறந்த நடிகர் ஹரிஷ் கல்யாண்

பிரியா பவானி சங்கருடனான நட்பு...! - மனம் திறந்த நடிகர் ஹரிஷ் கல்யாண்

ஹரிஷ் கல்யான் மற்றும் பிரியா பவானி சங்கர் ஜோடியாக நடிக்கும் படம் ‘ஓ மணப்பெண்ணே’. தெலுங்கில் மிகப்பெரிய வெற்றி பெற்ற ‘பெல்லி சூப்புலு’ படத்தின் தமிழ் ரீமேக்கான இப்படத்தை ஏ ஸ்டுடியோஸ் சார்பில் கொனேரு சத்யநாராயணா, ரமேஷ் வர்மா பென்மட்ஷா மற்றும் ஏ ஹவிஸ் பிக்சர்ஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளனர்.

 

ரொமாண்டிக் காமெடி திரைப்படமான இப்படத்தை கார்த்திக் சுந்தர் இயக்கியுள்ளார். மிக விரைவில் டிஸ்னி ஹாட்ஸ்டார் ஒடிடி தளத்தில் நேரடியாக வெளியாக உள்ள இப்படத்தின் பத்திரிகையாலர் சந்திப்பு சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது.

 

பத்திரிகையாளர்களிடம் படம் குறித்து பேசிய நடிகர் ஹரிஷ் கல்யாண், தனக்கும் நடிகை பிரியா பவானி சங்கருக்கும் இடையே இருக்கும் நட்பு குறித்து மனம் திறந்து பேசினார்.

 

நிகழ்ச்சியில் பேசிய ஹரிஷ் கல்யாண், “கசடதபற பார்த்து பாராட்டிய அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி. பெல்லி சூப்புலு படம் பார்த்தபோது இந்த மாதிரி படம் செய்தால் நால்லாருக்குமே என நினைத்தேன், அப்போது என்னை வைத்து படம்  செய்ய ஆள் இல்லை. பிக்பாஸ் போய் விட்டு வந்த பிறகு இந்தப்பட வாய்ப்பு வந்தது. மீண்டும் கை நழுவி,  மீண்டும் வந்தது. இதில் ஏதோ ஸ்பெஷ்ல் இருக்கிறது, அதனால் தான் நம்மை தேடி வருகிறது என தோன்றியது. இயக்குநரும் நானும் நெடுநாள் நண்பர்கள். முன்பே படம் செய்ய வேண்டும் என பேசியுள்ளோம், இப்போது அவருடன் படம் செய்தது மகிழ்ச்சி. இப்படத்தில் அனைத்து கதாப்பாத்திரங்களுமே நீங்கள் எளிதில் உணர்ந்துகொள்ளக்கூடிய பாத்திரங்களாக இருக்கும். டிஸ்னி மாதிரி ஓடிடியில் வருவதால் அனைவரையும் பெரிய அளவில் சென்று சேரும் என நம்புகிறோம். இந்தப்படத்தில் ”போதை கனவே...” பாடல் எனக்கும் பிடிக்கும். இசை அருமையாக இருந்தது. 18 படங்கள் நடிக்கும் பிஸியான நேரத்திலும், எங்கள் படத்திற்கு வந்து, நடித்து கொடுத்த ப்ரியா பவானி சங்கருக்கு நன்றி. மிக சிறந்த ஒத்துழைப்பு தந்து நடித்து கொடுத்தார். அவருடன் மிகச்சிறந்த நட்பு உள்ளது. எல்லோருமே கடுமையாக உழைத்து, இந்தப்படத்தை உருவாக்கியுள்ளோம். உங்கள் அனைவருக்கும் படம்  பிடிக்கும்.” என்றார்.

