Feb 06, 2018 02:45 PM

’மதம்’ படத்திற்காக 80 வயசு பாட்டியை ஹீரோயினாக்கிய அறிமுக இயக்குநர்!

’மதம்’ படத்திற்காக 80 வயசு பாட்டியை ஹீரோயினாக்கிய அறிமுக இயக்குநர்!

கதையே இல்லை என்றாலும், அஜித், விஜய் போன்ற முன்னணி ஹீரோக்களின் தேதிகளை மட்டுமே நம்பி படம் எடுக்கும் இயக்குநர்களுக்கு மத்தியில் கதை தான் ஹீரோ, என்ற நம்பிக்கையோடு படம் எடுத்து வெற்றி பெரும் இயக்குநர்கள் கோடம்பாக்கத்திற்குள் நுழைந்துக் கொண்டுதான் இருக்கிறார். அந்த வரிசையில் கோடம்பாக்கத்தில் எண்ட்ரியாகியிருக்கும் அறிமுக இயக்குநர் ரஜ்னி, 80 வயசு பாட்டியை ஹீரோயினாக நடிக்க வைத்திருக்கிறார்.

 

‘மதம்’ என்றதும் ஏதோ சர்ச்சையான விஷயத்தை கையில் எடுத்திருப்பாரோ, என்று நினைத்தால், அதெல்லாம் கிடையாதுங்க, யானைக்கு மதம் பிடிக்குமே அந்த மதம் தான் இது. கேங்ஸ்டார் கதையை குடும்ப பின்னணியில் சொல்லியிருக்கிறேன், கதை தூத்துக்குடியில் நடக்கிறது, ஆனால் தூத்துக்குடிக்கும் இந்த கதைக்கும் எந்தவித சம்மந்தமும் இல்லை, தூத்துக்குடியில் இருக்கும் லொக்கேஷன்கள் கதைக்கு தேவைப்பட்டதால் அங்கே படப்பிடிப்பை நடத்தினோம். அதே சமயம், தூத்துக்குடியில் இதுவரை யாரும் படப்பிடிப்பு நடத்தாத இடங்களில் ஷூட்டிங் நடத்தியிருக்கிறோம், என்றார்.

 

முழுக்க முழுக்க புதுமுகங்களை மட்டுமே நடிக்க வைத்திருக்கும் இயக்குநர் ரஜ்னி, 1000 பேரை ஆடிஷன் செய்து அதில் 100 பேரை தேர்வு செய்து நடிக்க வைத்திருக்கிறாராம். இவர்கள் அனைவரும் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த பொது மக்களாம். யாருக்கெல்லாம் நடிக்க ஆர்வம் இருக்கிறதோ, அவர்களையெல்லாம் நடிக்க வைத்திருக்கிறாராம். அதில் ஒருவர் தான் பீவி என்ற 80 வயது பாட்டி. கிளிஷரின் இல்லாமலேயே அழும் அந்த பாட்டி, முன்னணி ஹீரோயின்களை தூக்கி சாப்பிடும் அளவுக்கு நடித்திருக்கிறாராம். இப்படி, படத்தில் நடித்த நடிகர்களின் நடிப்பு படத்திற்கு பெரிய பலமாக இருக்குமாம்.

 

‘அருவி’, ‘அறம்’ போன்ற படங்களின் வரிசையில் பேசப்படும் விதத்தில் ’மதம்’ படத்தை இயக்கியிருக்கும் ரஜ்னி, தனது அடுத்தடுத்த படத்திலும் புதுமுகங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதோடு, ரெகுலர் சினிமா அல்லாமல், புதிய முயற்சியில் ஈடுபடுவேன், என்றவர், அனுபவமுள்ள நடிகர்கள் நடித்தால், அந்த கதாபாத்திரம் பற்றி படத்தை அல்ல, போஸ்டரை பார்த்தாலே ரசிகர்கள் கனித்துவிடுவார்கள், புதுமுகங்கள் என்றால், அவர்கள் என்ன செய்ய போகிறார்கள், அவர்களது கதாபாத்திரம் எப்படி இருக்கும், என்ற எதிர்ப்பார்ப்பு படம் முழுவதும் இருக்கும், என்று புதுமுகங்களை நடிக்க வைத்ததற்கான காரணத்தை சொன்னார்.