 

நடிகை பிரியா பவானி சங்கர் பேசுகையில், “ஒரு படத்தை சந்தோஷமாக திருப்தியாக செய்தாலே, அது நல்ல படமாக வந்து விடும். அந்த வகையில் இந்தப்படம் அனைவருக்கும் திருப்தி தந்த படம். இன்னும் நான்கு நாட்களில் படம் உங்கள் பார்வைக்கு வந்து விடும். இயக்குநர் கார்த்தியின் முதல் படத்தில் பங்குகொண்டதில் மகிழ்ச்சி. இப்படத்தில் அனைவருமே சிறப்பாக செய்துள்ளார்கள். ஹரீஷ் மிகச்சிறந்த ஒத்துழைப்பு தந்தார். இந்தப்படத்தில் என் பாத்திரம் நீங்கள் எளிதில்  உணரக்கூடிய கேரக்டர். இந்த கேரக்டர்  செய்ததில் நிறைய மகிழ்ச்சி. மற்ற படங்களில் ஹீரோவுக்கு ஜோடியாக தான் பாத்திரம் இருக்கும், ஆனால் இப்படத்தை தைரியமாக என் படம் என சொல்வேன். அந்தளவு என் கதாப்பாத்திரம் அழுத்தமாக இருக்கும். இப்படம் அனைவருக்கும் பிடிக்கும்.” என்றார்.

 

இயக்குநர் கார்த்திக் சுந்தர் பேசுகையில், “’பெல்லி சூப்புலு’ ரொம்ப ஸ்பெஷலான படம், அதை ரீமேக் செய்கிறோம் என்ற போதே பெரிய பொறுப்பு வந்து விட்டது. ’பெல்லி சூப்புலு’ படத்திலேயே நிறைய உணர்வுபூர்வமான தருணங்கள் இருக்கிறது, அதை கெடுத்து விடாமல், தமிழுக்கு ஏற்ற சின்ன சின்ன மாற்றங்கள் மட்டுமே செய்திருக்கிறோம். ப்ரியா,  ஹரீஷ் போன்ற சிறந்த நடிகர்கள் வந்த பிறகு படத்திற்கு பெரும் பலம் வந்து விட்டது. புதிதாக நான் எதுவும் செய்ய  தேவையிருக்கவில்லை. படத்தை அனைவரும் இணைந்து சிறப்பாக செய்துள்ளோம், பாருங்கள் பிடிக்கும்.” என்றார்.

 

O Manappenne

 

தயாரிப்பாளர் பாலாஜி கப்பா பேசுகையில், “இயக்குநர் கார்த்தி தன் உயிரை கொடுத்து இந்த படத்தில் உழைத்திருக்கிறார். ஹரீஷ் மற்றும் பவானி ஆகியோரின் அர்ப்பணிப்பு அபாரமாக இருந்தது. அவர்கள் மாதிரி ஆர்டிஸ்ட் இருந்தால் எந்த ஒரு தயாரிப்பாளரும் கவலைப்பட தேவையில்லை. விஷால் நேரம் எடுத்து கொண்டாலும் அவர் தந்த பாடல்கள் அருமையாக இருந்தது. இது தனி ஒருவரின் உழைப்பு அல்ல. இப்படம் இந்த மொத்த குழுவினராலும் தான் உருவானது. இந்த டீமோடு மீண்டும் வேலை செய்ய ஆசை. ஹரீஷை வைத்து மீண்டும் ஒரு புராஜக்ட் விரைவில் அறிவிப்போம்.” என்றார்.

 

யாரிப்பாளர் தேவா பேசுகையில், “ஹரீஷ் எனக்கு நெருங்கிய நண்பர். அவருடன் படம் செய்வது, மிக ஈஸியாக இருக்கும்.  அவருடன் மீண்டும், மீண்டும் படம் செய்ய ஆசை. இன்னும்  நிறைய படங்கள் இணைந்து செய்வோம்.” என்றார்.

 

இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர் பேசுகையில், “இந்தப்படத்தில் வேலை செய்தது மிக சந்தோஷமாக இருந்தது. இயக்குநர் கார்த்திக் உடன் வேலை பார்த்தது, மிக மகிழ்ச்சியான அனுபவமாக இருந்தது. ஒவ்வொரு பாடலும் கேட்டவுடனே அவருக்கு பிடித்து விடும். அனைத்து பாடலுமே சூப்பர் ஹிட்டாகும் என்று தான் இசையமைக்கிறோம், ஆனால் போதை கனவே பாடல் எனக்கே மிகவும் பிடித்திருந்தது. அனிருத் அதை வித்தியாசமாக பாடியிருந்தார். ரசிகர்களுக்கும் பாடல்கள்  பிடிக்கும்.” என்றார்.